(யானை என் தோழன்)
ராஜேஷ் கண்ணாவை அசைவ வார்த்தைகளால் திட்டியவர் தேவர்
சின்னப்பா தேவர் தயாரித்த இந்திப் படமான ‘ஹாத்தி மேரா சாத்தி’ (யானை என் தோழன்) 25
வாரங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.
எம்.ஜி.ஆரை வைத்து பல வெற்றிப்படங்களையும் மற்ற நட்சத்திரங்களை வைத்து அருமையான
பக்திப் படங்களையும் தயாரித்து வந்த சின்னப்பா தேவருக்கு, இந்திப்படம் எடுக்க
வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
‘எஸ்.எஸ். வாசன், ஏ.வி. மெய்யப்ப செட்டியார் போன்ற ஸ்டூடியோ அதிபர்களால்தான் இந்திப்
படங்களை வெற்றிகரமாகத் தயாரிக்க முடியும். நமக்கு ஏன் விஷப்பரீட்சை?’ என்று அவர்
தம்பியும், டைரக்டருமான எம்.ஏ. திருமுகம் கூறினார்.
‘இந்திப்படம் தயாரிக்க நினைப்பது, பணம் சம்பாதிப்பதற்காக அல்ல. அதை ஒரு கெளரவமாக
நினைக்கிறேன். முருகன் இருக்கிறான். அவன் வெற்றி தேடித் தருவான்’ என்றார் தேவர்.
எந்தக் கதையை இந்தியில் தயாரிப்பது என்று ஆலோசனை நடந்தது.
1967ல், ‘தெய்வச் செயல்’ என்ற படத்தை தேவர் எடுத்தார். மேஜர் சுந்தரராஜன்,
முத்துராமன் ஆகியோர் நடித்த இந்தப் படம் சுமாராகத்தான் ஓடியது.
அந்த தெய்வச் செயல் கதையைத்தான் இந்தியில் தயாரிக்கப் போவதாக தேவர் கூறியதும்,
எல்லோரும் திகைத்தனர். ‘நாம் எத்தனையோ வெற்றிப் படங்களை எடுத்திருக்கிறோம். அதில்
ஏதாவது ஒரு கதையை எடுக்கலாமே? போயும் போயும் சரியாக ஓடாத ஒரு படத்தின் கதையை
எடுப்பதா?’ என்று டைரக்டர் திருமுகமும், வசனகர்த்தா ஆரூர்தாசும் கூறினர்.
‘நாம் இதுவரை எடுத்துள்ள படங்களில் மிக நல்ல கதை இதுதான்’ என்று தேவர் கூறிவிட்டார்!
இந்தக் காலகட்டத்தில் இந்திப் பட உலகின் சூப்பர் ஸ்டாராக ராஜேஷ்கண்ணா திகழ்ந்தார்.
அவரை ‘புக்’ செய்ய தேவர் மும்பை சென்றார்.
‘தேவர் நாணயமானவர். பணத்தை ஒரே நேரத்தில் மொத்தமாக கொடுப்பார். குறித்த திகதியில்
படத்தை முடித்து ரிலீஸ் செய்து விடுவார்’ என்றெல்லாம் ராஜேஷ் கண்ணா உட்பட வட இந்திய
கலைஞர்கள் எல்லாம் ஏற்கனவே அறிந்திருந்தனர்.
எனவே, தேவரை வரவேற்று உபசரித்தார் ராஜேஷ் கண்ணா.
‘செக்’கில் ஒரு பெருந்தொகையை எழுதி ராஜேஷ் கண்ணாவிடம் நீட்டினார், தேவர். அதைப்
பார்த்ததும் ராஜேஷ் கண்ணாவுக்கு மயக்கமே வந்துவிடும் போலிருந்தது.
தேவர் ஆங்கிலம் கற்றவர் அல்ல என்றாலும், தான் நினைப்பதை புரிய வைக்கிற அளவுக்கு
ஆங்கிலம் பேசிவிடுவார். ‘ராஜேஷ்! ஒன் பேமண்ட் ஒன் ஷெட்யூல்! யூ.கம்.ஐ. பினிஷ்!’
என்று ராஜேஷ் கண்ணாவிடம் கூறிவிட்டு சென்னை திரும்பினார்.
‘ஹாத்தி மேரா சாத்தி’, எம்.ஏ. திருமுகம் டைரக்ஷனில் வெற்றிகரமாக வளர்ந்தது.
மும்பை நட்சத்திரங்களில் பெரும்பாலானோர், காலை 10 மணிக்குத்தான் படுக்கையில் இருந்து
எழுவார்கள். படப்பிடிப்புக்கு தாமதமாகத்தான் வருவார்கள்.
ஆனால், தேவர் நேரம் தவறாதவர். காலை 8 மணிக்கே படப்பிடிப்பை தொடங்கி விடுவார்கள்.
ராஜேஷ் கண்ணா தொடர்ந்து தாமதமாக வந்ததால், ஒரு நாள் தேவர் தமிழில் சில ‘அசைவ’
வார்த்தைகளால் ராஜேஷ் கண்ணாவைத் திட்டினார்.
ராஜேஷ் கண்ணாவுக்குத் தமிழ் தெரியாதென்றாலும், தேவர் தன்னைத் திட்டுகிறார் என்பதை
புரிந்துகொண்டார். உடனே தேவரை மேக்-அப் அறைக்கு அழைத்துச் சென்றார். அவர் காலைத்
தொட்டு கும்பிட்டார். பிறகு தன் செருப்பைக் கழற்றி அவர் கையில் கொடுத்து, ‘நான் தவறு
செய்திருந்தால் என்னை இந்த செருப்பால் அடியுங்கள்.
ஆனால் பலர் முன்னால் திட்டி அவமானப்படுத்தாதீர்கள். ஏனென்றால், நான் இன்று வட
இந்திய பட உலகில் கெளரவமான நிலையில் இருக்கிறேன்’ என்று கண்கலங்கக் கூறினார்.
தேவரும் கண்கலங்கிவிட்டார்! ‘மன்னிச்சுக்க முருகா. இனிமே உன்னைத் திட்டமாட்டேன்!’
என்றார். மறுநாள் முதல் ராஜேஷ் கண்ணா சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வந்தார்.
‘ஹாத்தி மேரா சாத்தி’ படப்பிடிப்பு முடிந்து, 14-05-1971 அன்று ரிலீஸ் ஆகியது.
வடநாடு முழுவதும் எல்லாத் தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. ராஜேஷ்
கண்ணா யானையுடன் பல சாகசங்கள் செய்ததை மக்கள் ரசித்தனர். எனவே எல்லா ஊர்களிலும்
இப்படம் 25 வாரம் ஓடி, வெள்ளி விழா கொண்டாடியது. வசூலில் பெரும் புரட்சியே செய்தது.
இது பற்றி ஏவி. மெய்யப்ப செட்டியார் ஒரு கட்டுரையில், ‘நண்பர் தேவர் எடுத்த ஹாத்தி
மேரா சாத்தி, பட உலக சரித்திரத்திலேயே வசூலில் புதிய ரெக்கார்டு ஏற்படுத்தி விட்டது.
பெரிய வெற்றிப்படம் என்றால், கல்கத்தாவில் ரூ. 30, 40 இலட்சம் வரை வசூல் ஆவதுதான்
வழக்கம்.
‘ஹாத்தி மேரா சாத்தி’க்கு ரூ. 70, 80 இலட்சம் வசூலாயிற்று என்று கேள்விப்படுகிறேன்...”
என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின், ‘வெள்ளிக்கிழமை விரதம்’ கதையை ‘சுப்தீன்’ என்ற பெயரில் இந்தியில்
எடுத்தார். தேவர். ரிஷிகபூர் நடித்த இந்தப் படம் சுமாராக ஓடியது. பின்னர்,
‘தாயைக்காத்த தனயன்’, ‘வேட்டைக்காரன்’ ஆகிய படங்களின் கதைகளை ஒன்றாகக் கலந்து, ‘மா’
என்ற பெயரில் இந்தியில் தயாரித்தார். தர்மேந்திரா நடித்த இந்தப் படம் நூறு நாள்
ஓடியது.
இதன் பின் ‘ஹாத்தி மேரா சாத்தி’ படத்தை ‘நல்ல நேரம்’ என்ற பெயரில் தமிழில்
தயாரித்தார். எம்.ஜி.ஆரும், கே.ஆர்.விஜயாவும் நடித்தனர். படம் மிகப் பெரிய வெற்றி
பெற்றது.