Sunday, March 24, 2013

தாயின் தாலாட்டை விட தந்தை எழுதிய ஆரிராரோ வரி தந்தது சுகமான உறக்கம்

கவிஞர் கண்ணதாசனின் மகள் விசாலி
ஒரு பாட்டுக்கான சூழலை (கண்ணதாசனிடம்) அப்பாவிடம் விவரித்திருக்கிறார் டைரக்டர் (கண்ணதாசனிடம்) நாயகி ஸ்ரீதேவி குழந்தைத் தனத்துடன் இருப்பது மாதிரி கதை என்று நாயகியின் சில காட்சிகளை சொல்லியிருக்கிறார்.
அதில் கமலின் காதை பிடித்து திருகும் ஸ்ரீதேவியின் காட்சியை சொன்னபோது, ‘அட, என் மகள் சாலா மாதிரியே இருக்குதே இந்த கேரக்டர், சாலா இப்படித்தான் என்காதை பிடிச்சு திருகிக்கிட்டு இருக்கும்’ என்று சொன்ன அப்பா, கடகடவென அந்தப் பாட்டை எழுதிக் கொடுத்திருக்கிறார்.
அந்தப் பாடலை எழுதுவதற்கு முன்பு அதாவது அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக கிளம்பும் சமயத்தில் என்னைப் பற்றி அம்மாகிட்ட ‘நான் திரும்பி வரமாட்டேன். நீ சாலாவ பத்திரமா பாத்துக்க’ன்னு சொல்லியிருக்காங்க அப்பா. அப்படிச் சொல்லிவிட்டு கிளம்பி போகும்போதுதான் அந்த குழந்தைத்தனமான நாயகி சூழலை சொல்ல பாட்டு எழுதியிருக்கிறார்.
அந்தப் பாடலுக்கு யார் எப்படி வேண்டுமானாலும் அர்த்தம் எடுத்துக் கொள்ளட்டும். ஆனால், அது எனக்காக என் அப்பா எழுதிய பாட்டு ‘நானே அந்தப் பாட்டை சூழ்நிலைக்கு தக்க மாற்றி நினைத்துக் கொள்வேன்.
‘அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்’ என்று அந்திம காலத்தில் சிகிச்சைக்காக கிளம்பும் இந்த பகலில் உன்னை கடைசியாக பார்க்கிறேன். திரும்பி வருவேன் என்று நம்பிக்கையில்லை. ஆண்டவனே இனி நீ பார்த்துக் கொள், என்று எழுதியிருப்பதாக நினைத்துக் கொள்கிறேன்.
நினைவு தெரிந்த நாள் முதல் எனக்கும் தூக்கம் வராத பொழுதுகளில் அப்பாவின் இந்த பாட்டுதான் எனக்கு தலாட்டு. சின்ன வயதில் நான் தூக்கம் வராமல் அழுது கொண்டிருந்தால் ‘இரு அப்பாவ தாலாட்டு பாடச் சொல்லுகிறேன்’ என்று சொல்லிவிட்டு அந்த பாடலை காற்றில் மிதக்க விடுவாங்க அம்மா. இரவும் பகலும் உன்னை பார்த்துக்கிட்டு இருக்காங்க என்று அம்மா சொல்லுவாங்க.
அம்மா பாடும் தாலாட்டை விட அந்தப் பாடலில் வரும் ஆரிராரோ ஓ ராரிராரோ வரிகள்தான் என்னை சுகமாய் தூங்க வைக்கும் என்று சொல்லிவிட்டு இந்தப் பாட்டு எனக்காக எழுதுன பாட்டுதான் இல்ல எனக்காக எழுதுன பாட்டுன்னு சகோதரரிடம் சண்டையிட்ட அனுபவத்தையும் அந்த சகோதரரும் இப்போது இல்லை என்று சொன்ன போது விசாலியின் வார்த்தைகளில் கனத்த சுமை இருந்தது.
அப்பாவோட பதினான்கு பிள்ளைகளில் (ஒன்பது ஆண்மக்கள் - ஐந்து பெண்மக்கள்) கலைவாணன் அண்ணாதான் என் கூட ஒட்டினான். மற்ற யாரும் என் கூட ஒட்டல்ல.
அவனும் நானும் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்த போது கண்ணே கலைமானே பாட்டில் கலை என்று வருகிறது. அதனால் இது அப்பா எனக்காக எழுதிய பாட்டு என்றான். நான் மறுத்து எனக்காக எழுதிய பாட்டு என்று வாதிட்டேன். அவன் கடைசி வரை ஒப்புக் கொள்ளவேயில்லை.
இந்த பாட்டு யாருக்காக எழுதினேன்னு அப்பாகிட்ட கேட்க அப்பாகிட்டேயே போயிட்டான். அவன் சாகக் கூடிய வயதில்ல. எமனுக்கு இது தெரியல, ரத்த உறவுன்னு இருந்த ஒண்ணும்போச்சு.
கலை அண்ணா இருந்திருந்தா சினிமாவில் பெரும் இயக்குநரா வந்திருப்பான் என்ற சுமை மிகுந்த வார்த்தையை விசாலி வெளிப்படுத்திக் கொண்டிருந்த போது அவரது எட்டு வயது மகன் விஷ்வா குடுகுடுன்னு ஓடி வந்து காதில் சிசுகிசுத்து ஏதோ கேட்க, ஆமாம் தாத்தாதான் என்று சிரித்தார்.

No comments:

Post a Comment