Tuesday, April 2, 2013

எதையும் மனதில் வைத்து பழிவாங்க வேண்டும் என்று நினைக்காத காலந்தீண்டா கவிஞர் கண்ணதாசன்

கெளரவம் படத்தின் தயாரிப்பாளர் 1973ம் ஆண்டு படத்தின் பாடல்களை எழுதுவதற்காக கண்ணதாசனுக்கு முற் பணம் கொடுத்து புக் செய்திருந்தார். ஆனால் கவிஞரோ தன் வேலைகளை எல்லாம் மறந்து மலேசியாவில் வாழ்க்கையை ரசித்துக் கொண்டு இருந்தார்.
இது போன்று தன் வேலையை மறந்து சரியான நேரத்தில் பாடல்களை தராமல் தாமதப்படுத்துவார் என்பது கண்ணதாசனின் மீதான பரவலான கருத்து.
அந்த சமயத்தில் அவருடைய உதவியாளர் படத்தின் தயாரிப்பாளரைச்சந்தித்து அவர் எப்போதும் இப்படித்தான் தாமதப்படுத்துவார் என்று கவிஞரின் குறைகளைக் கூறி தனக்கு அந்த வாய்ப்பைத் தருமாறு கேட்டார். (அவர் இப்போது பெரிய தயாரிப்பாளர்) ஆனால் தயாரிப்பாளரோ கண்ணதாசனே பாடல்களை எழுதட்டும் என்று காத்திருந்தார்.
கவிஞர் மலேசியாவிலிருந்து வந்தவுடன் இந்த செய்தியைக் கேள்விப்பட்டு மிகவும் மனவருத்தம் அடைந்தார். தான் தூக்கி வளர்த்து ஆளாக்கிய ஒருவர் தன்னை கவிழ்க்கப் பார்ப்பதை எண்ணி மனவேதனை அடைந்தார். அடுத்த நாள் இயக்குநர் பாடலின் சூழ்நிலையை விளக்கினார். தான் எடுத்து வளர்த்த தன் வளர்ப்பு மகன் தன்னை எதிர்த்து நிற்கிறான் என்றார் இயக்குநர்.
வழக்கம் போல தன் வாழ்க்கையின் வலியை அந்தப் படத்தின் பாடலில் எழுதியிருப்பார். படத்தின் சூழ்நிலையை மறந்து இந்த சூழ்நிலையை மனதில் நினைத்தால் ஏதோ தனது உதவியாளர் செய்த துரோகத்திற்காக எழுதியது போலவே முழுப் பாடலும் இருக்கும். காலத்தால் அழியாத இந்த இரண்டு பாடல்களும் என்றும் மறக்க முடியாதவை.
படம்: கெளரவம்
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா?
காலம் மாறினால் கெளரவம் மாறுமா?
அறிவை கொடுத்ததோ துரோணரின் கெளரவம்
அவர்மேல் தொடுத்ததோ அர்ச்சுனன் கெளரவம்
நடந்து அந்தநாள் முடிந்ததா பாரதம்
நாளைய பாரதம் யாரதன் காரணம்
வளர்த்த என் கண்ணனோ தந்தையின் நெஞ்சிலே
மாறும் அவதாரமோ இதுதான் உலகிலே
ஆனால் இவ்வளவு நடந்தாலும் எல்லாவற்றையும் மறந்து மன்னித்து அந்த உதவியாளரை மீண்டும் சேர்த்துக் கொண்டார்.
பாலூட்டி வளர்த்த கிளி பழங்கொடுத்துப் பார்த்த கிளி
நான் வளர்த்த பச்சைக்கிளி நாளை வரும் கச்சேரிக்கு
சட்டமும் நான் உரைத்தேன் தைரியமும் நான் கொடுத்தேன்
பட்டம் மட்டும் வாங்கி வந்து பாய்ந்து செல்ல பார்க்கிறது
செல்லம்மா எந்தன் செல்லம்மா
நீதிக்கே துணிந்து நின்றேன் நினைத்ததெல்லாம் ஜெயித்து வந்தேன்
வேதனைக்கு ஒரு மகனை வீட்டிலே வளர்த்து வந்தேன்
ஆண்டவன் சோதனையோ யார் கொடுத்த போதனையோ
தீயிலே இறங்கிவிட்டான் திரும்பி வந்து கால் பணிவான்
கண்ணதாசன் எதையும் மனதில் வைத்து பழிவாங்க வேண்டும் என்று எவரையும் நினைத்ததில்லை தான் நினைத்ததை பாட்டில் அழகாக வெளிப்படுத்தும் அற்புத ஆற்றல் பெற்ற காலந் தீண்டா கவிஞர் நம் கண்ணதாசன்.

No comments:

Post a Comment