Wednesday, February 20, 2013

இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்படம் சமுதாயம் கதாநாயகி ஜெயகெளரி

இலங்கையில் தயாரிக்கப் பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம் சமுதாயம். 1962 ம் அண்டில் வெளிவந்த இப்படத்தை தயாரித்து இயக்கியவர் ஹென்றி சந்திரவன்ச. இத்திரைப்படம் 16 மிமீ அகலத்திலேயே வெளிவந்தது. அறிஞர் அண்ணாதுரை எழுதிய வேலைக்காரி கதையைத் தழுவி இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களை ஜீவா நாவுக்கரசன் எழுதினார்.
எஸ்.என். தனரெத்தினம் இப்படத்தின் கதாநாயகனாக நடித்தார். ஜெயகெளரி கதாநாயகி. வில்லனாக ஏ.எஸ். ராஜா நடித்தார். மற்றும் ஆர். காசிநாதன், ஆர்.வி. ராசையா, இரத்தினகுமாரி ஆகியோரும் நடித்திருந்தனர். நடிகர் சந்திரபாபுவின் சகோதரியின் மகள்மார் இருவரும் இப்படத்தில் தோன்றியிருக்கிறார்கள். எம். ஆர். ராதாவின் இலங்கை மனைவி கீதாவும் இப்படத்தில் சில காட்சிகளில் தோன்றினார்.
செலவைக் குறைப்பதற்காக இப்படத்துக்கான அனைத்துப் படப்பிடிப்புகளும் கொழும்பைச் சுற்றியுள்ள தனியார் வீடுகளிலேயே நடைபெற்றன. வெளிப்புறக் காட்சிகளை ஒளிப்பதிவாளர் பியசேன சிறிமான யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி, அநுராதபுரம், அம்பாறை போன்ற இடங்களில் ஒளிப்பதிவு செய்தார்.
கொழும்பின் புறநகர்ப் பகுதியான அங்கொடையில் கொத்தட்டுவ என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் வீட்டிலேயே ஒலிப்பதிவுகள் செய்யப்பட்டன. வினோதினி இந்திராணி செல்லத்துரை, அம்பிகா தாமோதரம், முகமட் பியாஸ் ஆகியோர் இத்திரைப்படத்தின் பின்னணிப் பாடல்களை பாடியுள்ளனர். சந்திரவன்ச ‘சமுதாயம்’ தமிழ்ப் படத்தை உருவாக்கிய அதே சமயத்தில் ‘சமாஜய’ என்னும் சிங்களத் திரைப்படத்தையும் உருவாக்கினார். ‘சமுதாயம்’ படத்தின் தழுவலே அதுவாகும்.

No comments:

Post a Comment