எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் மகன் சரண், இசை நிகழ்ச்சிகள் நடத்துவதுடன், படங்களும் தயாரிக்கிறார்.
எஸ். பி. பாலசுப்பிரமணியம் - சாவித்திரி தம்பதிகளுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
மகள் பல்லவிக்கு 1994 ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. கணவர் பெயர் கிரிதர் ராஜா. இவர் ‘ஸ்ரீராம் சிட்ஸ்’ நிர்வாக இயக்குனர் எஸ். வி. எஸ். ராஜாவின் மகன்.
திருமணம் ஆன சமயத்தில் கிரிதர் ராஜா அமெரிக்காவில் கம்ப்யூட்டர் துறையில் இருந்தார். திருமணம் ஆனதும், மனைவி பல்லவியையும் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றார்.
சில ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்தபின், அவர்கள் சென்னை திரும்பினர். இப்போது சென்னையில் சொந்தமாக கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்துகிறார் கிரிதர் ராஜா.
எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் மகன் பெயர் சரண். இவர் பட அதிபர். இசை நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார்.
உன்னை சரண் அடைந்தேன், ‘மழை’ ஆகிய படங்கள் சரண் தயாரித்தவை. ‘உன்னைச் சரண் அடைந்தேன்’ படத்தில் அவர் நடித்திருக்கிறார். இப்போது, ‘சென்னை 600028’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறார்.
இவருக்குத் திருமணம் ஆகிவிட்டது.
மாணவ பருவத்தில் பாலசுப்பிரமணியம் ஒல்லியாக இருந்தார். இப்போது குண்டாகிவிட்டது ஏன் என்று கேட்டதற்கு. ‘இனிப்பு தின்பண்டங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதிகமாக இனிப்பு சாப்பிட்டதால் குண்டாகிவிட்டேன்’ என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.
அவர் மேலும் கூறியதாவது :-
‘எனக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். நிறைய கடிதங்கள் வரும். நான் பதில் எழுத நேரமிருக்காது. ஆனால் கூடுமானவரை எல்லோருக்கும் போட்டோ அனுப்புவேன். நான் ரசிகர்களை நேசிக்கிறேன்.
பல ரசிகர்கள் என்னை சந்தித்துப் பேச வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். எல்லோரையும் திருப்திப்படுத்த என்னால் முடியவில்லை.
ஆகையால் ரசிகர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால் உங்களுக்காக உங்கள் சந்தோஷத்திற்காக நான் என்னால் முடிந்த அளவு பாடிக்கொண் டேயிருப்பேன். நாம் சந்திக்க முடியாவிட்டாலும் நமது உறவு என்றும் நிரந்தரமானது. எனக்கு பாடக்கூடிய மூட் வந்தால்தான் இசை நன்றாக இருக்கும். முழு மனதோடு ஈடுபடவில்லை என்றால் நல்ல, தரமான இசையைத் தர இயலாது.
ஒரு நேரத்தில் ஒரே ஒரு வேலையை மட்டும் செய்வதைத்தான் பழக்கமாக வைத்துக்கொண்டிருக்கிறேன். வெகு சீக்கிரத்தில் எனக்கு கோபம் வந்துவிடும். ஆனால் அமைதியாக இருப்பது முக்கியம் என்று கருதி நான் மிகவும் பிரயாசையின் பேரில் அமைதியாக இருக்க முயற்சி செய்கிறேன். பொறுமைக்கு என்றும் பலன் உண்டு. ஆனால் பலன் தாமதமாகத்தான் கிடைக்கும்.
புதிதாக பாட வருபவர்கள், தங்களைப் பற்றி உயர்வாக நினைத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
இரண்டு பாடல்கள் பாடி விருது வாங்கினா அதை ஒரு பெரிய சாதனையாக கருதக்கூடாது. பிரபலமான பாடகர்களின் குரலில் பாடி முயற்சிப்பதை தவிர்த்து சொந்த பாணியில் பாட முயற்சிக்க வேண்டும். பெரியவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். கஷ்டப்பட்டு உழைக்கத் தயாராக இருக்கவேண்டும். ஒவ்வொரு பாடலையும். முதல் பாடலாக நினைக்க வேண்டும். பந்தாவை அறவே விட்டுவிட வேண்டும். எவ்வளவு பணிவாக நாம் இருக்கிறோமோ, அந்த அளவிற்கு நம்மால் வாழ்வில் முன்னேற முடியும்.
எனக்கு கிரிக்கெட், டென்னிஸ் ஆகிய விளையாட்டுகள் பிடிக்கும்.
குறிப்பாக, கிரிக்கெட் என்றால் உயிர். மாணவனாக இருந்தபோது, பல காலம் கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன்.
சார்ஜாவில் கிரிக்கெட் பார்க்க சென்றிருக்கிறேன். கிரிக்கெட்டில் நிறைய நண்பர்கள் உண்டு. கபில், மொகிந்தர், அனில் கும்ப்ளே, ராஜ ஸ்ரீநாத் போன்றவர்களை நான் அறிவேன். ரிக்கார்டிங்கை கான்சல் பண்ணிவிட்டு கிரிக்கெட் மாட்ச் பார்க்கும் பழக்கம்கூட உண்டு.
டென்னிஸ் மாட்சுகள் எல்லாம் வீடியோ டேப் செய்து வைத்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது அதைப் போட்டுப் பார்ப்பேன்.
கடவுள் நம்பிக்கை உள்ளவன் நான். தினசரி காலை எழுந்திருக்கும் போது என் தாயையும், தந்தையையும் நினைத்துக் கொண்டுதான் எழுந்திருப்பேன். அதேபோல இரவு படுக்கைக்குச் செல்லும்போது கடவுளை மனதிற்குள் நினைத்து அந்த நாளில் யாருக்காவது நான் அறியாமலே ஏதாவது கெடுதல் செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்று வேண்டிக் கொள்வேன். இதைத் தவிர பூஜைகள் எதுவும் தனியாகச் செய்ததில்லை.
எதிர்காலத் திட்டங்கள் என்று எதுவும் இல்லை. முடியும் வரை உழைத்துப் பாட வேண்டும். குரல் எப்பொழுது ஒத்துழைக்க மறுக்கிறதோ, அப்பொழுது பாடுவதை விட்டுவிடவேண்டும்.
ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. கடைசிவரை, ஏதாவது ஒரு பகுதியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆவல். அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால், மீண்டும் இதே மண்ணில் பிறந்து, பாடகராகவே வாழ ஆசைப் படுகிறேன். இந்த ஜென்மத்தில் நல்ல குடும்பம், நண்பர்கள். ரசிகர்களின் ஆதரவு இருப்பது போலவே, அடுத்த ஜென்மத்திலும் இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன்.’ இவ்வாறு எஸ். பி. பாலசுப்பிரமணியம் கூறினார்.