தமிழகத்தையே உருக வைத்த
அண்ணன் தங்கை உறவை சித்தரித்த சிறந்த படம் பாசமலர்

அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுத்த படங்களில் இப்படம் 25 வாரங்கள் ஓடி, காவிய அந்தஸ்து பெற்ற படமாகும்.
1961 ஆம் ஆண்டு வெளி வந்து தமிழகத்தையே உருக வைத்த அண்ணன் தங்கை உறவைச் சித்திரிக்கும் ஒரு நல்ல படமாக மிளிர்ந்தது பாசமலர்.
இப்படத்தின் கதை கே.பி. கொட்டாரக்கரா என்ற மலையாள எழுத்தாளருடையது. வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ். எம்.ஜி.ஆர். படங்களுக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்த இவரை, சிவாஜிக்கு அறிமுகம் செய்து வைத்தவர் ஜெமினி கணேசன். பாசமலர் வெற்றியைத் தொடர்ந்து சிவாஜியின் படங்களுக்கும் வரிசையாக வசனம் எழுதினார் ஆரூர்தாஸ்.
இப்படத்தை இயக்கியவர் பீம்சிங். அவருடைய ‘பா’ வரிசைப் படங்களில் மிகப்பெரிய வெற்றிப்படம் இது. இப்படம் தெலுங்கில் ‘டப்’ செய்யப்பட்டது. பிறகு இந்தி, சிங்களம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டது.
இப்படத்திற்கு பிறகு சிவாஜியும், சாவித்திரியும் காதலர்களாகவோ, கணவன் மனைவியாகவோ எப்படத்திலும் நடிக்கவில்லை.
1961 - 1992 வரை தமிழகத்தில் உள்ள குடும்பங்களில் முதல் குழந்தை ஆணாகப் பிறந்து, இரண்டாவது குழந்தை பெண்ணாகப் பிறந்தால், அக்குழந்தைக்கு பாசமலர் படத்தில் சாவித்ரி நடித்த கதாபாத்திரமான ‘ராதா’ என்ற பெயரைத்தான் வைத்தார்களாம்.
நடிகை சாவித்திரி பற்றிய தகவல்கள்
இப்படத்தில் நடித்த நடிகை சாவித்திரி ஆந்திராவின் குண்டுர் மாவட்டத்தில் உள்ள சிறாயூரில் பிறந்தவர். நாடகத் துறையில் அறிமுகமாகி அங்கிருந்து சினிமாவிற்கு வந்தவர். எட்டாம் வகுப்புவரை படித்திருக்கிறார்.
எல்.வி. பிரசாத்தின் சம்சாரம் என்ற படத்தில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று முந்நூற்று பதினெட்டு படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழில் குழந்தை உள்ளம், பிராப்தம் ஆகிய இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். தெலுங்கிலும் நான்கு படங்களை இயக்கியிருக்கிறார்.
மகாகவி பாரதியின் மீது மரியாதை கொண்டு எட்டயபுரத்தில் குடிநீர்க் கிணறு ஒன்றை உருவாக்கி கொடுத்தவர் சாவித்திரி.
காலத்தால் அழியாத காவிய பாடல்

ஆயினும் மலர்ந்தும் மலராது பாதி மலர் போல..... என்ற பாடல் அன்று முதல் இன்று வரை மட்டுமல்ல, என்றென்றும் காலத்தால் அழியாக காவியப் பாடலாக ஒலித்துக் கொண்டிருக்கும்.
கவியரசரின் காவிய வரிகளுக்கு, மெல்லிசை மன்னர்கள் மெல்லிசையமைக்க டி.எம். எஸ்ஸ¤ம், பி. சுசீலாவும் உருகிப் பாடியிருப்பார்கள்.... கேட்பவர்களை உருகவைத்து விடுவார்கள்...!
இப்பாடலைக் கேட்காத செவிகளும் செவிகளல்ல என்றுதான் நான் சொல்ல வேண்டும்.
சிவாஜியும் சாவித்திரியும் வெவ்வேறு வீடுகளில் தங்கள் குழந்தைகளைத் தாலாட்டும் பாடலான, “மலர்ந்தும் மலராத பாதி மலர் போல” வளரும் விழி வண்ணமே.
வந்து விடிந்தும் விடியாத காலைப்பொழுதாக விளைந்த கலையன்னமே நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த இளம் தென்றலே வளர்ப் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே” என்ற கவிஞர் கண்ணதாசனின் கற்பனை வளத்திற்குச் சிகரமாய் அமைந்த பாடல். இந்த வரிகளுக்கு நிகரான வேறு வரிகளைக் காணவே முடியாது.
பாடலின் முடிவில் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..... என டி.எம். எஸ்ஸின் ஹம்மிங்கும், அவருக்கிணையாக பி. சுசீலாவின் ஆரிராராரிரோ ஹம்மிங்கும் தேனினும் இனியவை....
இப்பாடலைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்...
இப்பாடலுக்கு சோகமும் அன்பும் பாசமும் இழைந்த ஒரு தாலாட்டு இசையினை மெல்லிசை மன்னர்கள் பாடல் முழுதும் இழையோட விட்டிருப்பார்கள்...!
No comments:
Post a Comment