Wednesday, February 20, 2013

சொந்த வீட்டை விற்று கடன் கொடுத்தவர் ராஜேஷ்

1968 இல் 15 ரூபாவுடன் சென்னைக்கு வந்தவர்
எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும், அவர்கள் வாழ்க்கையில் எதிர்பாராத சோதனைகள் ஏற்படுவது உண்டு. அத்தகைய சோதனையால் நடிகர் ராஜேஷ் சொந்தமாகக் கட்டிய வீட்டை விற்று கடனை அடைத்தார்.
1984 ஆம் ஆண்டு வெளியான ‘சிம்ம சொப்பனம்’, ‘எழுதாத சட்டங்கள்’, 1986 ஆம் ஆண்டு வெளியான ‘மண்ணுக்குள் வைரம்’ ஆகிய படங்களில் சிவாஜிகணேசனுடன் ராஜேஷ் நடித்தார்.
இதுபற்றி ராஜேஷ் கூறியதாவது :-
‘சிவாஜிக்கு எங்கள் ஊருக்கு பக்கத்து ஊர்தான். அவர்கள் குடும்பத்திற்கும், எங்கள் குடும்பத்திற்கும் 60 ஆண்டு பழக்கம் இருந்து வந்தது. 1985க்குப் பிறகு அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது.
சிவாஜி என்னிடம் பேசும்போது, ‘நான் நாடக மேடையில் இருந்து திரைப்படத்திற்கு வந்தவன். ஆனால் நீ நேரடியாக சினிமாவுக்கு வந்திருக்கிறாய். உனக்கும், எனக்கும் வித்தியாசம் உண்டு’ என்பார். அவர் மாபெரும் கலைஞர்.
ஒருமுறை, ‘உங்கள் படத்தைப் பார்த்துத்தான் நடிக்க கற்றுக் கொண்டேன்’ என்று கூறி, அவர் நடித்த பல படங்கள் பற்றி விரிவாகக் கூறினேன். அதற்கு அவர், ‘இவ்வளவு படங்களைப் பார்த்துவிட்டு எப்படி பாடம் படித்தாய்?’ என்று சிரித்தபடி கூறினார்.
ஒரு நாள் காக்கி சட்டை, பேண்ட் அணிந்து கொண்டு சிவாஜியைப் பார்க்க சென்றேன். அவர் என்னைப் பார்த்ததும், ‘என்ன? என்னைப் போல உடை அணிந்து இருக்கிறாயே’ என்றர். அதுபற்றி கேட்டேன்,
‘உங்கள் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதுங்கள். எல்லோருக்கும் பயன்படும்’ என்று கூறினேன். அதன் பிறகுதான் தன் வாழ்க்கை வரலாற்றை எழுத ஏற்பாடு செய்தார்.’
இவ்வாறு ராஜேஷ் கூறினார்.
அதன் பின்னர் ‘சத்யா’, ‘மகாநதி’ முதலான படங்களில் கமல்ஹாசனுடனும், ‘மக்கள் என் பக்கம்’, ‘வாத்தியார் வீட்டுப் பிள்ளை’ போன்ற படங்களில் சத்யராஜுடனும் ராஜேஷ் நடித்தார்.
திரைப்படங்களில் நடித்து வந்த ராஜேஷ் 1988 ஆம் ஆண்டு தேர்தலில் எம். ஜி. ஆரின் மனைவி ஜானகியின் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். எம். ஜி. ஆரிடம் வைத்து இருந்த அன்பின் காரணமாக அவர் மனைவிக்காக பிரசாரம் செய்தார்.
இதுபற்றி ராஜேஷ் கூறியதாவது :-
‘எம். ஜி. ஆரை சிறு வயது முதலே மாபெரும் சக்தியாகக் கண்டேன் நான் முதன் முதலாக என் திருமண பத்திரிகையை கொடுப்பதற்காக எம். ஜி. ஆரை சந்தித்தேன். காளிமுத்துதான், என்னை எம். ஜி. ஆரிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார்.
எனது திருமணத்திற்கு எம். ஜி. ஆர். வரவில்லை. அதன் பிறகு, 1987 ஆம் ஆண்டு எனது தங்கை திருமணத்திற்கு, எம். ஜி. ஆர். வந்தார். அப்போது நான் எம். ஜி. ஆரிடம் நடிகர் விஜயகாந்தை அறிமுகப்படுத்தி வைத்தேன்.
எனது வீட்டை திறந்து வைத்ததும், எம். ஜி. ஆர்தான். ஒரு முறை, ‘கடவுள் வாழ்த்துப் பாடும்’ என்ற பாடலில் கத்தியை அவர் லாவகமாக பிடித்த ஸ்டைலை பற்றி நான் குறிப்பிட்ட போது அவர் கண்கலங்கிவிட்டார். நான் எம். ஜி. ஆர். சிவாஜி, எம். ஆர். ராதா ஆகியோரை ரசித்தேன் அவர்கள் 3 பேரும் என் நடிப்புக்குள்ளும், என் வாழ்க்கைக்குள்ளும் இருப்பார்கள்.’
இவ்வாறு ராஜேஷ் கூறினார்.
1985 ஆம் ஆண்டு ராஜேஷ் சொந்தமாக சென்னையில் ஒரு வீட்டை கட்டினார். கிரகப்பிரவேசத்துக்கு அப்போது முதல் அமைச்சராக இருந்த எம். ஜி. ஆர். வந்திருந்து, குத்துவிளக்கேற்றி வீட்டை திறந்து வைத்தார்.
வீட்டை சிறப்பாக கட்டி முடித்த ராஜேஷ், அந்த வீட்டில் ஒரு நாள் இரவுதான் தங்கினார். 6 ஆண்டுகளில் கடன் பிரச்சினை காரணமாக வீட்டை விற்றுவிட்டார்.
இதுபற்றி ராஜேஷ் கூறியதாவது :-
‘1968 ஆம் ஆண்டு நான் சென்னைக்கு வந்தபோது, என் பெற்றோரிடம் ரூ. 15 மட்டும் வாங்கி வந்தேன். சென்னையில் சித்தி வீட்டில் தங்கி அவர்களிடம் கடன் வாங்கிப் படித்தேன். 2 ஆண்டுகளுக்கான படிப்பு செலவு 850 ரூபாவை திருப்பிக் கொடுத்தேன்.
1985 ஆம் ஆண்டு வங்கியில் கடன் வாங்கியும், சிலரிடம் கைமாற்றாகப் பணம் வாங்கியும் வீடு கட்டத் தொடங்கினேன். அந்த நேரத்தில் எனக்கு பட வாய்ப்பும் குறையத் தொடங்கியது. எனது புது வீட்டில் நான் ஒருநாள் மட்டுமே தங்கினேன். அந்த வீட்டில் குடியேறாமல், தொடர்ந்து வாடகை வீட்டிலேயே தான் இருந்தேன்.
நான் புதிதாக கட்டிய வீட்டில் பல திரைப்பட படப்பிடிப்புகள் நடந்து வந்தன. முதலில் ‘மக்கள் என் பக்கம்’ படத்தின் படப்பிடிப்பு நடந்தது. நடிகர் பாலாஜிதான் முதல் ஷ¥ட்டிங்கை ஆரம்பித்து வைத்தார்.
இந்த வீட்டில் நடந்த படப்பிடிப்புக்களில் சிவாஜி, ரஜினி, ரிஷிகபூர், அம்ஜத்கான் என அனைத்து மொழி நடிகர்களும் நடித்து உள்ளனர். மாதம் 20 நாட்கள் வரை படப்பிடிப்பு நடக்கும்.
பிறகு ஒரு கட்டடத்தில், படப்பிடிப்பும் குறையத் தொடங்கியது. கடன் பிரச்சினையும் இருந்து வந்தது. அதனால் 6 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டை விற்று விட்டேன். அந்த பணத்தைக் கொண்டு வங்கிக் கடனையும் சிலரிடம் கைமாற்றாக வாங்கிய கடனையும் அடைத்தேன். 1992 ஆம் ஆண்டு கடன்களைஅடைத்து முடித்தேன். இவ்வாறு ராஜேஷ் கூறினார்.

No comments:

Post a Comment