உதவும் ஏழை நூல்போலே
பட்டம்போல் அவர் பளபளப்பார்
நூல்போலே இவர் இளைத்திருப்பார்
மழையைப் பாடாத கவிஞர் உண்டோ? இங்கே ஒரு திரைப்பாடல் மழை கொட்டுவதைப் புதுவிதமான உவமையோடு சொல்வதைக் கண்டு வியப்பேற்படுகிறது. அது இதுதான்.
முட்டாப்பயலே மூளையிருக்கா
என்று ஏழைமேலே துட்டுபடைச்ச
சீமான் அள்ளி கொட்டுற வார்த்தைபோலே - மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே...
தன்னிடம் வேலை செய்கிற தொழிலாளியை முதலாளி திட்டுவது போல மழை கொட்டுகிறது என்று பாட, தமிழறிவோடு இந்தக் கவிஞனுக்குச் சமூக உணர்வும் வேண்டுமல்லவா?
காதலியின் முகம் குறித்து எத்தனையோ விதமாக விதந்தோதியிருக்கிறார்கள் கவிஞர்கள். நிலவு, மலர், பளிங்குக் கல் என்று தோன்றிய வற்றையெல்லாம் காதலியின் முகத்தோடு பொருத்திப் பார்க்க இந்தக் கவிஞர்களுக்குச் சலிக்க வேயில்லைதான். ஆனால், கோபமாக இருக்கிற காதலியின் முகத்தை இப்படிச் சொல்கிறது இதோ பாடலின் பிந்தைய வரிகள்.
பழுக்கப் பழுக்க உலையில் காய்ச்சும்
இரும்பைப்போலவே - முகம்
சிவக்குது இப்போ - அது
சிரிப்பதும் எப்போ?
இப்படிச் சொல்கிற காதலனின் குரல் உலைக் களத்தில் பழுத்த அனுபவக் குராகவும் தெரிகிறது.
இருப்பவன் - இல்லாதவன் எனும் அவலம் தீர இப்படித் தீர்வு தருகிறது இந்தப் பாடல்.
உயர்ந்தவர் தாழ்ந்திடத் தேவையில்லை
உள்ளதை இழந்திடச் சொல்லவில்லை
உழைப்பவர் உயர்ந்தால் போதுமய்யா...
அதாவது, பள்ளத்தை மண்ணிட்டு நிரப்பிச் சமப்படுத்த இன்னொரு மேட்டைக் கரைக்கத் தேவையில்லையாம். இது எப்படியிருக்கு?
இப்படியொரு தீர்வைச் சொன்ன தமிழ்த் திரை இசைப் பாடல்தான் இப்படியும் இன்னொரு இடத்தில் புலம்புகிறது ஆனால் அது வெறும் புலம்பல் இல்லை. இந்த ஏற்றத் தாழ்வுகளுக்குச் சரியான காரணத்தைக் கண்டு பிடித்தும் சொல்கிற காரியார்த்தப் புலம்பல். அது இதோ....
வானம் பொழியுது பூமி வெளையுது தம்பிப் பயலே - நாம
வாடிவதங்கி வளப்படுத்தினோம் வயல - ஆனா
தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையிலே இது
தகாதுயின்னு எடுத்துச் சொல்லியும் புரியல...
வயலை வளப்படுத்துகிற உழைப்பாளி வாடி வதங்கிப் போய்த்தான் கிடக்கிறான். உழைப்பால் விளைந்த தானியச் செல்வம் வலுத்தவன் கைக்குப் போய்விட்டது தான் அதற்குக் காரணம் இப்படி உழைப்பிருக்கிற இடத்தில் வறுமையும். உழைக்காத இடத்தில் வளமையும் என்று முரண்பட்டிருக்கிற சமூகத்திற்கு அது தகாது என்று எத்தனை முறை எடுத்துச் சொன்னோம், அது மண்டையில் ஏறவில் லையே!
அழுபவர் சிரிப்பதும் சிரிப்பவர் அழுவதும்
விதி வழி வந்ததில்லை
ஒருவருக்கென்றே உள்ளதையெல்லாம்
இறைவனும் தந்ததில்லை (வாலி, படம் சந்திரோதயம்)
என்று இறைவனைத் துணைக்கு வைத்துக் கொண்டே அதே சமயம் எதுவும் விதிப்படித்தான் நடக்கும் என்ற சித்தாந்தத்தை மறுக்கிறது இன்னொரு பாடல்.
இந்த இடத்தில் இந்தியாவின் மிகச்சிறந்த மார்க்கசிய அறிஞரும் தொழிலாளி வர்க்கத்தின் உன்னதமான தலைவருமான தோழர் இ.எம்.எஸ். அவர்கள் தமது மார்க்கிசயமும் இலக்கியமும் என்ற நூலில் குறிப்பிட்டி ருப்பதை நினைவு கூர்வது சாலப் பொருத்தமானது. அவர் சொல்கிறார்.
“சுரண்டுவோரின் பிரச்சாரகராக மாறும் படிக்கு தத்துவார்த்தரீதியில் பயிற்றுவிக்கப் பட்டிருக்கும் இந்தத் திறமையான கலைஞர்களும் எழுத்தாளர்களும் கூட தம்மையறியாமலேயே சுரண்டப்படுகிறவர்களின் தத்துவத்துக்கு உருவம் தருகிறவர்களாக மாறிவிடுகிறார்கள். அழகியல் படைப் பிலுள்ள முரண்பாடு இப்படித்தான் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது”