Sunday, November 1, 2020
சிரேஷ்ட ஊடகவியலாளரான ஈஸ்வர லிங்கம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி
மாகந்துரே மதுஷ்
பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலக குழுவின் தலைவர் மாகந்துரே மதுஷ் எனப்படும் சமரசிங்க ஆராச்சிலாகே மதுஷ் லக்ஸித கடந்த 20ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கொழும்பு, மாளிகாவத்தை, கெத்தாரம சர்வதேச விளையாட்டு மைதானத்திற்கு பின்னால் உள்ள எப்பல் வத்தை என அழைக்கப்படும் இடத்தில் அமைந்துள்ள தொடர் மாடி வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் மாடியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
அங்கு பொலிஸாருக்கும் பாதாளகுழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது.
மாளிகாவத்தையில் ஹெரோயின் போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாக மாகந்துரே மதுஷ் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். அந்த போதைப்பொருளை கைப்பற்றுவதற்காக அவரை அந்த பகுதிக்கு அழைத்துச் சென்ற போது பாதாள குழு உறுப்பினர்களால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி சமரில் மாகந்துரே மதுஷ் உயிரிழந்ததுடன், இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் காயமடைந்தனர். இவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது மாகந்துரே மதுஷ் அடையாளம் காட்டிய இடத்தில் இருந்து 220 மில்லியன் ரூபா பெறுமதியான 22 கிலோகிராம் ஹெரோயின், 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் பாதள உலக குழு உறுப்பினர்கள் பயன்படுத்திய உந்துருளி என்பனவும் காவற்துறையினால் கைப்பற்றப்பட்டன.
பாதாள உலகக் குழுவின் தலைவரும் போதைப்பொருள் கடத்தற்காரருமான மாக்கந்துரே மதுஷ், கடந்த 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் டுபாயில் கைதுசெய்யப்பட்டார்.
அங்கு இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வொன்றில் வைத்து அவரும் அவருடன் மேலும் 25 பேரும் கைது செய்யப்பட்டனா். இவர்கள் ஒவ்வொருவராக நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மாக்கந்துரே மதுஷ் கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். அன்று முதல் ஒன்றரை வருட காலம் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்தின் பொறுப்பில் இருந்தார். கடந்த 16ஆம் திகதி மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் பொறுப்பெடுத்தனர். அதன்பின் நடத்தப்பட்ட விசாரணையில் இவர் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய கொட்டிகாவத்தையில்
இருந்து 10 கிலோ ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டது.
மதுசின் தாயும் தந்தையும் கம்புறுபிட்டிய கத்தாரமாத்தா பானவத்தைக்கு குடிவந்தது திருமணத்தின் பின்பே ஆகும். மதுஷ் அங்குதான் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சமரசிங்க ஆராச்சிகே மதுஷ் லக்சித்த. அவர் 1979 நவம்பர் 24ஆம் திகதி பிறந்தார். கிராமத்தில் உள்ள பாடசாலையில் அடிப்படை கல்வி கற்ற மதுஷ் இளம் வயதை அடைந்ததும் உழைத்து பணம் சம்பாதிப்பதற்கு முயற்சி செய்தார். இளம் பிராயத்தை அடைந்ததும் விறகு சேகரித்து கீரை வகைகளை விற்று பணம் சம்பாதித்து தந்தைக்கு உதவியாக இருந்துள்ளார். இதில் வருகின்ற பணம் போதது என்பதால் பின்பு கருவாடு விற்கத் தொடங்கினார். தனது சொந்த முயற்சியில் உழைத்து முன்னுக்கு வருவதை விரும்பாத சிலரும் இருந்தனர். இதனால் ஏற்பட்ட பிரச்சினையொன்று முற்றி அவர்கள் வசித்து வந்த இருப்பிடத்தை விட்டு எழும்ப வேண்டிய நிலையை அங்கு வாழ்ந்த வந்த பிரபல்யமான ஒருவர் ஏற்படுத்தினார். பல்வேறு துன்பங்களுக்கும் இடையூறுகளுக்கும் முகம் கொடுத்து எதிர்நீச்சல் போட்டு வெற்றியோடு வாழ்ந்த வந்த மதுஷின் இந்த முன்னேற்றத்தை விரும்பாத ஒருவர் ஒரு நாள் அவரை அடித்து துன்புறுத்தியதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றை அவரது கால் பாதத்தில் ஏற்றி அவரது கால் பாதத்தை உடைத்து விட்டார். அவரது பாதத்தை உடைத்த நபரின் மைத்துனர் இலங்கை கொமியுனிஸ்ட் கட்சியின் பிரபல்யமான டெனி ஹித்தெட்டிகே என்பது மதுஷ் அப்போதே அறிந்திருக்கக் கூடும். எது எப்படியோ இந்த சம்பவம் நடந்து சில தினங்களுக்கு பின் டெனி ஹித்தெட்டியகே பாாிய வெடிஆயுதமொன்றையும் எடுத்துக் கொண்டு மதுஷை தேடி வந்தார். இதை அறிந்த மதுஷ் அன்று ஊரைவிட்டு சென்று விட்டார்.
மரண பயத்துடன் ஊரைவிட்டு தப்பி வந்த மதுஷிடம் வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்கு கையில் காசு இருக்கவில்லை. ஊரைவிட்டு வந்த அவர் சந்தித்த நண்பர்களும் அவருக்கு நல் வழியில் செல்வதற்கு இடம் அளிக்கவில்லை. அதன்பின் ஔிந்து வாழ்ந்து வந்த அவர், திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வாழ்வதற்கு பாதாள உலகுக்குள் பிரவேசித்திருப்பதை அவர் முதன் முதலில் அறிந்து கொண்டது 2005ஆம் ஆண்டிலாகும். அந்த ஆண்டு ஜுன் 23ஆம் திகதி வாரியபொலயில் வைத்து இரு வெடிக்கும் ஆதங்களுடன் அவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு எதிராக இரு குற்றச்சாட்டுக்கள் இருந்தன. நீா்கொழும்பு மற்றும் காலி பிரதேசங்களில் உள்ள மூன்று லீசிங் நிறுவனங்களுக்கு புகுந்து கொள்ளையிட்டது.
இவ்வாறு ஐஆர்சி பட்டியலில் இடம் பிடித்த மதுஷின் மனதில் பழி வாங்கும் எண்ணம் இருந்ததை எவரும் அறிந்திருக்க நியாயமில்லை. மதுஷின் மனதில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த வேதனையை தீா்த்துக் கொள்ள தன்னால் தனியாக முடியாது என்பதை அவர் உணர்ந்திருந்தார். அதனால் உரிய வேளை வரும் வரை உரியவரை தேடிக் கொண்டிருந்தார் . தன்னுடைய வீட்டுக்குள் புகுந்து மரண அச்சுறுத்தல் விடுத்த ஹித்தெட்டியாவை கொல்லுவது அவ்வளவு எளிதான காரியமில்லை என்பதை மதுஷ் நன்றாக அறிந்திருந்தார். அன்று அவருக்கு ஏற்பட்ட அந்த மரண அச்சுறுத்தல் வாழ்க்கையில் விரக்தியை ஏற்படுத்தி இருக்கக்கூடும். அதனால் மீண்டும் கஷ்டப்பட்டு உழைத்து வாழ வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்படவே இல்லை. எவ்வாறாயினும் பணத்தாலும் அதிகாரத்தாலும் தன்னை அடக்கி ஆள நினைத்த அவர்களுக்கு எதிராக போர்க்கொடி தொடுக்க அவர் மனம் தளரவில்லை. இளமை துள்ளி விளையாடும் வாலிப பருவத்திற்குள் இருந்த மதுஷுக்கு எது சரி? எது பிழை என்று சொல்லிக் கொடுக்க அருகில் யாரும் இருக்கவில்லை. ஊரைவிட்டு வந்த பின் அவரது இலக்கை அடைவதே அவரது குறிக்கோளாக இருந்தது. அதை குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக அவர் குறி பார்த்து சுடுவதில் வல்லவர் ஒருவரை தேடிக் கொண்டிருந்தார். இது தொடர்பாக தனது பாதாள உலக சகாக்களிடம் அவ்வப்போ விசாரித்து வந்தார். பாதாள உலகை வெல்வதிலும் அதன் மூலம் பணம் சம்பாதிப்பதிலும் அவர் தீவிரமாக கவனம் செலுத்தினார். அதற்கு திருடுவதற்கு பதிலாக போதைவஸ்து விற்பனை சிறந்தது என்றும் அதன் மூலம் மிக விரைவாக பணம் சம்பாதிக்கலாம் என்று அவர் புரிந்து கொண்டார். சமூகத்தில் அடிபட்டு வாழ்ந்த அவருக்கு பாதாள உலகுக்கு ள் சிக்குவதற்கு காரணமாக அமைந்தது அவரது தான் தோன்றித்தனமான செயற்பாடுதான். காலி, மாத்தறை, நீர்கொழும்பு, கம்பஹா, மாரவில, மினுவாங்கொட, வாரியபொல ஆகிய பிரதேசங்களில் இவர் அதிகமாக நடமாடி அலைந்து திரிந்துள்ளதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இவருக்கு எந்தத் தொழிலையும் செய்வதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் எங்கேயும் வாழ்வதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் இவர் இலகுவில் எளிதில் அடையக்கூடியதை பெறுவதிலேயே மும்முரமாக இருந்தார். திருடுவதும் பலாத்காரமாக அபகரிப்பதையும் இவர் தேர்ந்தெடுத்தார். அது இலகுவான காரியம் இல்லை என்பதை பொலிஸில் மாட்டிக் கொண்டபின் உணா்ந்திருப்பார்.
அப்போதும் பழிவாங்கும் எண்ணம் இவரது எண்ணங்களில் புரையோடிப் போயிருந்தன. ஏதோ ஒரு குற்றத்திற்காக விளக்கமறியலில் தடுத்துவைக்கப்படடிருந்த நிசங்க கொமண்டோரைப் பற்றி மதுஷ் கேள்விபட்டார். தனது பழிவாங்கும் படலத்தை நிறைவேற்றிக் கொள்ளத் தகுந்த நபர் இவர் தான் என்பதை அவர் புரிந்துகொண்டார். தன்னந்தனியாக வாழ்ந்த நிசங்கவை பிணையில் எடுக்க நீதிமன்றத்திற்கு செல்லக்கூட யாரும் இருக்கவில்லை. இந்த அருமையான நிலையை புரிந்து கொண்ட மதுஷ் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை வெளியில் எடுத்தார். தன்னை ஊரை விட்டே விரட்ட காரணமாக இருந்த டெனி ஹித்தெட்டிவை கொலை செய்வதற்கான திட்டத்தை செயற்படுத்த பொருத்தமான நபர் இவர்தான் என்பதை மதுஷ் புரிந்துகொண்டார்.
2006ஆம் ஆண்டு ஜுன் 11ஆம் திகதி பொசன் பௌர்ணமி தினத்தன்று டெனி என்ற அரசியல்வாதி கொல்லப்பட்டது மதுஷின் எண்ணத்தில் உதித்த பழிவாங்கும் படலத்தில் தான் என்பதை பொலிஸார் துப்பறிந்து புரிந்து கொண்டனர்.
அந்தகொலையின் பின் பொலிஸாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த நிசங்க பாதாள உலக தாதாவாக மினுவாங்கொடையில் வைத்து பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
மாகந்துர மதுஷ்,கஞ்சிபானை இம்ரான், அங்கொட லொக்கா, புள்ளபழம் அஜ்மி, ஜவ்பர் ஷியாம்,ஓவமரா, ஷன் ஷைன் சுத்தா, ஜங்கா, ஹைபிரட் சுத்தா போன்ற பாதாள உலக தாதாக்களின் பெயர்கள் அண்மைக்காலமாக ஊடகங்களில் அடிக்கடிஅடிபட்டது மதஷின் பெயருடன் சேர்ந்துதான்.
இவர்கள் போதைவஸ்து வியாபாரத்திலும் ஈடுபட்டிருந்தார்கள் என்றும் சமூகத்தில் உள்ள பிரபுக்கள் சிலரை கொலை செய்ய திட்மிட்டிருந்தார்கள் என்றும் இவர்கள் பாரிய குற்றங்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்ற தகவல் வெளிவந்தவுடன் தான் தெரிந்தது.
பொலிஸார் மதுஷை பிடிப்பதற்கான புலனாய்வு விசாரணைகளை தொடங்கியதன் பயனாக மதுஷ் டுபாயில் சொகுசு வாழ்க்கை வாழ்வது தெரியவந்தது. மாறு வேடம் தரித்து டுபாய்க்கு சென்ற புலனாய்வுப் பிரிவினர், பெப்வரி மாதம் 5ஆம் திகதி போதைவஸ்து வியாபாரத்திற்காக மதுஷுடன் 31பேரை கைது செய்தனர்.
இவர்களின் கைது இலங்கையில் பல அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியைக் கரைத்தது. அவர்களோடு பல கோடீஸ்வரர்களுக்கும் இந்த அதிர்ச்சி ஏற்பட்டது.