Wednesday, February 20, 2013

மிஸ்ஸியம்மா மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் பி.சுசீலா


சுகமான குரலென்றால் சுசீலாவின் குரல் என்ற கண்ணதாஸனின் வார்த்தைகள் சத்தியமானது. 1952ல் திரையுலகத்தில் நுழைந்த பி. சுசீலா சிறந்த பாடகிக்கான தேசிய விருதை ஐந்து முறை பெற்றுள்ளார். (1969, 1971, 1971, 1982, 1983)
சரியான உச்சரிப்பால் தமிழை கெளரவப்படுத்திய பி. சுசீலா 1935 ஆம் ஆண்டு பிறந்தார்.
‘ஆந்திராவில் விஜயநகரம் என்கிற சரித்திரப் புகழ்வாய்ந்த ஊரில் நான் பிறந்தேன். அப்பா முகுந்தராவ், அம்மா சேஷாந்திரம், படிக்கிற போதே எனக்கு கர்நாடக சங்கீதம் சொல்லித் தரவேண்டும் என்று நினைத்தார் அப்பா. எனக்குச் சங்கீதம் கற்றுக்கொள்வதில் விருப்பமில்லை. ‘சங்கீதத்தைக் கற்றுக்கொள்ளமாட்டேன்’ என்று அழுவேன். மகளே அழு, ஆனால் நன்றாகப் பாடி முடித்த பின் அழு’ என்று சொல்வார்.
பள்ளிப் படிப்பு முடித்த பிறகு சங்கீதத்தில் டிப்ளோமா வாங்கினேன். என் அக்கா, குடும்பத்தோடு சென்னையில் இருந்தார் என்பதால் அடிக்கடி சென்னை வருவேன். அப்படி வரும்போது சென்னை வானொலியில் ‘பாப்பா மலர்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடுவேன். பாப்பா மலர் நிகழ்ச்சியை நடத்தும் வானொலி அண்ணா ஒருமுறை எங்கள் வீட்டுக்கு வந்தார். என் அப்பாவைச் சந்தித்து, ‘சுசீலா சினிமாவில் பாடினால் நன்றாக இருக்கும்’ என்றார். நான் சினிமாவில் பாடுவதில் அப்பாவுக்கு இஷ்டமில்லை. ஆனால் எனக்கோ சினிமாப் பாடல் பாட ரொம்பப் பிடிக்கும்.
கடைசியில் சினிமாவில் பாடுவதற்கு அப்பா அனுமதி கொடுத்தார். பெண்டியால் நாகேஸ்வர ராவ் இசையமைப்பில் ‘ஏதுக்கழைத்தாய்’ என்கிற பாட்டுதான் முதல் முதலாக நான் சினிமாவுக்காகப் பாடிய பாட்டு. கொஞ்சம் இடைவெளி விட்டு ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ படத்தில் அஞ்சலிதேவிக்காக ஒரு தாலாட்டுப் பாடல் பாடினேன். இதே படத்தில் வில்லி கேரக்டரில் நடித்தார் நடிகை லலிதா. இவர் விக்கி, விக்கி பாடுகிற ‘உன்னை கண் தேடுதே’ பாட்டு வெளியானது தான் தாமதம், தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் என் பெயர் பரவி விட்டது. இப்படி ஆரம்பமானது பி. சுசீலாவின் திரை வாழ்க்கை.
‘பெற்ற தாய்’ படத்திற்கு பின் ஏவி. எம். ஸ்டுடியோவிற்காக பணியாற்றிய பி. சுசீலாவிற்கு தமிழ் சொல்லித் தர லெஷ்மிநாராயணன் என்பவரை ஏவி.எம். ஏற்பாடு செய்தார். குறுகிய காலத்தில் தமிழை தன்வசப்படுத்திக்கொண்ட பி. சுசீலா ‘மிஸ்ஸியம்மா’ படத்தின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றார். 1955ல் தொடங்கி 1975 வரை வெளிவந்த அநேக படங்கள் பி. சுசீலாவின் பாடலோடு தான் வெளிவந்தன. விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் நூற்றுக்கு மேற்பட்ட ஹிட் பாடல்களை பாடிய பி. சுசீலாவின் குரல் அனைத்து தரப்பினராலும் ரசிக்கப்பட்டது.
தமிழக அரசு மூன்று முறை (1969, 1981,1989) மாநில விருதையும், ஒருமுறை பாரதிதாசன் விருதையும், 1991 கலைமாமணி விருதையும் வழங்கி பி.சுசீலாவை கெளரவித்திருக்கிறது.
என் தலைக்கு மேலே ஒரு மேகம் குடைபிடித்துக்கொண்டே வருவதுபோல் கடந்த இருபத்தைந்து வருடங்களாய் என் வாழ்வின் ஓரமாகவே நீங்கள் நடந்து வந்திருக்கிaர்கள் தாயே’ என்று சுசீலாவைப்பற்றி அவரது ரசிகரான வைரமுத்து ‘இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள்’ என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். இதைப்போல் அநேக தமிழர்களின் வாழ்வோடு பி. சுசீலாவின் குரல் கலந்திருக்கிறது.

No comments:

Post a Comment