மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் எண்ண வண்ணம்தான். ‘சின்னக்குட்டி நாத்தனா, சில்லறையை மாத்துனார்’ பாடல் இடம்பெற்ற திரைப்படம். ஆரவல்லி (1957), அட்டகாசமான பாடலுக்கு துள்ளலிசையை அமைத்தவர் ஜி. ராமநாதன், குரல் வழியே குதூகலப்படுத்தியர். திருச்சி லோகநாதன், தயாரிப்பு டி. ஆர். சுந்தரம். மிகவும் எளிமையான வரிகளும், சிறப்பான இசையும், இப்பாடலை அக்காலத்தில் பட்டி தொட்டியெங்கும் பரப்பியது என்றால் அது மிகையில்லை.
இதில் கதாநாயகியாக நடித்தவர், ஜி. வரலட்சுமி அவருடைய தங்கையாக மைனாவதி நடித்தார். (இவர் நடிகை பண்டரிபாயின் தங்கை), பெண்களின் ராஜாங்கம் தான் எப்படி இருக்கும். ஒரு நாட்டை பெண்களே ஆண்டு வந்தால் எப்படி இருக்கும் என்பது தான் கதை, ஆண்கள் எல்லோரும் இப்படத்தில் வீட்டிலிருந்தபடி சமைப்பார்கள். பெண்கள் காவல் காக்க வீரர்களாகச் செல்வார்கள்.
இப்பாடல் உருவான விதம் ஒரு சோகம் கலந்த சுவாரசியமாகும்.... இதோ ஒரு சமயம் பொதுவுடமை இயக்கத்திற்காக நாடகம் நடத்த சென்றிருந்த பட்டுக்கோட்டையார்.
நாடகத்திற்கு சரியான வசூல் இல்லாமல் தங்கள் குழுவினருடன் பசி பட்டினியுமாக சென்னை திரும்ப பஸ்ஸில் ஏறினார். பஸ்ஸில் அமர்ந்திருந்த தங்கள் குழுவினர் அனைவரும் சோர்ந்த முகத்துடன் காணப்பட்டார்கள், அவர்கள் சோகத்தை மாற்றி அவர்களுக்கு குதூகலத்தை தர பட்டுக்கோட்டையார் அங்கேயே ஒரு பாடல் எழுதி, அதனை சத்தமாக பாட ஆரம்பித்தார். அந்தப் பாடலை கேட்டதும் நாடக குழுவினருக்கு பசி பறந்துவிட்டது. அனைவரும் குதூகலமாக கைகளை தட்டி பாட ஆரம்பித்தார்கள்.
‘சின்னக்குட்டி நாத்தனா
சில்லறைய மாத்துனா
குன்னக்குடி போற வண்டியில்
குடும்பம் பூரா ஏத்துனா!’
இந்தப் பாடலை கேட்டு மகிழ்ந்து அவரது குழுவினர், ‘அண்ணே பாட்டு ரொம்ப அருமையா இருக்கு. இந்தப் பாட்ட அப்படியே ஒரு படத்துக்கு குடுங்கண்ணே’ என்று கேட்டுக் கொண்டார்கள். அதன்படியே அந்தப் பாடலை மாடர்ன்ஸ் தியேட்டர் தயாரித்த ‘ஆரவல்லி’ படத்திற்கு தந்துவிட்டார் பட்டுக்கோட்டையார்.
எம்.ஜp.ஆரும் சிவாஜpயும் இரு துருவங்களா? இல்லை நெருங்கிய நண்பர்களா?
எம். ஜி. ஆரும், சிவாஜி கணேசனும், இரு துருவங்களைப் போன்றவர்கள் என்றும் அவர்களுடைய ரசிகர்கள் எண்ணினார்கள். ஆனா, இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். ‘நாங்கள் விரோதிகள் அல்ல, நண்பர்கள்‘ என்று இருவரும் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறார்கள்.
சிவாஜி கணேசன் வாழ்க்கை வரலாறு ‘எனது சுயசரிதை’ என்ற பெயரில் புத்தகமொன்று வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை தொலைக்காட்சியில் பல ஆண்டுகள் தயாரிப்பாளராகப் பணிபுரிந்து பின்னர் உலகக் குழந்தைகள் நல நிறுவனத்தில் தகவல் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற டொக்டர் டி. எஸ். நாராயணசாமி, பல ஆண்டுகள் பழகிய சிவாஜியிடம் கேள்விகள் கேட்டு, அதற்கு பதில்களைப் பெற்று இந்நூலை உருவாக்கியுள்ளார். கேள்வி பதில் ரூபத்தில் இந்த நூல் அமைந்துள்ளது.
சிவாஜியின் மகன்களான ராம்குமார், பிரபு, சிவாஜியின் தம்பி மகன் கிரிசண்முகம் ஆகியோரைக் கொண்ட ‘சிவாஜி பிரபு சரிட்டிஸ் டிரஸ்ட்’ இந்த நூலை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருமானம் கல்விப் பணிக்கு செலவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எம். ஜி. ஆருடன் இருந்த நட்பு பற்றி சிவாஜிகணேசன் தன் சுய சரிதையில் மனம் விட்டுக் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது :-
சின்னப் பிள்ளையிலிருந்தே எம். ஜி. ஆரும் நானும் நெருங்கிய நண்பர்கள். என் வீட்டிற்கு அவர் வருவதும், அவர் வீட்டிற்கு நான் செல்வதும் என் தாயார் கையால் அவர் சாப்பிடுவதும், அவர் தாயார் கையால் நான் சாப்பிடுவதும் சகஜம். ஒரு கதை மாதிரி எங்கள் நட்பின் வரலாற்றைச் சொல்கிறேன்.
இரண்டாம் உலகப் போர் முடிந்த சமயம், 1943 – 44 ல் நான் சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கத்திலுள்ள ஒற்றைவாடை தியேட்டர் அருகில்தான் குடியிருந்தேன்.
‘லட்சுமிகாந்தன்’ நாடகமெல்லாம் நடத்தினோமே அந்த நேரத்தில், எனது வீட்டுக்குப் பக்கத்தில்தான் எம். ஜி. ஆர் அவரது தாயார், சகோதரர் எம். ஜி. சக்ரபாணி ஆகியோர் குடியிருந்தனர். அப்போதுதான் எம். ஜி. ஆர். சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்கள்.
நானும் என்னுடைய நண்பர் காகா ராதாகிருஷ்ணனும் அவர் வீட்டுக்கு அடிக்கடி செல்வோம். அனேகமாக சாப்பாட்டு நேரத்தில் அங்கேயே இருப்போம். எம். ஜி. ஆர். ‘பசிக்கிறது’ என்றாலும், ‘இருப்பா கணேசன் வரட்டும்’ என்பார்கள். அவருடைய அம்மா அந்த அளவுக்கு அவர்களுக்கு என்மேல் பாசம்.
எம். ஜி. ஆர். இரவு நேரத்தில் என்னையும், ராதாகிருஷ்ணனையும் டவுனுக்குப் பக்கத்திலுள்ள தியேட்டருக்கு சினிமா பார்க்கக் கூட்டிச் செல்வார். திரும்பி வரும்போது, சப்பாத்தி, பால் போன்றவைகளைச் சாப்பிடுவோம். எல்லோருக்கும் அவர்தான் செலவு செய்வார். அதுபோல நீண்ட நாட்கள் இருந்தோம். பிறகு நான் காஞ்சிபுரம் சென்று அண்ணாவுடன் சேர்ந்துவிட்டேன்.
அண்ணாவின் ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ என்ற நாடகத்தில் முதலில் எம். ஜி. ஆர். நடிப்பதாக இருந்தது. அவர் என்ன காரணத்தினாலோ நடிக்கவில்லை. அண்ணா என்னைத் தேர்ந்தெடுத்தார். நான் நடித்தேன். மறுபடியும் எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. சில வருடங்கள் கழித்து நான் சினிமாவில் சேரும்போது, எம். ஜி. ஆரைச் சந்தித்தேன்.
ஒரே காலகட்டத்தில் இருவரும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தோம். அதேசமயத்தில் இருவரும் அரசியலிலும் ஈடுபட்டிருந்தோம். ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியுமா? நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் இருந்தால், இருவருக்கும் ஒரே ரசிகர்கள்தான் இருப்பார்கள். நாங்கள் இருவரும் தனித்தனியே செயல்பட்டதால் அவருக்கு வேறு ரசிகர்கள், எனக்கு வேறு ரசிகர்கள் இருந்தார்கள்.
என்னை அவர் விமர்சிப்பார். அவரை நான் விமர்சிப்பேன். அது அரசியல் பற்றித்தான் பெர்சனலாக ஒன்றுமில்லை. பலர் இதை வைத்துக்கொண்டு நாங்கள் இருவரும் விரோதிகள் என்று பேசிக்கொண்டார்கள். அதைப் பற்றி நாங்கள் இருவருமே கவலைப்படவில்லை.
பல வருடங்கள் சென்ற பின் அவர் முதல் மந்திரியானார். அவர் பதவியிலிருந்த போது, பல முறை நான் சந்தித்திருக்கிறேன். அவரும் பல சம்பவங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் வந்திருக்கிறார். அவர் கையால் விருதுகள் வாங்கியிருக்கிறேன். எனக்கும் அவருக்கும் உள்ள நட்பு என்றும் மாறவில்லை.
எனக்கு சென்னையில் ஒரு தோட்டம் இருக்கிறது. அதுவும் எம். ஜி. ஆரின் தோட்டத்திற்கு பக்கத்திலேயே இருக்கிறது. என் தாயார் மறைந்த பிறகு அவர்கள் நினைவாக என் தோட்டத்தில் என் தாயாரின் உருவச்சிலையைத் திறப்பதற்கு வரவேண்டுமென்று எம். ஜி. ஆருக்குச் சொல்லியனுப்பினேன். உடனே ஒத்துக்கொண்டு, தன் மனைவியுடன் வந்து எனது தாயார் சிலையைத் திறந்து வைத்தார்.
தனது தாயைப்போல் கருதிய என் அம்மாவின் உருவச் சிலையைத் திறந்துவைத்ததில் அவர் மகிழ்ச்சியடைந்தார்.
இதேபோல் மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது. தஞ்சாவூரில் எனக்கு சாந்தி கமலா என்றொரு தியேட்டர் இருந்தது. இப்போது இல்லை. அந்த தியேட்டர் திறப்பு விழாவின் போதும் ‘நானே வந்து திறக்கிறேன்’ என்று சொல்லியனுப்பினார். தஞ்சாவூர் வந்து அந்தத் தியேட்டரைத் திறந்தார். எனக்கும் அவருக்கும் நட்பும், உறவும் இல்லையென்றால், இவையெல்லாம் நடந்திருக்குமா?
அதுமட்டுமில்லை ஒரு சமயம் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போன பிறகு, நான் இந்திரா காந்தியுடன் போய், எம். ஜி ஆரைப் பார்த்துவிட்டு வந்தேன். அதன் பிறகு எம். ஜி. ஆர் டில்லியில் இருந்து எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். ‘நான் அமெரிக்கா செல்கிறேன். அங்கு வந்து என்னைப் பாரு’ என்றார்.
உடனே நான் என் மனைவியை அழைத்துக்கொண்டு, நேராக நியூஜெர்சி சென்று இறங்கினேன். அங்கிருந்து பால்டிமோர் புறப்பட்டோம். என்னை வரவேற்க எம். ஜி. ஆர். பால்டிமோர் எர்ப்போர்ட்டில் ஐம்பது பேரை நிறுத்தியிருந்தார். அதில் தான் பழனி பெரியசாமி, டொக்டர் பி. ராமமூர்த்தி ஆகியோர் இருந்தார்கள். என்னை அழைத்துக்கொண்டு சென்றார்கள். நேராக பால்டிமோர் மருத்துவமனைக்குச் சென்றோம். தொப்பி, கண்ணாடி இல்லாமல் ஒரு போர்வை மட்டும் போர்த்திக் கொண்டு படுத்திருந்தார். எம். ஜி. ஆர்.
உள்ளே சென்றவுடன், அப்படியே படுக்கையில் இருந்து எழுந்து, கையை நீட்டினார். இராமாயணத்தில் ராமன் பரதனைச் சந்தித்தது போன்ற சம்பவம் இது. அவர் ராமச்சந்திரன். நான் பரதன். அவர் கையை நீட்டி வரவேற்றார்.
ஓடிச்சென்று இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதோம். அந்த நேரத்தில் அவரது மனைவி ஜானகி அம்மாவுக்கு ‘பைபாஸ் சேர்ஜரி’ செய்திருந்தார்கள். இருவரும் ஒரே ரூமில்தான் இருந்தார்கள்.
அவர்கள் கமலாவை கட்டிப்பிடித்துக் கொண்டு அழ, நான் எம். ஜி. ஆரை கட்டிப்பிடித்துக்கொண்டு அழ, கடைசியில் ஜானகி அம்மா கண்களைத் துடைத்துக்கொண்டு, ‘என்ன சின்னப் பிள்ளைபோல் அழுதுகொண்டு இருக்கிaர்கள். இருப்பது கொஞ்ச நேரம் தான், சிவாஜி ஊருக்குச் செல்ல வேண்டுமல்லவா? கொஞ்ச நேரம் பேசிக்கொணடிருங்கள்’ என்று எம். ஜி. ஆரிடம் கூறினார்கள்.
அதன்பின் நிறைய பேசிக் கொண்டிருந்தோம். நாட்டையும், நாட்டு மக்கள் நலத்தைப் பற்றியும் பேசினோம். ‘அண்ணே தயவு செய்து என்னிடம் மட்டும் ஒரு உண்மையைச் சொல்லுங்கள். உங்களுக்கு உடல் நிலை எப்படி இருக்கிறது? டொக்டர்கள் என்ன சொல்கிறார்கள்?’ என்று கேட்டேன். அவர் உதட்டைப் பிதுக்கி, தலையாட்டினார்.
உடல் நிலை சரியாகாதென்று முதலிலேயே அவருக்குத் தெரிந்துவிட்டது போலும் உடனே நான் ‘ஓ....’ என்று அழுத்து கொண்டு வெளியே ஓடிவந்துவிட்டேன். வெளியே வந்தவுடன், ராமமூர்த்தி போன்றவர்களையெல்லாம் என்னைப் பிடித்துக் கொண்டார்கள்.
கமலாவும் அறையை விட்டு வெளியே வருவதற்கு எழுந்த பொழுது எம். ஜி. ஆர். கமலாவின் கையைப் பிடித்து பக்கத்தில் உட்கார வைத்தார். தட்டுத் தடுமாறி ஏதோ ஒரு விஷயத்தை சொல்வதற்கு முயற்சி செய்தார்.
அவரால் சரளமாக பேசமுடியவில்லை. இருந்தாலும் சில சைகைகள் காட்டி ஒரு சில வார்த்தைகளால், சொல்ல விரும்பியதை அவரால் சொல்ல முடிந்தது.
‘இந்தப் பையன் என்னைப் போலவே முன்கோபக்காரன். கோபித்துக் கொள்ளும்படி விடாதே! அவன் கண்டதைச் சாப்பிடுவான். முதலில் அதிகமாக உப்புக் கொடுக்காதே சொல்லப்போனால் அவனைப் போல ஆப்பமும், கருவாட்டுக் குழம்பும் எனக்கும் அதிகப் பிரியம். அதை அடிக்கடி கொடுக்காதே. அதை நிறையச் சாப்பிட்டுத்தான் இந்த நிலைமை எனக்கு’ என்று கமலாவிடம் சொல்லியிருக்கிறார். ‘கணேசனுக்குப் பிறந்த நாள் வரும்போது, வாழ்த்துச் செய்தி அனுப்புகிறேன்’ என்றும் கூறியிருக்கிறார்.
நானும் கமலாவும் வெளியில் வந்து நண்பர் ஒருவர் வீட்டில் சாப்பிட்டுவிட்டு, விமானம் ஏறி இந்தியா வந்துவிட்டோம். அவர் கூறியபடியே பிறந்த நாள் வாழ்த்து அனுப்பினார்.
எம். ஜி. ஆரும் ஓரளவு உடம்பு சரியாகி இந்தியா வந்துவிட்டார். இதன்பின் ஒரு சம்பவம் நடந்தது. அப்போது ஆர். வெங்கட்ராமன் இந்திய ஜனாதிபதியாக இருந்தார். ஆர். வி. யுடன் டில்லியில் பல நாட்கள் இருந்திருக்கிறேன். சென்னையில் ஒரு விழாவுக்காக ஜனாதிபதி வந்திருந்தார். அப்போதைய நம்முடைய முதல் அமைச்சர் எம். ஜி. ஆரும் அழைக்கப்பட்டிருந்தார்கள். நானும் சென்றிருந்தேன்.
கவர்னர் பக்கத்தில் எம். ஜி. ஆர். உட்கார்ந்திருந்தார். அப்போது எம். ஜி. ஆர். உன்னைக் கூப்பிட்டு ‘இங்கே வா! பக்கத்தில் உட்கார் என்றார். நான் தயங்கினேன். உடனே என் கையைப் பிடித்து தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டார்.
‘ஜனாதிபதி இன்னும் பத்து நாட்களில் ஒரு மருத்துவமனையைத் திறக்க இங்கு வரப்போகிறார். அவர் வந்து சென்றவுடன், நீ வா உன்னிடம் ஒரு பெரிய பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்’ என்று மெதுவாக சைகைகள் காட்டி விளக்கிச் சொன்னார். வீட்டிற்கு சென்றதும் என் மனைவியிடம் அண்ணன் எம். ஜி. ஆர். இப்படி கூறினாரென்று சொன்னேன்.
‘இருவருமே சேர்ந்து அவரைப் பார்க்க போகலாம்’ என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அந்த மருத்துவமனை திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி வருவதற்கு முன்பாகவே அண்ணன் எம்.ஜி. ஆர். அமரராகிவிட்டார். என்னிடம் பேசிய நாலைந்து நாட்களில் அவர் மறைந்து விட்டார். அதன்பின் என்ன செய்ய முடியும்? எல்லாம் இறைவன் செயல். அவர் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தித்தோம்.
குடும்ப துக்கம் விசாரிக்க வேண்டுமல்லவா? அதற்காக இரண்டு நாட்கள் கழித்து அவரது தோட்டத்திற்குச் சென்றேன். ஜானகி அம்மாளைப் பார்த்து துக்கம் விசாரித்தேன். அவர்கள் ‘என் தம்பி கணேசன் வீட்டிற்கு வரப் போகிறான். அவனிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசப் போகிறேன். அவனுக்குப் பிடித்த ஆப்பம், கருவாட்டுக் குழம்பு செய்து வை’ என்று உங்கள் அண்ணன் கூறினாரே. ஆனால் உங்களிடம் பேசாமலே சென்றுவிட்டாரே!’ என்று வருத்தத்தோடு கூறி அழுதார்கள் என்ன செய்வது? எம். ஜி. ஆர். வாழ்வாங்கு வாழ்ந்து கடவுளாகி விட்டார்.
அவரைப்பற்றி சொல்வதில் எனக்குப் பெருமை உண்டு. ஏனென்றால், அவர் என்னை உண்மையாக நேசித்தார். நானும் அவரை நேசித்தேன். அவரது வாழ்க்கை வரலாற்றில் சில கட்டங்களில் நானும் ஒரு முக்கிய பாத்திரமாக இருந்தேன். எம். ஜி. ஆர். அவர்கள் அன்றும் இன்றும் என்றும் என்னுடைய மனதில் ஒரு நல்ல நண்பராக நிறைந்திருக்கிறார்.’
இவ்வாறு சிவாஜி குறிப்பிட்டுள்ளார்.