Wednesday, February 20, 2013

உலகம் சமநிலை பெற வேண்டும்

இறைவன் மனிதர்களுக்கு வாழ்வதற்கு எல்லா வளங்களையும் அளித்திருந்தும் தம்மிடையே அவற்றைப் பகிர்ந்துகொண்டு இன்பமாய் வாழ மனமின்றி சுயநலத்தால் மதிமயங்கிய மாந்தர்கள் சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் வளரக் காரணமாகின்றனர். இதனால் மனிதர்களுக்குள்ளே பல்வேறு வகைகளிலும் கருத்து வேறுபாடுகளும் சண்டை சச்சரவுகளும் பெருகி சமூக அமைதி குலைகிறது.
மனிதர்களை மிருகங்களிடமிருந்து மேம்படுத்தி உயர்வைத் தரும் கட்டுக்கோப்பான சமுதாய அமைப்பின் சட்ட திட்டங்கள் யாவினையும் மீறி அநீதிப் பாதையில் செயல்படும் வலிமையுள்ளவர்கள் செல்வந்தர்களாக வாழ்க்கையில் வலிமையற்ற மனிதர்கள் குறைந்த வருவாயில் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி வாழ வேண்டிய ஏழ்மையில் தள்ளப்படுகின்றனர்.
பல்வேறு காரணங்களால் சமூக நீதி நிலைபெறாமையால் ஏழைகள் மேலும் ஏழைகளாகையில் செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்.
இந்நிலை தொடர்கையில் ஏழ்மையில் தள்ளப்பட்ட மனிதர்கள் மனம் நொந்து வாடும் நிலை தொடர்கிறது. இம்மன வாட்டம் நாளடைவில் பெரும் கோபமாக உருவெடுத்து அத்தகைய கோபம் முற்றுகையில் கலவரமாக வெடித்து பொது சொத்துகளுக்கு சேதாரம் ஏற்பட்டு மனிதர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டு மடியக்கூடிய அளவுக்குப் பெரும் கேடாக முடிகிறது. இத்தகைய சமூக நிலை உருவாவது ஒரு நாட்டின் வளர்ச்சியைப் பாதித்துப் பெரும் வீழ்ச்சியை சந்திக்க நேரிடுகிறது.
எகிப்து, லிபியா உட்பட உலக நாட்கள் பலவற்றிலும் ஏற்பட்ட கலவரங்களும் உள்நாட்டுப் போரும் நம் நாட்டில் ஏற்படாமல் தடுப்பது மக்கள் அனைவரின் தலையாய கடமையாகும். இதற்கு ஒரே வழி சமூக நீதி நிலைநாட்டப்பட்டு மக்களிடையே நிலவும் ஏற்றத் தாழ்வுகள் குறைந்து அனைவரும் சம அந்தஸ்தைப் பெற்று அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ ஏற்ற சூழ்நிலை உருவாக்கப்படுவதேயாகும்.
அத்தகைய சமநிலை உலகில் ஏற்பட வேண்டுமெனில் மனிதர்கள் அறியாமை இருளிலிருந்து மீண்டும் அறிவொளி பெற வேண்டும்.
அதற்கு ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் நலம் பேணும் நல்லாட்சி மலர வேண்டும். உலக நாடுகளிடையே ஒற்றுமை வளர வேண்டும்.
போர், பகை அச்சம் நீங்கி வளர்ச்சிப் பாதையில் உலகம் செல்ல வேண்டும். போதும் என்ற மனம் கொண்டு மனிதர் யாவரும் பேராசை நீக்கி இருப்பதைக் கொண்டு, தானும் சிறப்புடன் வாழ்ந்து பிறருக்கும் அளித்து உலக மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே எனும் ஒரு உன்னத நிலையில் ஒருங்கிணைந்து வாழ வேண்டும். அப்போது உலகம் நிலைபெற்று இயற்கை வளங்கள் பெருகி அழிவுப் பாதையிலிருந்து மீண்டு செழிக்கும்.

No comments:

Post a Comment