இலங்கையில் தமிழ்த் திரைப்படம் தயாரிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு காலத்திலே அதில் துணிந்து காலடி எடுத்து வைத்தவர் சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ.ஆர்.எம்.றசீம். தமிழ் திரைப்படங்கள் தயாரித்தால் தமிழக திரைப்படங்களோடு போட்டி போடக்கூடியளவில் தரமானதாக தயாரிக்க வேண்டும், திரையிட தியேட்டர்கள் தேட வேண்டும். இவற்றுக்கெல்லாம் இந்த நிலை இருக்கையில் இவர் இதுவரை மூன்று திரைப்படங்களை தயாரித்துவிட்டார்.
ஆரம்பகாலத்தில் வியாபாரத்துறையில் ஈடுபட்டு இருந்த இவர் 1989ஆம் ஆண்டு ரத்தபாசம் என்ற வீடியோ படத்தை தயாரித்துள்ளார். தமிழர்களும் முஸ்லிம்களும் செறிந்து வாழும் கிழக்கு மண்ணில் தமிழ், முஸ்லிம் நட்பும் உறவும் நட்புறவாகும் வண்ணம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். சுமார் 5 இலட்சம் ரூபா செலவில் இரண்டரை மணித்தியாலங்கள் கொண்ட இந்த திரைப்படத்தை தயாரித்து ஒரு வீட்டில் எடிட்டிங் செய்து கொண்டிருந்தபோது அங்கு ஏற்பட்ட தமிழ், முஸ்லிம் கலவரத்தில் அந்த வீட்டோடு சேர்ந்து அந்த சினிமா படச்சுருளும் எரிந்து சாம்பராகியது.
அதன்பின் National Inteligent Bureau வான தேசிய புலனாய்வுத்துறையில் இணைந்து அங்கு சில காலம் சேவையாற்றிவிட்டு தனிப்பட்ட காரணத்துக்காக அந்த அரசதுறை வேலையை விட்டு விலகி மீண்டும் வியாபாரத்துறையில் ஈடுபட்டார். அப்போது ஒரே நாளில் என்ற திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தமிழகத்திற்கு சென்றார். கெமராவை கையாள்வது எப்படி? திரைப்படம் தயாரிப்பது எப்படி போன்ற நுணுக்கங்களை அங்கு மென்மேலும் கற்று தேர்ந்தார். பழனி பேரசு பரத், காதலர் கதை ஆகிய திரைப்படங்களை தயாரிக்கும் போது உதவியாளராக இருந்து அவற்றை கற்றுத் தேர்ந்தார். அதனைவிட சன் டிவியிலும் சேர்ந்து பயிற்சி பெற்றார்.
‘ஒரே நாளில்’ என்ற திரைப்படத்தை தயாரிக்க எவ்வளவு செலவானது?
ஒரு கோடி ரூபா
இந்த திரைப்படத்தை தயாரிக்க எவ்வளவு காலம் எடுத்தது?
மூன்று வருடங்கள்
இந்தப் படம் திரையிடப்பட்டது தொடர்பாக நீங்கள் என்ன கூற விரும்புகிaர்கள்?
இலங்கையின் யுத்தத்திற்குப் பின் திரையிடப்பட்ட பிரமாண்டமான திரைப்படம் இது.
இந்த திரைப்படம் எப்போது திரையிடப்பட்டது?
2012 செப்டெம்பர் 31ஆம் திகதி
இந்த திரைப்படத்தால் எதிர்பார்த்த வசூல் கிடைத்ததா?
இல்லை அதற்கு பல காரணங்களைக் கூறலாம்.
இந்தத் திரைப்படம் இலங்கை திரைப்படம் என்று முத்திரை குத்தி திரையிடப்பட்டதும் கட்அவுட்டில் கூட இலங்கை திரைப்படம் என்று குறிப்பிடப்பட்டிருந்ததும் இதற்கு ஒரு காரணம் என்று கூறலாம். அத்துடன் இந்த திரைப்படம் திரையிடப்பட்ட தினத்தன்றே வெடி, வாகை சூடவா, முரண் ஆகிய படங்கள் திரையிடப்பட்டதும் அதற்கு அடுத்தவாரம் வேலூர் மாவட்டம் போன்று வேறு சில புதிய படங்கள் திரையிடப்பட்டதும் ஒரே நாளில் திரைப்படம் எதிர்பார்த்த வசூலை எட்டாத நிலைக்கு இன்னுமொரு காரணமாகும்.
தென்னிந்திய திரைப்படங்களை பார்த்து பழக்கப்பட்ட ரசிகர்கள் இலங்கைத் திரைப்படம் என்றால் தேயிலை தோட்டம், குடிசை, பனைமரம் இவை தான் இருக்கும் என்று நினைத்து விட்டார்கள்.
இந்த திரைப்படத்தை இந்தியாவில் திரையிட முயற்சி செய்யவில்லையா?
இந்தியாவில் திரையிடுவதற்கு பெரும் முயற்சி செய்தேன். நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன், நாசர் சார் என பலர் இதற்கு உதவி செய்ய முன் வந்தார்கள். ஆனால் படத்தை பதிவு செய்யவில்லை. படக் கம்பெனி பதிவு செய்யப்படவில்லை என ஏகப்பட்ட பிரச்சினைகள் எழுந்ததால் தமிழக தியேட்டர்களில் இந்த திரைப்படத்தை திரையிட முடியவில்லை. ஆனால் டிவிடியில் வெளியிட்டு வசூல் செய்யப்பட்டது.
இந்த திரைப்படத்திற்கு பின் என்ன படத்தை எடுத்தீர்கள்?
கீறல்கள்
இது எத்தனையாம் ஆண்டு எடுக்கப்பட்டது?
2012 ஏப்ரல் மாதம்
“கீறல்கள்” திரைப்படத்தின் தொடக்க விழா பற்றி என்ன கூறலாம்?
இந்த படத்தின் தொடக்க விழா தமிழகத்தின் தேனீ மாவட்டத்தில் நடைபெற்றது. அன்னக்கொடி... என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த தளத்தில் “கீறல்கள்” திரைப்படத்தின் ஆரம்பவிழா நடைபெற்றது. இயக்குனர் பாரதிராஜா, நடிகை கார்த்திகா, மனோஜ் உட்பட மேலும் பல நடிக, நடிகைகள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொள்வதற்கு இலங்கையிலிருந்து 50 பேர் சென்றிருந்தோம்.
எங்கள் 50 பேருக்கும் ‘வந்தவர்கள் அனைவரும் இலங்கை மக்கள்’ என்று அன்புள்ளத்தோடு வரவேற்று மதியபோசன விருந்துபசாரம் அளித்து கெளரவித்தவர் இயக்குனர் பாரதிராஜா. இவ்வாறான உள்ளம் யாருக்கு வரும்? இப்படி யார் செய்வார்கள்? எங்களது விழாவில் கலந்து கொள்ள வருவதே பெரிய விசயம். அப்படி இருக்கையில் எங்களுக்கு விருந்தளித்து கெளரவித்து எம் நெஞ்சங்களை நெகிழ வைத்தது. இதனை என்னென்றும் மறக்க முடியாது.
இந்த படத்தின் பாட்டுக்குரிய காட்சியொன்று கொடைக்கானலில் படமாக்கப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக இலங்கையிலிருந்து 45 பேர் சென்று இருந்தோம். நாம் கொடைக்கானலில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருப்பது தெரிந்து இயக்குனர் பாரதிராஜா, சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்து அங்கிருந்து கொடைக்கானலுக்கு காரில் வந்து எங்களை உற்சாகப்படுத்தினார்.
கீறல்கள் படத்தின் இசைவெளியீட்டு விழா ஜில்லா படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்றது. நடிகர்கள் விஜய், மோகன்லால் ஆகியோருடன் சுப்பர் குட் பிலிம் அதிபதி ஜில்லா தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி ஜித்தன் ரமேஸ் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். கீறல்கள் படத்தின் டப்பின் வேலைகள் அனைத்தும் தமிழக கலைஞர்களைக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழக திரைப்படத்துக்கு நிகராக இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
கீறல்கள் படத்தின் கதாநாயகன் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு தனது அத்தை வீட்டுக்கு வருகிறான். வந்த இடத்தில் அவனுக்கு லொட்டரியில் 8 கோடி ரூபா விழுகிறது. இந்த பரிசுக்குரிய லொட்டரி டிக்கெட் தொலைந்துபோகவே அதை கண்டுபிடிக்க போய் பல போராட்டங்களை சந்திக்கின்றான்.
நீங்கள் அடுத்ததாக மூன்றாவதாக தயாரிக்கப்போகும் திரைப்படத்தின் பெயர் என்ன?
நேற்று இரவு 10.45க்கு
இந்த திரைப்படத்தில் நடிக்கப்போகும் நடிக நடிகைகள் பற்றி கூறலாமா?
இதில் 25% இந்திய கலைஞர்களும் 75% இலங்கை கலைஞர்களும் நடிக்கவுள்ளனர். இலங்கை கலைஞர்கள் அனைவரும் புதுமுகங்களாகத்தான் இருப்பார்கள்.
புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப் படும் எனவே அப்படி நடிக்க விரும்புகிறவர்கள் இருந்தால் என்னுடன் தொடர்பு கொள்ளலாம்.
நேற்று இரவு 10.45க்கு படத்தின் படப்பிடிப்பு எப்பொழுது ஆரம்பிக்கப்படும்?
பிரமாண்டமான இந்த படத்தின் ஆரம்பவிழா வெகுவிரைவில் நடைபெறும். நடிகரும் இயக்குனருமான சேரன் இதனை ஆரம்பித்து வைப்பார். இவரோடு தமிழகத்தைச் சேர்ந்த எட்டு நடிக, நடிகைகள் இதில் கலந்து கொள்ளவுள்ளார்கள். இதன்படப்பிடிப்பு தமிழகத்திலும் இலங்கையிலும் நடைபெறும். ரசிகர்களுக்கும் இந்த படப்பிடிப்பை கண்டுகளிக்க வாய்ப்பேற்படுத்தி கொடுக்கப்படும்.
இந்த திரைப்படத்தோடு படத் தயாரிப்பை நிறுத்தி விடுவீர்களா?
இல்லை! வருடத்திற்கு மூன்று திரைப்படங்கள் வீதம் தயாரிக்க திட்டமிட்டுள்ளேன். கெமரா யுனிட், எடிட்டிங், டப்பிங் என்று அனைத்தும் செய்யக்கூடிய வசதிகள் எம்மிடம் உள்ளன. C2H என்ற திட்டத்தின் மூலம் படங்களை திரையிடக்கூடிய வாய்ப்பும் உள்ளது.கடந்த மார்ச் 5ஆம் திகதி நடிகரும் இயக்குனருமாகிய சேரன் ஆரம்பித்து வைத்த C2H என்ற திட்டத்தைப் பற்றி கூறுங்களேன்.
இதில் C2H என்பது சினிமா டூ ஹோம் என்பதாகும். திரைப்படமொன்று தயாரித்து திரைக்கு வருகின்ற நாளிலேயே அந்த திரைப்படத்தின் திருட்டு சீடி வெளிவந்து விடுகிறது. இதனால் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்கும் முகமாகத்தான் சேரன் சார் திரைப்படத்தின் டிவிடிக்களை வீடுகளுக்கு சென்று விநியோகிக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளார். இதன் ஆரம்பவிழா சென்னை நேரு உள்ளக அரங்கில் நடைபெற்றது. சுமார் 75,000 பேரளவில் இதில் கலந்து கொண்டார்கள். இங்கு சேரனின் ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை என்ற திரைப்படத்தின் 30 லட்சம் டிவிடிக்கள் விற்பனையாகின.
இந்த விழாவில் சேரன் சார் என்னை மேடைக்கு அழைத்து என் குருநாதர் தான் உனக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்க வேண்டும் என்று கூறி இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரைக் கொண்டு பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார். அதன்பின் சேரன் சார் என்னை மேடையை விட்டு இறக்கவிடாமல் மேடையிலேயே அமர வைத்தார். சுமார் 4 மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் 20 நிமிடங்கள் எனக்காக ஒதுக்கியிருந்தார்.
இதனை www.c2hnetwork.com என்ற இணையத்தளத்தில் Contact us க்கு சென்று Recorded Event 5th March 2015ஐ கிளிக் செய்து பார்க்கலாம்.இதில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் ஆகியோரும் மேடையில் இருந்து கெளரவித்தனர்.தமிழகத்தில் சேரனால் ஆரம்பிக்கப்பட்ட C2H இன் இலங்கை விநியோகஸ்தராக நீங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிaர்கள் இலங்கை விநியோகஸ்தராகக் கூடிய வாய்ப்பு உங்களுக்கு எப்படி கிடைத்தது?
ஒருநாள் பாரதிராஜா சார் போன் பண்ணி “சேரன் வெயிட்டிங் போ யூ. நீ நாளைக்கு புறப்பட்டு வா” என்று கூறினார். நான் உடனடியாக விமான டிக்கெட் எடுப்பதெல்லாம் கஷ்டம் என்று கூறி வசதி கிடைத்தவுடன் சென்றேன். முதலில் பாரதிராஜா சார்கிட்டதான் சென்றேன். அவர் உடனடியாக சேரன் சார்கிட்ட அனுப்பிவிட சேரன் சார் விடயத்தை கூறி என்னை இலங்கை விநியோகத்தரை நியமித்தார். C2H மூலம் விநியோகிக்கப்படுகின்ற டிவிடி ஒன்று என்ன விலைக்கு விற்பனை செய்வீர்கள்? இந்தியாவில் 50 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. இலங்கையில் 100 ரூபாவுக்கு வழங்குவோம். விஜய் போன்ற பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் 150 ரூபா முதல் 200 ரூபா வரை விலைபோக வாய்ப்புண்டு.