Thursday, March 7, 2013

பட அதிபரை அசர வைத்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

புகழின் உச்சியில் இருந்த போது யாரும் எதிர்பாராத வகையில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் தனது 29 வது வயதில் மரணம் அடைந்தார். அந்த காலத்தில் திரை உலகில் நுழைவது என்பது எளிதான காரியமில்லை. அதற்கு கல்யாண சுந்தரம் விதிவிலக்கல்ல. பல சோதனைகளை அனுபவித்து இருக்கிறார்.
சென்னைக்கு வந்து அவர் குடியேறியது ராயப்பேட்டை பொன்னுசாமி நாயக்கர் தெருவில் இருந்த 10ம் நம்பர் வீட்டில். அங்கு ஒரு அறையை 10 ரூபாய்க்கு வாடகைக்கு பிடித்தார். அது சிறிய அறை. அதில் அவரது நண்பர்களான ஓவியர் கே.என்.
ராமச்சந்திரனும், நடிகர் ஓ.ஏ.கே. தேவரும் தங்கி இருந்தனர். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆரம்ப காலத்தில் பணத்துக்கு கஷ்டப்பட்டாலும் துணிச்சல்காரராக இருந்து வந்திருக்கிறார்கள். சினிமா கம்பெனி ஒன்றுக்கு அவர் பாட்டெழுதி கொடுத்தார். அதற்குரிய பணம் வந்து சேரவில்லை. பணத்தை கேட்க பட அதிபரிடம் சென்றார். ‘பணம் இன்னிக்கு இல்லே! நாளைக்கு வேண்ணா வந்து பாருங்கோ’ என்று பதில் வந்தது.
ஆனால் கல்யாண சுந்தரமோ பணம் இல்லாமல் நகருவதில்லை என்ற எண்ணத்துடன் நின்று கொண்டிருந்தார். ‘நிக்கிறதா இருந்தா நின்னுண்டே இரும்’ என்று சொல்லிவிட்டு அந்த அதிபர் வீட்டிற்குள் சென்றுவிட்டார்.
உடனே கல்யாண சுந்தரம் தனது சட்டைப் பையில் இருந்த ஒரு தாளையும், பேனாவையும் எடுத்து ஏதோ சில வரிகள் எழுதி அதை மேசை மீது வைத்துவிட்டு வீட்டுக்கு கிளம்பி சென்றுவிட்டார். கொஞ்ச நேரத்தில் படக்கம்பெனியைச் சேர்ந்த ஆள் பணத்துடன் அலறியடித்துக் கொண்டு கல்யாணசுந்தரத்திடம் வந்து பணத்தை கொடுத்தார்.
கல்யாணசுந்தரம் அப்படி என்னதான் எழுதி வைத்தார்? இதோ இதுதான்: ‘தாயால் வளர்ந்தேன்; தமிழால் அறிவு பெற்றேன்; நாயே! நேற்றுன்னை நடுத்தெருவிலே சந்தித்தேன்; நீ யார் என்னை நில் என்று சொல்ல?’
இதைப் படித்துப் பார்த்த பட அதிபர் அசந்து போனார் பணம் வீடு தேடி பறந்து வந்தது.

No comments:

Post a Comment