Wednesday, February 6, 2013

ரஜனியின் திரையுலக வாழ்வில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய படம்

ரஜனியின் திரையுலக வாழ்வில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய படம்

புவனா ஒரு கேள்விக் குறி
ரஜினிகாந்தின் திரை உலக வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய படம் புவனா ஒரு கேள்விக்குறி. இந்தப் படத்தின் இயக்குனர் எஸ். பி. முத்துராமனிடம் புவனா ஒரு கேள்விக்குறி தொடர்பாக பேட்டி கண்டபோது,
ரஜினிகாந்தை நல்லவராக நடிக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது? என் டைரக்ஷனில் ரஜினிகாந்த் நடித்த முதல் படம் ‘புவனா ஒரு கேள்விக்குறி’
வில்லன் வேடத்திலும், ஸ்டைல் நடிப்பிலும் அவர் ஏற்கனவே முத்திரை பதித்திருந்தார் அவரை, புதுமையான வேடத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று நானும், பஞ்சு அருணாசலமும் முடிவு செய்தோம்.
இந்தப் படத்தில் 2 கதாநாயகர்கள் அதுவரை நல்லவராகவே நடித்து வந்த சிவகுமாரை கெட்டவராகவும், கெட்டவராகவே நடித்து வந்த ரஜினிகாந்தை நல்லவராகவும் நடிக்க வைக்கத் தீர்மானித்தோம்.
இதுபற்றி அறிந்ததும், ‘ரசிகர்கள் இந்த மாற்றத்தை ஏற்பார்களா?’ என்று சிவகுமார் கொஞ்சம் தயங்கினார். ஆனால் பிறகு அதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு அந்த கதாபாத்திரத்தை ஏற்று மிகச் சிறப்பாக நடித்தார்.
புதிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததில் ரஜினிக்கு ஏக மகிழ்ச்சி அற்புதமாக நடித்து, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டினார். இந்தப் படம் வெளியாகும் வரை, சிறந்த வில்லனாகவும், ஸ்டைல் மன்னனாகவும் மட்டுமே ரஜினியை ரசிகர்கள் நினைத்தார்கள்.
அவர் எல்லாவித பாத்திரங்களையும் ஏற்று நடிக்கக்கூடியவர் என்பதை எடுத்துக்காட்டிய படம், ‘புவனா ஒரு கேள்விக்குறி’ இப்படம், ரஜினியின் திரை உலக வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. இவ்வாறு எஸ். பி. முத்துராமன் கூறினார்.

No comments:

Post a Comment