ஆந்திர மாநிலம் காக்கி நாடாவை பூர்வீகமாகக் கொண்ட பி.பி. ஸ்ரீநிவாஸ் இளம் வயதில் இருந்தே இசையில் ஈடுபாடு மிகுந்தவராக இருந்தார். சிறந்த குரல் வளம் கொண்ட அவரை, குடும்ப நண்பரான ஈமனி சங்கர சாஸ்திரி என்ற வீணைக் கலைஞர் சென்னைக்கு அழைத்து வந்தார். 1952 ஆம் ஆண்டு வெளிவந்த “மிஸ்டர் சம்பத்” என்ற படத்தில் இரண்டு மூன்று வரிகள் கொண்ட பாடல்களை முதன் முதலாகப் பாடினார்..
பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் தயாரான ‘ஜாதகம்’ என்ற படத்தில் பாடிய “சிந்தனை ஏன் செல்வமே.....” என்ற பாடல் அவருக்கு பரவலான பாராட்டுக்களைப் பெற்றுத்தந்தது. பின்னர் “விடுதலை” படத்தில் இடம்பெற்ற “ உன்னாலே நான் என்னாலே....”, ‘பிரேம பாசம்’ படத்துக்காக “அவனல்லால் புவியின் மீது....”, ‘அடுத்த வீட்டுப் பெண்’ படத்தில் இடம்பெற்ற “கண்ணாலே பேசி பேசி கொல்லாதே.....” ஆகிய பாடல்களை சினிமா துறையில் பி.பி. ஸ்ரீநிவாஸ¤க்கு தனித்துவமான இடத்தை உருவாக்கித்தந்தன. “காலங்களில் அவள் வசந்தம்....”, “பால்வண்ணம் பருவம் கண்டு.....”, “என்னருகே நீ இருந்தால்.....”, “பொன் ஒன்று கண்டேன்.....”, “மயக்கமா கலக்கமா.....”, “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.....” ஆகிய பாடல்கள் பி.பி. ஸ்ரீநிவாஸ¤க்கு பெரும் புகழைத் தேடித் தந்தன.

2010 இல் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் பாடிய “பெம்மானே.....” பாடலும் தமிழ் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்ற பி.பி.எஸ். தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வர சுப்ரபாதம், சாரதா புஜங்க ஸ்தோத்திரம், புரந்தரதாசர் கீர்த்தனை உள்ளிட்ட அவருடைய ஆன்மிக பாடல்கள் உலக அளவில் புகழ்பெற்றவை.
ஆயிரக்கணக்கான பாடல்களை 12 இந்திய மொழிகளில் பாடி இசை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அவர் பாடிய பாடல்கள் அனைத்துமே காலத்தால் அழியா வரம் பெற்றவை. மென்மையான குரல் கொண்டு இனிமையைக் கூட்டி பாடும் புதிய பாணியை திரை உலகுக்கு கொண்டு வந்தவர். வாலிக்கு வாழ்வு தந்த பி.பி.எஸ்.
நான் சிரமப்பட்ட நாட்களில் எனக்கு உதவியவர் சிறந்த பின்னணிப் பாடகரும், பன்மொழி வித்தகருமான பி.பி.ஸ்ரீநிவாஸ் என்று நானும்.... இந்த நூற்றாண்டும்.... என்னும் புத்தகத்தில் கவிஞர் வாலி குறிப்பிட்டுள்ளார்.
இதோ அவரது வரிகளில்.... “சிரமப்பட்ட நாட்களில் எனக்கு உதவியவர் பி.பி.ஸ்ரீனிவாஸ்.
கஷ்டப்பட்ட காலத்தில் அவர் காசு கொடுத்து என் இரைப்பையை நிரப்பியிருக்கிறார். நான் வறுமைக் கடலில் மூழ்கிய போதெல்லாம் என் முடியைப் பிடித்துத் தூக்கிக் கரையில் போட்டுக் காப்பாற்றியவர்.
இனியும் காலம் தள்ள முடியாது என்று நினைத்த போது மதராஸ¤க்கு ஒரு பெரிய வணக்கத்தைப் போட்டுவிட்டு, மதுரைக்குப் போய்விடலாம் என்று முடிவு கட்டினேன்.
தந்தை மறைந்து போனார், தாயோ பம்பாயில் நோய்ப்படுக்கையில் இருக்கிறாள். எனக்காக நானே அழுதுகொள்ள வேண்டுமே தவிர, ஈரம் துடைப்பார் எவருமேயில்லை. இந்த இலட்சணத்தில், சினிமாவை விடாமல் பிடித்துக் கொண்டு தொங்குவது புத்திசாலித்தனமல்ல என்று புரிந்து கொண்டேன். மறுநாள் மதுரைக்கு புறப்பட இருந்தேன். அப்போது பி.பி.ஸ்ரீனிவாஸ் என் அறைக்கதவைத் தட்டினார்.
அவரிடம் ஒரு பாட்டு பாடுங்கள் என்றேன். அவர் சிறிது சிந்தித்துவிட்டு வெளியாக இருக்கும் “சுமைதாங்கி” என்னும் படத்தில் கண்ணதாசன் எழுதிய, விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்திருந்த மயக்கமா? கலக்கமா? பாடலை முழுமையாகப் பாடிக்காட்டினார். பாட்டு வரிகள் என் செவியில் பாயப்பாய, மதுரைக்குப் பயணமாவதை ரத்துச் செய்து சென்னையிலேயே தங்கிவிடுவது என்று முடிவு செய்தேன். ஆம்! ஒரு சினிமாப் பாட்டு என் திசையை மாற்றியது. என் எதிர்காலத்தை நிர்ணயித்தது. நான் தொடர்ந்து போராடுவதற்கான தெம்பையும் தெளிவையும் என்னுள் தோற்றுவித்தது.
No comments:
Post a Comment