நாம் 60 வயது கதாநாயகர்கள் 18 வயது கதாநாயகிக்கு ஜோடியாக நடிப்பதைப் பார்த்து ரசிக்கும் நம்ப ரசிக பெருமக்களுக்கு நான் சொல்லும் இந்த செய்தி கொஞ்சம் புதுசு. 1950 களில் தொடங்கி 60, 70 களில் கண்ணியமான அப்பா பாத்திரத்தில் நடித்த எஸ். வி. ரங்கராவ் தன் வாழ்நாளில் முதுமையே பார்த்ததில்லை. ஆம் அவர் மறைந்த போது அவருக்கு வயது 56 தான். எம். ஜி. ஆரை விட வயதில் இளையவர் ஆனால் அவருக்கு தந்தையாக பல படங்களில் நடித்தவர்.
அந்த காலக்கட்டத்தில் அப்பா வேடங்களில் நடித்த நாகையா, போன்றவர்கள் அழுது நம்மையும் அழ வைத்த போது தன்னுடைய கம்பீரமான நடிப்பாலும் ஆஜானுபாகுவான சரீரத்தாலும் நம் தமிழ் ரசிகர்களை தம்பால் இழுத்தவர். இந்த மாதிரி தந்தையோ மாமனாரோ நமக்கு அவரைப்போல இருக்க மாட்டாரோ என ஏங்க வைத்தவர்.
தெலுங்கு தேசத்தில் பிறந்தாலும் தமிழை டப்பிங் இல்லாமல் சுத்தமாக உச்சரித்ததாலும் எதார்த்தமான நடிப்பாலும் தமிழ் திரையுலகத்தில் ஒரு தனி இடம் பிடித்தவர். தெலுங்கு படங்களை இயக்கி விருது பெற்றவர் அந்த காலத்தில் பட்டதாரிகள் நடிக்க வருவது குறைவு ரங்கராவ் ஒரு பட்டதாரி.
ஒரு நடுத்தர வயதினரை மாயாபஜாரில் யார் யார் நடித்தார்கள் என்று கேட்டு பாருங்கள் யாரும் அதில் நடித்த ஜெமினி சாவித்தியை சொல்ல மாட்டார்கள். டக்கென்று ரங்கராவ் என்று தான் சொல்வார்கள்.
சில படங்களில் அவருடைய கதாப்பாத்திரம் அதில் நடித்த கதாநாயகரையும் மிஞ்சி விடும். மாமனார் மருமகள் பாசப்பிணைப்பை உணர்த்திய நானும் ஒரு பெண் அதில் ஒன்று அன்னை திரைப்படத்தில் மனைவியை புரிந்துகொண்ட கணவன் பாத்திரமாகட்டும், வளர்ப்பு தந்தை மகனிடம் கொட்டும் பாசத்தை உணர்த்திய படிக்காத மேதையாகட்டும் ரங்கராவை தவிர யாரும் அவ்வளவு அற்புதமாக நடித்திருக்க முடியாது.
கண்கண்ட தெய்வம் மற்றும் அன்புச் சகோதரர்கள் படங்களில் தோன்றிய அண்ணனை நாம் மறக்கமுடியுமா? இப்படி எத்தனையோ திரைப்படங்கள்.
உண்மையை சொல்லுங்கள், இரண்யகசிபு என்றால் யார் ஞாபகம் உங்களுக்கு வருகிறது அந்த ஆஜானுபாகுவான ராஜாவுக்கு பொருத்தமானவர் யார். ஆங்கில புலமை மிகுந்த அவர் நிறைய ஷேக்ஸ்பியர் நாடகத்தில் நடித்துள்ளார்.
கைகொடுத்த தெய்வத்தில் சாவித்திரிக்கு தந்தையாக நடித்து நம் கண்களை குளமாக்கியவர் சர்வர் சுந்தரத்தில் சிறிய வேடத்தில் தோன்றினாலும் தன் நகைச்சுவை நடிப்பால் நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தார்.
No comments:
Post a Comment