பாலு சென்று கதவைத் திறந்தார். வாசலில் சாவித்திரியின் பெற்றோரும், பாலுவின் தகப்பனாரும் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பின்னே, அவர்களை அங்கு அழைத்துக்கொண்டு வந்தவரும் நின்றுகொண்டிருந்தார். அவர் யார் தெரியுமா?
கதவைத் திறந்த பாலுவிற்கு ஒரே ஷாக் முதலில் ரூமிற்குள் வந்தவர் கோதண்டபாணிதான். பாலு அன்று காலை ஒரு படப்பிடிப்பிலே பாடியதை அறிந்துகொண்டு, பாலு இருக்குமிடத்தைத் தெரிந்துகொண்டு சாவித்திரியின் பெற்றோரையும் உடன் அழைத்துக்கொண்டு வந்தவர் கோதண்டபாணிதான்.
சாவித்திரியின் பெற்றோர் கோபமாக உள்ளே வந்தாலும், தங்கள் பெண்ணைக் கண்டதும் அழுதுவிட்டார்கள். நடந்ததையெல்லாம் பாலு விவரமாகக் கூற, ஒரு நல்ல நாள் பார்த்து சாவித்திரியைக் கொண்டு வர ஒப்புக்கொண்டு அவளை அழைததுக்கொண்டு கிளம்பினார்கள்.
பாலுவின் சினிமா வாழ்விற்கு உறுதுணையாக நின்ற கோதண்டபாணிதான், பாலுவின் வாழ்வு நல்லபடியாக அமையவும் காரணமாயிருந்தார். இரு தரப்பிலும் பேசி, பாலுவையும் சாவித்திரியையும் இணைத்தவர் அவர் தான்.
இரு குடும்பத்தினரும் மனம் வந்து இந்தத் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் தனிக்குடித்தனம் அமைத்த பாலுவிற்கும், சாவித்திரிக்கும் பெரியவர்கள் துணையாக இருக்கவில்லை.
முதன் முதலாக சாவித்திரி கர்ப்பமாக இருந்தபோது பெரியவர்கள் துணையில்லாமல் கணவனும் மனைவியும், மனைவிக்குக் கணவனும் மட்டுமே ஆதரவாக இருந்தார்கள்.
முதல் குழந்தை, பெண் குழந்தை பிறந்தது. இசை சம்பந்தமான ‘பல்லவி’ எனப் பெயர் சூட்டப்பட்டது. பல்லவி குழந்தையாக இருந்தபோது திடீரென அழுதாள். காரணம் தெரியாமல் பாலுவும் அவர் மனைவியும் தவித்தார்கள்.
எத்தனையோ நாள் இரவில் காரை எடுத்துக்கொண்டு காற்றோட்டமாக பீச்வரை சென்று குழந்தை தூங்கியதும் வீட்டிற்குத் திரும்பிய இரவுகள் பல உண்டு.
ஆனால் எந்த பிரச்சினைகள் வந்தாலும், கணவன் மனைவியிடையே அது பிரதிபலித்ததில்லை. உண்மையான காதல், பாசம் ஆகிய இரண்டும் பிரச்சினைகளைச் சுருக்குவதற்கு பெரிதும் உதவின.
பாலுவிற்கு எந்தக் காலத்திலும் நண்பர்கள் பட்டாளம் அதிகம். அதனால் உறவினர்கள் ஆதரவில்லை என்பது ஒரு குறையாகவே தெரிய வில்லை பாலுவிற்கும், சாவித்திரிக்கும்.
பல்லவி பிறந்தவுடனேயே, பாலுவின் குடும்பத்தினரும், சாவித்திரியின் குடும்பத்தினரும் மனம் மாறி குழந்தையின் 8!வி=தி!8, பாலு வீட்டிற்கு வந்து போனார்கள். இந்தக் காலக்கட்டத்தில் பாலு மிகவும் பிஸியாகி, தனது சினிமா மார்க்கெட்டைத் தக்க வைத்துக்கொள்ள முழு மூச்சுடன் பாடல்களைப் பாடத் தொடங்கினார்.
பாலுவின் துணையியார் இரண்டாவது முறையாகக் கருத்தரித்தார். முதல் குழந்தைக்கும இரண்டாவது குழந்தைக்குமிடையே இடைவெளி ஒரு வயதை விடக் குறைவாகவேயிருந்தது. கைக் குழந்தையை வைத்துக்கொண்டு கணவன், மனைவி இருவரும் சிரமப்பட்டனர்.
இருந்தாலும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற இலட்சியம் வெறியாக மாறியிருந்த காலம் அது. சோதனைகளைச் சிரித்த முகத்துடன் தாங்கிக் கொண்டார்கள். சாவித்திரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது, சாவித்திரியின் தாயார், பிறந்த வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்தார். பாலுவிற்கு, சாவித்திரியை அந்த நிலையில் அனுப்ப மனமில்லை. அந்த நேரத்தில் புதிதாகப் பிறக்கப் போகும் இந்தக் குழந்தை உறவை ஒட்டவைக்கும் ஒரு பாலமாக இருக்கும் என்ப¨தை மறுக்கவும் மனமில்லை.
எனவே,அன்றிருந்த ரிக்கார்டிங்கை அவசர அவசரமாக முடித்துவிட்டு, சாவித்திரியை வழியனுப்ப ஸ்டேஷனுக்குப் போனார் பாலு. சாவித்திரியும் தன் தாயுடன் கிளம்பினார். கணவரை விட்டுப் பிரியாத சாவித்திரிக்கு அந்தப் பிரிவு மிகுந்த கஷ்டத்தைத் தந்தது. பாலு அவரைத் தேற்றி வழியனுப்பி வைத்தார். பச்சை விளக்கு எரிந்தது.
அந்தப் பச்சை விளக்கு எரிவது பாலுவிற்குத் தன் வாழ்வு. ‘பசுமை’ யாக இருக்கப் போவதற்காக எரிவதாகத் தோன்றியது. வண்டி கிளம்பியது. பாலுவைத் தனிமை வாட்டியது. யாருமில்லா வீட்டில் நுழைய பாலுவிற்குப் பிடிக்கவில்லை. படுக்கையில் படுத்து தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தார் பாலு.
டெலிபோன் மணியடித்தது. பாலு அதை அட்டண்ட் செய்தார். அரக்கோணம் ஸ்டேஷன் மாஸ்டர் பேசினார். பாலுவிற்கு ஒரு மகன்,அரக்கோணம் ரயில்வே ஆஸ்பத்திரியில் பிறந்திருப்பதாகக் கூறி பாலுவை வாழ்த்தினார்.