Thursday, April 25, 2013

பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி

பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி 1922ம் ஆண்டு திருச்சியில் பிறந்தார். ராமமூர்த்தி இசை குடும்பத்தில் இருந்து வந்தவர். இவரது அப்பா கிருஷ்ணசுவாமியும், தாத்தா மலைக்கோட்டை கோவிந்தசாமியும் பிரபல வயலின் கலைஞர்கள், தனது அப்பா மற்றும் தாத்தாவை போலவே ராமமூர்த்தியும் வயலின் கலைஞராக தனது இசையுலக பயணத்தைத் தொடங்கினார். சிறுவயதிலேயே பல்வேறு மேடை கச்சேரிகளில் வயலின் கச்சேரிகள் நடத்தியுள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கட்ராமன்தான் ராமமூர்த்தியை சினிமாவிற்கு கொண்டு வந்தார். பின்னர் சி.ஆர். சுப்புராமன் ஆகியோருடன் பணியாற்றியவர் பிறகு விஸ்வநாதனுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.
இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய பெரும்பாலான படங்கள் சூப்பர்-டூப்பர் ஹிட்டாகின. மெல்லிசை மன்னர்கள் என பெயர் பெற்ற விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் இணைந்து 700 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளனர். 1964 ம் ஆண்டு, எம்.ஜி.ஆரின், ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு பிறகு இருவரும் பிரிந்தனர். விஸ்வநாதன் தனியாகவும், ராமமூர்த்தி தனியாகவும் இசையமைக்கத் தொடங்கினர்.
ராமமூர்த்தி தனியாக கிட்டதட்ட 19 படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் தனியாக இசையமைத்த சாது மிரண்டால், தேன் மழை, மறக்க முடியுமா, நான், தங்கச் சுரங்கம், காதல் ஜோதி, ஆலயம், சோப்பு சீப்பு கண்ணாடி, சங்கமம் ஆகிய படங்கள் மிகப் பிரபலமாகின. மிகச் சிறந்த வயலின் இசைக்கலைஞரான இவரது பங்களிப்பில் உருவான எங்கே நிம்மதி என்ற பாடல் நீடித்த புகழைப்பெற்ற பாடலாகும். பின்னர் 29 ஆண்டுகளுக்கு பின்னர் 1995ம் ஆண்டு எங்கிருந்தோ வந்தான் படத்தில் மீண்டும் விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் இணைந்து பணியாற்றினார்கள். சினிமாவில் வாய்ப்பு குறைந்த போதும், தொடர்ந்து மேடை கச்சேரிகளில் பங்கேற்று வந்தார் ராமமூர்த்தி சமீபத்தில் கூட சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கலை உலக சேவைக்காக தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட 40 க்கும் மேற்பட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் ராமமூர்த்தி. மறைந்த ராமமூர்த்திக்கு 4 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் உட்பட 11 வாரிசுகள் உள்ளனர்.

No comments:

Post a Comment