
‘கிழக்கு வாசல்’ படப்பிடிப்பையும் “உறுதி மொழி’ படப்பிடிப்பையும் ஒரே நேரத்தில் இரவும் பகலுமாக நடத்தினேன். அப்போது பேக்கடிக்கு எங்களுடன் சிவாஜி சார் குடும்பத்துடன் வந்து தங்கினார். எங்கள் அனைவருக்கும் அவரது கையாலேயே அயிரைமீன் குழம்பு சமையல் செய்து பரிமாறினார். அதை இன்றைக்கும் மறக்கமுடியாது.
கிழக்கு வாசல் படப்பிடிப்பு முழுவதுமே தொடர்ந்து விபத்துக்கள் நடந்தன. ஒருநாள் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்த போது, திடீர் என்று செட் தீப்பிடித்து எரிந்தது. அதை அணைத்து விட்டு சூட்டிங்கை நடத்தினோம்.
படத்திற்கு கதை வசனம் எழுதிய மதுவுக்கு, தீவிபத்தைப் பார்த்ததும் வலிப்பு வந்துவிட்டது. உடனே அவரை ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்துவிட்டு நடிகை சுலக்சனாவை வைத்து படப்பிடிப்பை நடத்தினோம். அவர் நடிக்கத் தொடங்கியதும், அவரது மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது. உண்மையாகவே ரத்தம் வருகிறது என்பது தெரியாமல், ‘இந்த சீனில இரத்தம் கிடையாதே’ என்றேன்! பின்னர் அவரையும் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தோம்.
‘கிழக்கு வாசல்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் எடுக்க வேண்டி இருந்தது. நான் ஆனைமலையில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்று கொண்டு இருந்தேன். அந்தச் சமயம் என் கல்லூரி நன்பர்களைச் சந்திக்க நேர்ந்தது. அவர்களை என்னை தங்களது காரில் ஏற்றிக் கொண்டனர்.
நாங்கள் சென்று கொண்டு இருந்த போது கார் விபத்து ஏற்பட்டு கார் 13 முறை உருண்டது. எனது உதவியாளர் மணிகண்டன் உதவி டைரக்டர் தரணி ஆகியோர் என்னை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர். எனது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. நான் நினைவு இழந்தேன்.
நான் உயிர் பிழைப்பேனா என்பதே சந்தேகமாகிவிட்டது. சுற்றிலும் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் 1 1/2 மாதம் ‘கோமா’வில் கிடந்தேன். இந்த சமயத்தில்தான் இந்த உலகம் எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொண்டேன். டைரக்ட் செய்வதற்காக எனக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்த சில பட அதிபர்கள், ஆஸ்பத்திரிக்கு வந்து அட்வான்ஸ் பணத்தைத் திருப்பி வாங்கிச் சென்றார்கள். நான் பிழைக்கமாட்டேன் என்று அவர்கள் நினைத்துவிட்டனர்.
டாக்டர்களின் தீவிர சிகிச்சையாலும், என் மனைவியின் மாங்கல்ய பலத்தாலும் அதிசயமாக உயிர் பிழைத்தேன். கொஞ்சம் குணம் அடைந்ததும், ‘கிழக்கு வாசல்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை எடுத்து படத்தை முடிக்க ஏற்பாடு செய்தேன். சிலர் உங்களுக்கு இன்னும் பூரண குணம் ஆகவில்லை. ஏன் ரிஸ்க் எடுக்கிaர்கள்? வேறு யாரையாவது வைத்து கிளைமாக்ஸ் காட்சியை எடுத்து விடலாம்’ என்று யோசனை கூறினார்கள்.
‘உயிரே போனாலும் சரி நான்தான் கிளைமாக்ஸ் காட்சியை எடுப்பேன்’ என்று கூறிவிட்டு காதிலும் மூக்கிலும் பஞ்சை வைத்துக்கொண்டு உச்சகட்டக் காட்சியைப் படமாக்கினேன்.
இதுபற்றிக் கேள்விப்பட்டு ரஜினிகாந்த் ஆச்சரியப்பட்டார்.
‘கிழக்கு வாசல்’ படம் வெற்றிகரமாக ஓடி 175வது நாள் விழாவைக் கொண்டாடியது. அதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அவர் பேசுகையில் ‘உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த போதிலும், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை எடுத்திருக்கிறார் உதயகுமார். இது மாதிரி ஆட்கள் இருப்பதால்தான் சினிமாத் தொழில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றார்.
பிறகு ‘தயவு செய்து உங்கள் படத்தில் எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள்’ என்றார். நான் திகைத்துப் போய்விட்டேன். ‘நீங்கள் சான்ஸ் கேட்கும் நிலையில் இருக்கிறேன்’ என்று கூறி, என் கடிகாரத்தைக் கழற்றி ரஜினியின் கையில் கட்டிவிட்டேன்.
நான் அவர் மீது கொண்டிருந்த பாசம், அவர் என மீது கொண்ட அன்பு ஆகியவை காரணமாகத்தான், பிற்காலத்தில் எஜமான் படத்தில் நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
No comments:
Post a Comment