திரைக்கு வந்து 60 ஆண்டுகளாகியும் இன்றும் பேசப்படும் தமிழ்ப் படங்களின் வரிசையில் பராசக்தியையும் ரத்தக் கண்ணீரையும் தவிர்க்கவே முடியாது. முதல் படத்திற்கு கலைஞர் திரைக்கதை வசனம், இரண்டாவது படத்திற்கு திருவாரூர் தங்கராசு கதை - வசனம், பராசக்தியில் சிவாஜி தன் அபார நடிப்பினாலும் வசன உச்சரிப்பாலும் அசத்தினார்.
ரத்தக் கண்ணீரில் எம்.ஆர். ராதா தனக்கேயுரிய நக்கல் - நையாண்டி நடிப்பால் கலக்கினார். இவர்களைப் பற்றியெல்லாம் நிறைய பேசப்படுகின்றன. இந்த இரண்டு படங்களையும் இயக்கியவர்கள் தமிழ்த் திரையுலகின் இரட்டை இயக்குநர்களான கிருஷ்ணன், பஞ்சு. அதிகம் பேசப்படாத சாதனையாளர்களில் இவர்கள் இருவரும் அடக்கம்.
பஞ்சு என்கிற பஞ்சாபகேசனுக்கு சொந்த ஊர் கும்பகோணம். பிராமண சமுதாயத்தில் பிறந்த இவர், தனது பூணூலைக் கழற்றி காவிரி ஆற்றில் எறிந்து விட்டு முற்போக்கான சிந்தனைகளுடன் செயல்பட்டவர். அண்ணா, கலைஞர் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களுக்கு நன்கு அறிமுகமானவர். தமிழ்த் திரைப்பட இயக்கத்தின் முன்னோடியான ராஜா சாண்டோவிடம் உதவியாளராகச் சேர்ந்து, எடிட்டிங் பயிற்சியும் பெற்றார். அப்போது கோவை கந்தன் ஸ்டுடியோவில் (பின்னர் இது பட்சிராஜா ஸ்டுடியோ எனப் பெயர் பெற்றது) லெபராட்டரியில் கிருஷ்ணன் பணியாற்றி வந்தார். பஞ்சுவும் கிருஷ்ணனும் நண்பர்களானார்கள்.
மனுநீதி சோழன் கதையை ‘ஆராய்ச்சி மணி’ என்ற பெயரில் ராஜா சாண்ட்டோ இயக்கினார். அதில் பசுமாடு அழுதுகொண்டே மணி அடிப்பது போன்ற காட்சி சரியாக எடுக்கப்பட முடியாமல் இருந்தது. இதைக் கவனித்த பஞ்சுவும் கிருஷ்ணனும் ராஜாசாண்டோவிடம் இதை இப்படி எடுக்கலாமே என ஆலோசனைகள் சொன்னார்கள்.
சொல்வதைவிட செய்துகாட்டுவதே சிறந்தது என்று அவர்களிடம் சொன்ன ராஜாசாண்ட்டோ அவர்களையே அந்தக் காட்சியை எடுக்கச் சொன்னார். மிகச் சிறப்பாக எடுத்து அருமையாக எட்டிங் செய்து தந்த இருவரையும் பாராட்டியதுடன், தான் இயக்கவிருந்த ‘பூம்பாவை’ என்ற படத்தையும் அவர்கள் இருவரையுமே இயக்கச் சொன்னார் ராஜா சாண்டோ. இயக்குநர்கள் கிருஷ்ணன். பஞ்சு உருவான பின்னணி இதுதான்.
பூம்பாவை படம் 1944 இல் வெளியானது. கே.ஆர். ராமசாமி, ஜீவரத்னம், கலைவானர், டி.ஏ. மதுரம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கலைவாணர் என்.எஸ்.கே. சிறையில் இருந்த போது அவரது குழுவினரின் நலனுக்காக ‘பைத்தியக்காரன்’ என்ற படத்தை இயக்கினார்கள் கிருஷ்ணனும் பஞ்சுவும். எஸ்.வி. சகஸ்ரநாமம், எம்.ஜி.ஆர். உள்ளிட்டோர் நடித்த இப்படம் வெளியாவதற்கு முன்பு கலைவாணர் சிறையிலிருந்து வெளியே வந்தார். அவரையும் நடிக்க வைத்து படத்தை வெளியிட்டனர். அண்ணாவின் கதை வசனத்தில் கலைவாணர் தயாரித்து நடித்த ‘நல்லதம்பி’ படமும் கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் வெளிவந்தது.
குலதெய்வம், தெய்வப்பிறவி, உயர்ந்த மனிதன், சர்வர் சுந்தரம், குழந்தையும் தெய்வமும், பெற்றால்தான் பிள்ளையா, எங்கள் தங்கம் போன்றவை இந்த இரட்டையர்கள் இயக்கிய முக்கியமான படங்களாகும். இவற்றில் சில படங்கள் இந்தியிலும் எடுக்கப்பட்ட போது அவற்றையும் இந்த இரட்டையர்களே டைரக்ட் செய்தனர்.
கதை - திரைக்கதையை சீராக அமைப்பதில் கிருஷ்ணனும், படப்பிடிப்பு படத்தொகுப்பு பணிகளை சிறப்பாக கவனிப்பதில் பஞ்சுவும் கெட்டிக்காரர்கள்.
இருவரும் தங்கள் பணியை சரியாகப் பகிர்ந்த கொண்டு தொடர்ந்து படங்களை இயக்கினார்கள். இருவரும் சேர்ந்து சுமார் 50 படங்களை இயக்கியுள்ளனர். 1984 இல் பஞ்சு தனது 70வது வயதில் உடல் நலமின்றி காலமானார்.
அதன் பிறகு கிருஷ்ணன் எந்தப் படத்தையும் இயக்கவில்லை. சில ஆண்டுகளில் அவரும் மறைந்தார். சிறந்த கதாசிரியர்கள், வசனகர்த்தாக்கள், நடிகர்கள் உள்ளிட்ட கலைஞர்களை சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டு பல வெற்றிப் படங்களைத் தந்தவர்கள் இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சு.