குரல் கொடுத்தவருக்கே
குரல் கொடுக்க
யாரும் இல்லை
நடிகர்களுக்கு
குரல் கொடுக்கும் டப்பிங் ஆர்ட்டிஸ்டுகளில் எஸ்.எஸ்.சுரேந்தர் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறார்
என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவரைச் சந்தித்த பொழுது, இந்த டப்பிங்
விசயத்தில் அவர் மனதில் கொடி அரைக் கம்பத்தில் பறந்து கொண்டிருப்பதை காண முடிந்தது.
அந்த இளைஞரின் நெஞ்சில் ஒரு எள்ளைப் போட்டால்
பொரியும் போலிருக்கிறது. அவ்வளவு வேக்காடு..!
"நூறு படங்களுக்கு
மேல் டப்பிங் பேசி விட்டேன். நெஞ்சத்தைக் கிள்ளாதேவில் பிரதாப்புக்கு, அலைகள்
ஓய்வதில்லையில் கார்த்திக்கு. காதல் ஓவியத்தில் கண்ணனுக்கு. உயிருள்ளவரை உஷாவில் கங்காவுக்கு
மற்றும் ரவீந்தர், ஷங்கர், விஜய்பாபு,
சுதாகர், விஜயகாந்த் போன்றோருக்கும் குரல் கொடுத்திருக்கேன்.
மொத்தத்தில் மோகனுக்குத்தான் அதிகமாக முப்பது படங்களுக்கு மேல் கொடுத்திருக்கிறேன்.
பயணங்கள் முடிவதில்லையில் தொடங்கி விதி, நான் பாடும்பாடல் வரை
குரல் கொடுத்திருக்கிறேன்.
நெஞ்சத்தைக் கிள்ளாதேவில்
பிரதாபுக்கு சூட்டபிள் வோய்ஸ் கிடைக்காததால் அவருக்கு என்னை பேசச் சொல்லி விட்டார்
டைரக்டர் மகேந்திரன். படம் முடிந்து பார்த்த
போது 'நீங்கள் எனக்காக பேசியிருக்கலாம் சுரேந்தர் ' என்று வருத்தப்பட்டுக்
கொண்டார் மோகன்.
டப்பிங் பேசுவது
எனக்கு பிடிக்காத விஷயம். பாடுவதற்காகத்தான் விருப்பப்பட்டேன். அதற்காகத்தான் வந்தேன்.
சட்டம் ஒரு இருட்டறை, தாமரை
நெஞ்சம் உள்ளிட்ட படங்களில் பாடியிருக்கிறேன். நான் பாடும் பாடலில் மோகனுக்கே பாடியிருக்கிறேன்.
நான் டப்பிங் கொடுத்தது
பீல்டில் ஒரு கனெக்ஷன் இருக்கட்டுமே என்பதற்காகத்தான். இது காரணமாக வேறு பல துறைகளை தியாகம் பண்ண வேண்டி
வந்தது. வாய்ஸ் கொடுப்பவன்தானே என்ற இளக்காரத்தில் பாடவும் நடிக்கும்கிடைக்கும் சான்ஸ்கள்
குறைந்தன.
என் கல்யாணத்திற்கு
சிவகுமார்,
சங்கிலி முருகன், சுரேஷ் போன்ற நான் வோய்ஸ் கொடுக்காத
நடிகர்கள் வந்திருந்தார்கள். ஆனால் நான் வோய்ஸ் கொடுத்தவர்கள் கண்டு கொள்ளவே இல்லை.
அவர்கள் என்னவோ முற்போக்கு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் போலவும், நாம் என்னவோ எஸ்.டி காஸ்ட் போலவும் ஒதுங்கி வாழத் தலைப்படுகிறார்கள் என்றார்
சுரேந்தர்.