னிமாவில் நடிக்க விரும்பிய சந்திரசேகருக்கு, முதலில் நாடகங்களில் வாய்ப்பு கிடைத்தது.
4 வருடங்களில் படிப்படியாக முன்னேறி நாடக கதாநாயகனாக உயர்ந்தார்.
நாடகத்தில் நடித்த போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து சந்திரசேகர் கூறியதாவது,
“முதலில் சாதாரணமாக தலைகாட்டி விட்டுப் போகும் வேடங்கள் தான் கிடைத்தன. அதுவே போதும்
என்றிராமல் நாடகத்தின் ஒட்டுமொத்த கேரக்டர்கள் பற்றியும், அந்த கேரக்டர்களுக்கான
வசனங்கள் பற்றியும் தெரிந்து கொண்டேன். ஏற்ற இறக்கங்களோடு பேசிப் பார்த்தேன்.
ஒரு நாடகத்தில் யாராவது ஒருவர் வராமல் இருந்தால் அவருக்குப் பதிலாக நான் நடிக்கும்
அளவுக்கு தேர்ந்திருந்தேன். அதனால்தான் சின்ன வேடத்தில் தோன்றிய அதே நாடகத்தில்,
கதாநாயகன் வேடம் வரை வர முடிந்தது. நடிப்பு என்பது எனக்குள் வெறியாகவே மாறிப்போனதால்,
ஊர் ஊராக நாடகம் போடப்போகிற இடத்தில் கூட, ரசிகர்கள் கிடைத்தார்கள்.
சீர்காழியை
அடுத்த கோவில்பத்து என்ற ஊரில் எங்கள் நாடகக் குழு கேம்ப் போட்டிருந்த போது
வித்தியாசமான அனுபவம் கிடைத்தது. அதாவது பகல் முழுக்க காய்ச்சலாக இருக்கும். மாலை 6
மணி ஆனதும், காய்ச்சல் விட்டுவிடும்! பகலில் காய்ச்சல் காரணமாக சாப்பிட முடியாத நிலை.
இரவில் நாடகத்தில் நடித்ததாக வேண்டும். ‘பசி’யையும், காய்ச்சலையும் மறந்து ஏற்ற
கேரக்டரோடு ஒன்றி விடுவேன். ரசிகர்களின் கரகோஷம்தான் எனக்கு சாப்பாடு!
ஒரு மாதம் இப்படி நீடித்த அந்த மர்மக் காய்ச்சலில், உடம்பு பாதியாகிவிட்டது. எனக்கு
எப்போதுமே சுய மரியாதை உணர்வு அதிகம். நாடக கம்பெனி முதலாளி கொஞ்சம் முரட்டுக் குணம்
கொண்டவர். அவரை பார்த்தாலே நாடகக் குழுவில் உள்ள அத்தனை பேரும் பயப்படுவார்கள். நான்
மட்டும் இதில் விதிவிலக்கு. முதலாளி என்ற மரியாதை உண்டு என்றாலும், தேவையில்லாமல்
ஏன் பயப்பட வேண்டும்’ என்று நினைப்பேன்.
“டீ வாங்கி வா!”
இந்த என் சுய மரியாதைக்கும் ஒரு நாள் சோதனை வந்தது. ஒருநாள் மேக்கப் ரூமில் நடிக்கத்
தயாராகிக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த முதலாளி என்னை அழைத்தார். “டீ
வாங்கிட்டு வாப்பா” என்றார்.
வழக்கமாக வரும் டீக்கடை பையன் அன்று வரவில்லை என்பதால் தான் என்னிடம் “டீ” வாங்கி
வரச்சொன்னார். என்றாலும் அவர் கேட்ட தோரணை என் தன்மானத்தை உசுப்பி விட்டது. உடனே
நான் அவரிடம் “உங்களுக்கு டீ வாங்கிட்டு வர்றது என் வேலையில்லை. நடிக்கிறதுதான் என்
வேலை” என்று சொல்லிவிட்டேன்.
நான் இப்படிச் சொன்னதும் மேக்கப் ரூமில் இருந்த நடிகர்கள் முகத்தில் ஒருவித பதற்றம்
தெரிந்தது. அடுத்து முதலாளியின் ‘ரியாக்ஷ்ன்’ என்ன மாதிரி இருக்குமோ என்பதில்
ஏற்பட்ட பயம் அது.
ஆனால் நடந்தது என்ன தெரியுமா? முதலாளி என் பதிலை சர்வசாதாரணமாக எடுத்துக் கொண்டார்.
நான் “டீ” விஷயமாக அவரிடம் பேசியதை காட்டிக் கொள்ளாமல், வேறு சப்ஜெக்ட் பற்றி பேசத்
தொடங்கி விட்டார். நாடகத்தில் நடித்த காலகட்டத்தில் என் குரல் சன்னமாக இருக்கும்.
குரல் கம்பீரமாக இருக்க, தொடர்ந்து பேசி பயிற்சி பெற விரும்பி னேன்.
எங்கள் நாடகம் நட க்கும் இடத்தைச் சுற்றி 50 கிராமங்களுக்கு மேல் இருக்கும். காலை
நேரத்தில் இந்த கிராமங்களுக்கு வண்டி கட்டி மைக்கில் நாடகம் பற்றி அறிவிப்பார்கள்.
இப்படி மைக்கில் அறிவிக்கும் பொறுப்பை, நானாகக் கேட்டு பெற்றுக் கொண்டேன்! காலை 10
மணிக்கு இப்படி அன்பார்ந்த பெரியோர்களே! என்று ஆரம்பித்தால், அது முடிய மாலை 6 மணி
ஆகி விடும்.
அதன் பிறகு 6 1/2 மணிக்கு தொடங்கும் நாடகத்தில் நடிக்கத் தயாராக வேண்டும். இப்படி
பகல் முழுக்க ‘மைக்’கில் கத்திப் பேசிவிட்டு, நாடகத்திலும் உணர்ச்சி மயமான
காட்சிகளில் நடிக்கும் போது வாயில் இருந்து ரத்தம் கசியும்.
ஆனாலும் இப்படியான கடினப் பயிற்சிதான், என் குரலை வளமாக்கியது.
மழை சீசனில் நாடகம் நடத்த முடியாது. அதனால் ஊருக்குப் போய் விடுவேன். அப்பாவிடம் என்
நாடக அனுபவங்களை சொல்லுவேன். ராஜா தேசிங்கு நாடகத்தில் தேசிங்காக நடித்ததை
அப்பாவிடம் சொன்னபோது “தேசிங்காக நடித்துக்காட்டு” என்றார் அப்பா. உடனே வசனங்களை
ஏற்ற இறக்கத்துடன் தேசிங்குராஜனாகவே மாறி அப்பாவிடம் நடித்துக்காட்டினேன்.
கண் கலங்கிப் போன அப்பா என்னிடம், ‘நடிக்கணும்னு ஆசைப்பட்டே! அதில் திறமை
இருந்தாதான் வரமுடியும். இப்போது உன் திறமையில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது.
நிச்சயம் நீ சினிமாவிலும் ஜெயிப்பாய். நீ சிங்கக் குட்டியடா!” என்று சொன்னபடி என்
முதுகில் தட்டிக் கொடுத்தார்.
ஆனால், என் சினிமாக் கனவு பலிக்கும் முன்பே அப்பா இறந்து போனார்.
வீட்டில் நான்தான் கடைசிப் பையன் அப்பா இறந்ததற்கு மொட்டை போட்டு, 16ம் நாள் காரியம்
முடியும் வரை வீட்டில் இருந்தேன். அதன் பிறகு திருவெண்காட்டில் நடந்த எங்கள்
நாடகத்துக்குப் போனேன்.
அந்த நாடகத்தில் எனக்கு பொலிஸ் இன்ஸ்பெக்டர் வேடம். ஒரு காட்சியில்
உணர்ச்சிவசப்பட்டு பேசிய வேகத்தில் தொப்பியைக் கழற்றிவிட்டேன். என் மொட்டைத் தலையைப்
பார்த்து, ரசிகர்கள் சிரித்து விட்டார்கள். உடனே நான் நடிப்பதை நிறுத்திவிட்டு,
ஒலிபெருக்கியில் ரசிகர்களிடம் பேசினேன். “பலதரப்பட்ட வேடங்களில் என் நடிப்பை
பார்த்திருப்பீர்கள். இந்த பொலிஸ் கெரக்டரில் என் நடிப்பைத்தாண்டி நீங்கள்
சிரிக்கிற காரணம், என் அப்பாவின் மரணத்துக்காக நான் போட்ட மொட்டை. இது தந்தையின்
இழப்புக்காக ஒரு மகனின் கடமை.
அந்தக் கடமையை முடித்து விட்டுத்தான் உங்கள் முன்பாக மேடையேறியிருக்கிறேன். இதற்குப்
பிறகும் என் மொட்டைத் தலைக்காக நீங்கள் சிரிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்”
என்றேன்.
நான் பேசி முடித்ததும் ரசிகர்கள் மத்தியில் ஒரு அசாதாரண அமைதி நிலவியது, சிலருடைய
கண்கள் கலங்கியிருந்தன. என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு நடித்து முடித்தேன்.
எனக்கு அப்போது 20 வயதுதான். அந்த ஊரில் இருந்துதான் சினிமாவில் நடிக்க சென்னைக்கு
புறப்பட்டேன்.
திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு மல்லிகைப்பூ ஏற்றி வந்த லொறியில், மல்லிகை
வாசனையை முகர்ந்து கொண்டே சென்னை வந்து சேர்ந்தேன்.
அது 1975ம் வருடம். அப்போதுதான் டெலிவிஷன் மக்களிடையே அறிமுகமாயிருந்தது. நான்
மைலாப்பூர் மாங்கொல்லையில் உள்ள, ஒரு லொட்ஜில் மாதம் 150 ரூபாய் வாடகையில் தங்கியபடி
சினிமா வாய்ப்புக்கு முயன்றேன்.
அப்போது சென்னை டெலிவிஷனில் பணியாற்றிய கவிஞர் தஞ்சை வாணனின் நட்பு கிடைத்தது. அவரது
நாடகங்கள் டெலிவிஷனுக்காக சீரியலாக உருவானபோது, எனக்கும் வாய்ப்பு கொடுத்தார். மாதம்
ஒரு டெலிவிஷன் நாடகம் கிடைத்தது. நாடகத்தில் நடிக்க எனக்கு கிடைத்தது 75 ரூபாய்.
நான் நடித்த முதல் நாடகம் ஒளிபரப்பான நாளில் அதை டிவியில் எப்படியாவது பார்த்துவிட
ஆசை. நான் இருந்த லொட்ஜ் ரூமில் டெலிவிஷன் கிடையாது. எனவே அப்போது எனக்கு
அறிமுகமாயிருந்த ஆர்ட் டைரக்டரின் வடபழனி வீட்டுக்கு நானும் அவரும் மைலாப்பூரில்
இருந்து பஸ்சில் புறப்பட்டோம்.
பஸ் வடபழனி வந்து சேரவும், நாடகம் ஒளிபரப்பாகும் நேரம் வரவும் சரியாக இருந்தது.
அங்கிருந்து ஓட்டமாய் ஓடி, நான் வாசலில் கால் வைத்த போது தெரிந்தது என் முகம்தான்.
அப்போதுதான் நான் நடித்த காட்சி டிவியில் திரையில் ஓடிக் கொண்டிருந்தது. என் முகத்தை
நானே திரையில் பார்த்தது அதுதான் முதல் தடவை என்பதால், அந்த நேரத்தில் ஏற்பட்ட என்
பரவச உணர்வை என்னால் வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியவில்லை. அப்போதே சினிமாவில்
நடித்து ஜெயித்து விட்ட மாதிரி அப்படி ஒரு சந்தோஷம்.
இப்படி டிவி நாடகங்கள் தொடர்ந்து கொண்டிருந்த நேரத்தில் தஞ்சை வாணனிடம் இருந்து
நாடகத் துறை இன்னொருவர் கைக்கு மாறிவிட்டது. அவருக்கு ஏனோ என்னை பிடிக்காமல்
போயிருக்கிறது. அடுத்த நாடகத்தில் நடிப்பதற்காக அவரை சந்தித்த போது, “கெரக்டர்
இருக்கிறது” என்றார். மற்ற நடிகர் - நடிகைகளுக்கு இன்னின்ன கெரக்டர் என்று சொன்னவர்,
என்னிடம் மட்டும் எதுவும் சொல்லவில்லை. கடைசியில் எனக்கு கிடைத்தது “இறந்து போன
கணவனின் அசரீ ரி குரல்!”
அதாவது நாடகத்தில் என் குரல் மட்டும்தான் ஒலிக்கும் நான் பேச வேண்டிய வசன பேப்பரை
உதவி இயக்குநர் என்னிடம் நீட்டியபோது, எனக்கு வந்ததே கோபம்.
“இது டிவி நாடகம். ரேடியோ நாடகத்துக்குத்தான் குரல் தேவை” என்று சொன்னபடி, அந்த
பேப்பரை வீசி எறிந்தேன்.
இந்த விஷயம் புது டிவி இயக்குநருக்கு போக, என்னை வரச்சொன்னார்.
போனேன். என்னைப் பார்த்ததும், “எல்லோருடைய முன்னிலையிலும் ஸ்கிரிப்ட் பேப்பரை தூக்கி
வீசினாயாமே?” என்று கேட்டார்.
என்னை கோபப்படுத்த வேண்டும் என்பதற்காக அவரே இப்படியொரு சூழ்நிலையை
உருவாக்கியிருக்கிறார் என்பது புரிந்தது.
“நடிப்பாயா!? மாட்டாயா?” என்று கேட்டார்.
“முடியாது” என்றேன்.
டிவி நாடகம் கை நழுவியது.
அன்று என்னை விரட்டி அடித்த அதே டிவி டைரக்டர், 5 ஆண்டுகள் கழித்து என்னை கை
குலுக்கி பாராட்டிய சம்பவமும் நடந்தது. பாரதிராஜா இயக்கத்தில் நான் நடித்த
“நிழல்கள்” படத்தின் பிரத்தியேக காட்சி மைலாப்பூரில் உள்ள “மேனா” தியேட்டரில்
நடந்தது.
படம் பார்த்த முக்கிய பிரமுகர்கள் டைரக்டர் பாரதிராஜாவுக்கு கைகொடுத்து வாழ்த்து
சொல்கிறார்கள். அப்போது ஒரு கரம் என் பக்கம் நீளுகிறது. பார்த்தால் டிவி இயக்குநர்.
“வாழ்த்துக்கள்! பிரமாதமா நடிச்சிருக்கீங்க” என்று கை குலுக்கி வாழ்த்தினார்.