கம்பீரமும் தெளிவான குரலும் கொண்டவர் மேஜர் சுந்தரராஜன்
கம்பீரமான தந்தை வேடத்துக்கு பெருமையைச் சேர்த்தவர் நடிகர் மேஜர் சுந்தரராஜன். மேஜர் சுந்தரராஜனின் சொந்த ஊர் மதுரை அருகேயுள்ள பெரியகுளம். பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே நாடகங்களில் நடிக்கலானார்.தனது குரல் வளத்தையும், நடிப்பாற்றலையும் ஒருசேர பயன்படுத்தி மொனோ அக்டிங்கில் திறமையை வெளிப்படுத்தினார். பிறகு வேலை தேடி சென்னைக்கு வந்த மேஜர் சுந்தரராஜனுக்கு நாடகங்களில் நடிக்கும் வாய்ப்புக்கிட்டியது. நாவலாசிரியர் அகிலன் எழுதிய ‘நெஞ்சின் அலைகள்’ நாடகத்தல் முக்கியய வேடத்தில் நடித்தார்.
இந்த நாடகத்தை பிரபல டைரக்டர் எல். வி. பிரசாத் பார்த்துவிட்டு பாராட்டு தெரிவித்தார். அவர் மூலம் சினிமாவில் நுழைய வாய்ப்பு வரும் என்ற மகிழ்ச்சியுடன் இருந்தார் சுந்தரராஜன். ஆனால் வாய்ப்பு வரவில்லை. பின்னர் ‘வைஜயந்திமாலா’ என்ற படத்தில் நடிக்கும் ‘சான்ஸ்’ கிடைத்தது. அவரது துரதிருஷ்டமோ என்னவோ படம் வெளிவரவில்லை.
1962ல் சுந்தரராஜன் சினிமாவில் அறிமுகமானார். ‘பட்டினத்தார்’ படம்தான் அவரது முதல் படமாகும். டைரக்டர் கே. சோமு இயக்கிய இந்தப் படத்தில் மேஜர் சுந்தரராஜனுக்கு சோழமன்னன் வேடம் கிடைத்தது. கதாநாயகன் பாடகர் டி. எம். செளந்தரராஜன். பிறகு கொஞ்ச காலம் ‘சான்ஸ்’ வரவில்லை. சில செய்திப் படங்களுக்குக் குரல் கொடுத்தார்.
டைரக்டர் கே. பாலசந்தரின் நாடகங்களில் நடித்தார். சினிமாவில் சிறு சிறு வேடங்களில் தோன்றினாலும், நாடக நடிப்பின் மூலமே புகழ்ப் பெற்றார். கே. பாலசந்தரின் ‘மேஜர் சந்திரகாந்த்’ நாடகம் சுந்தரராஜனுக்குப் பெரும் புகழை தேடிக் கொடுத்தது.
அவருக்கு கிடைத்த இந்த வேடப்பொருத்தம் பேசும் திறன், நடிப்பு ஆகியவை, திரை உலகினிரிடையே அவரைப்பற்றி பேச வைத்தது.
1965ல் கே. பாலசந்தர் டைரஷனில் ‘நாணல்’ என்ற படத்தில் மேஜர் சுந்தரராஜன் முக்கிய வேடத்தில் நடித்தார்.
கதாநாயகி கே. ஆர். விஜயா. சரவணா பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் நன்றாக ஓடியது. ‘மேஜர் சந்திரகாந்த்’ நாடகத்தை ஏ.வி.எம். நிறுவனத்தினர் சினிமா படமாகத் தயாரித்தனர். கே. பாலசந்தர் டைரக்ட் செய்ய, மேஜர் சுந்தரராஜன், ஜெயலலிதா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்கள். இந்தப்படம் 1966ல் வெளிவந்தது.
இந்தப் படத்துக்குப்பின் ‘மேஜர் சுந்தராஜன்’ என்று அழைக்கப்பட்டார். ஸ்ரீதர் தயாரித்து டைரக்ட் செய்த வெண்ணிற ஆடை படத்தில் ஜெயலலிதா அறிமுகமானார். அவருடைய தந்தை வேடம் மேஜர் சுந்தரராஜனுக்கு கொடுக்கப்பட்டது. சிறப்பாக நடித்து மேலும் புகழ்பெற்றார். தொடர்ந்து ‘தெய்வச் செயல்’, குழந்தைக்காக உட்பட சில படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தின் மூலம் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்தார். இதனைத் தொடர்ந்து நிஜ வாழ்க்கையிலும் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டார்கள். உயர்ந்த மனிதன், தெய்வமகன், ஞான ஒளி, கெளரவம் போன்றவை இருவரும் சேர்ந்து நடித்த மிகப்பெரும் வெற்றிப்படங்களாகும். எம். ஜி. ஆர். நடித்த படங்களில் மேஜர் சுந்தரராஜன் வில்லன், குணச்சித்திர வேடங்களில் தோன்றினார்.
‘நம் நாடு’ ‘ரிக்ஷாக்காரன்’ போன்றவை முக்கிய படங்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்று சகல நடிகர்களுடனும் நடித்தவர் மேஜர் சுந்தரராஜன். மொத்தத்தில் மேஜர் சுந்தரராஜன் 900 படங்கள் நடித்துள்ளார்.
இவற்றில் சிவாஜியுடன் சேர்ந்து நடித்தது மட்டும் 200 படங்களுக்கு மேல் மேஜர் சுந்தரராஜன் படங்களில் நடித்ததுடன் ‘கல் தூண்’ “ஊரும் உறவும்” நெஞ்சங்கள், இன்று நீ நாளை நான், அந்த ஒரு நிமிடம் ஆகிய சினிமா படங்களை டைரக்ட் செய்தார். சில தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்தார். இருதய நோயினால் அவதிப்பட்ட மேஜர் சுந்தரராஜன் வடபழனியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
பிறகு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்.
28-02-2003 அன்று திடீரென்று மரணம் அடைந்தார். நாடகம் ஆனாலும் சரி, சினிமா ஆனாலும் சரி அவரது புகழுக்கு முக்கிய காரணமாக இருந்தவை அவருடைய கம்பீரத் தோற்றமும் தெளிவான குரலும்தான். மேஜர் சுந்தரராஜளின் மனைவி பெயர் சியாமளா. கெளதம் என்ற ஒரே மகன் மட்டும்தான் உள்ளார்.
குணச்சித்திர நடிகர் எஸ்.வி. சுப்பையா தயாரித்த படம் காவல் தெய்வம்'
தமிழ்த் திரை உலகின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான எஸ். வி. சுப்பையா, சிவாஜி கணேசன் நடித்த ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் பாரதியாராக மிகச் சிறப்பாக நடித்தார்.எஸ். வி. சுப்பையாவின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் செங்கோட்டை ஆகும். கலை துறையில் ஆர்வம் கொண்ட எஸ். வி. சுப்பையா முதலில் டி. கே. எஸ். நாடக சபா, பிறகு சக்தி நாடக சபா ஆகியவற்றில் சேர்ந்து நாடகங்களில் நடித்தார்.
இதன் பலனாக சினிமா சான்ஸ் பெற்றார். 1952ல் சினிமாவில் சிறு சிறு வேடம் ஏற்று நடிக்கத் தொடங்கினார். எஸ். பாலசந்தர் - பானுமதி நடித்த ‘ராணி’ படத்திலும், டி. ஆர். மகாலிங்கம் நடித்த ‘வேலைக்காரன்’ படத்திலும் குறிப்பிடத்தக்க வேடத்தில் நடித்தார்.
தெலுங்கில் மிக வெற்றிகரமாக ஓடிய ‘ரோஜலு மாராயி’ என்ற படம், ‘காலம் மாறிப்போச்சு’ என்ற பெயரில் தமிழில் தயாரிக்கப்பட்டது. ஜெமினி கணேசன் - அஞ்சலி தேவி ஜோடியாக நடித்த இப்படத்தில் முக்கியமான குணச்சித்திர வேடத்தில் எஸ். வி. சுப்பையா நடித்தார். சுப்பையா வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய படம் இதுதான். அவருடைய நடிப்பு மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.
அவர் நடித்த படங்கள் சுமார் 100 சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன் ஆகியோருடன் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக, சிவாஜி கணேசனுடன் எஸ். வி. சுப்பையா அதிக படங்களில் நடித்தார். ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘பாவமன்னிப்பு’, ‘இரும்புத் திரை’ போன்றவை பிரபலமான படங்கள்.
குறிப்பாக ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் சிவாஜி கணேசன் வ. உ. சிதம்பரனாராக நடிக்க, எஸ். வி. சுப்பையா மகாகவி பாரதியாராக நடித்தார். என்பதைவிட பாரதியாரையே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார் என்று கூறுவதே பொருந்தும் ஜெமினி கணேசனுடன் செளபாக்கியவதி ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’, ‘வஞ்சிக் கோட்டை வாலிபன்’ ஆகிய படங்களிலும் ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்ற படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரனுடனும் நடித்தார்.
பழம் பெரும் நடிக்கர்கள் கே. ஆர். ராமசாமி, எம். கே. ராதா ஆகியோருடனும் சேர்ந்து நடித்திருக்கிறார். 1955ல் வெளிவந்த ‘வள்ளியின் செல்வன்’ என்ற படத்தில் எஸ். வி. சுப்பையா முக்கிய வேடத்தில் நடித்தார். அவருடன் சகஸ்ரநாமம், டி. எஸ். துரைராஜ், ஜெமினி கணேசன் ஆகியோர் நடித்தனர். எம். ஜி. ஆர். நடித்த இதயக்கனி படத்திலும், ‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற’ என்றசூப்பர் ஹீட் பாடல் காட்சியில் தோன்றினார்.
எஸ். வி. சுப்பையா சொந்தமாகத் தயாரித்த படம் ‘காவல் தெய்வம்’ எஸ். வி. சுப்பையா செளகார் ஜானகி, சிவகுமார், லட்சுமி ஆகியோர் நடித்த இப்படத்தில் சாமுண்டி கிராமணி என்ற கதாபாத்திரத்தில் கெளரவ வேடத்தில் சிவாஜி கணேசன் நடித்தார். இதன் கதை வசனத்தை ஜெயகாந்தன் எழுதினார்.
வெற்றிகரமான ஓடிய படம். இது தமிழ்த் திரை உலகில் மறக்க இயலாத சிறந்த குணச்சித்திர நடிகராக விளங்கிய எஸ். வி. சுப்பையா 29.01.1980 அன்று மரணம் அடைந்தார். காலமான போது அவருக்கு வயது 57 எஸ். வி. சுப்பையாவின் மனைவி பெயர் கோமதி அம்மாள். இவர்களுக்கு 5 மகள்கள் ஒரு மகன்.