Tuesday, March 26, 2013

சமகாலத்தில் இரு மொழிகளில் தயாரிக்கப்பட்ட படம்

அனுராகம் 1978ல் வெளியான ஈழத்துத் தமிழ்த் திரைப்படம். சமகாலத்தில் தமிழ், சிங்களம் ஆகியஇரண்டு மொழிகளிலும் ஒரே கதையைப் படமாக்கும் வரிசையில் இது முதல் முயற்சியாகும். இத்திரைப்படத்தை தயாரித்து இயக்கிய யசபாலித்த நாணயக்கார என்பவரே இதே போல் இரண்டு மொழிகளிலும் படமாக்கிய “நாடு போற்ற வாழ்க” திரைப்படத்தையும் இயக்கியவர்.
என். சிவராம், எஸ். விஸ்வநாதராஜா, சந்திரகலா, எஸ். என். தனரட்னம் முதலியோர் நடித்த இத்திரைப்படத்தின் கதை, வசனத்தை எழுதியதோடு உதவி இயக்குனராகவும் பி. எஸ். நாகலிங்கம் பணியாற்றினார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களை ஈழத்து ரத்தினம் எழுத அவற்றை முத்தழகு, கலாவதி இருவரும் பாடினார்கள். சரத் தசநாயக்க இசையமைத்தார்.
இதே கதையை சமகாலத்தில் ‘கீதிகா’ என்ற பெயரில் சிங்களப் படமாக தயாரித்தார்கள். தமிழ்ப் படத்தில் சிவராம் – சந்திரகலா நடித்த பிரதான பாத்திரங்களில் சிங்களப் படத்தில் விஜய குமாரணதுங்கவும் மாலினி பொன்சேகாவும் நடித்தார்கள்.
இயக்குனர் யசபாலித்த நாணயக்கார, இடதுசாரி அரசியல்வாதியான வாசுதேவ நாணயக்காரவின் உடன் பிறந்த சகோதரர் ஆவார். ஈழத்து ரத்தினம் இயற்றிய பாடல் – முத்தழகு பாடியது – ‘எண்ணங்களாலே இறைவன் தானே, பொன் வண்ணத்தாலே வரைந்துவிட்டானே’ என்று ஆரம்பிக்கும் பாடல் பலரைக் கவர்ந்தது.
இந்தப் படத்தில் என். சிவராம், சந்திரகலா, அனோஜா, எஸ். என். தனரட்னம், எஸ். விஸ்வநாதராஜா, டொன் பொஸ்கோ, செல்வம் பெர்னாண்டோ ஆகியோர் நடித்தார்கள்.

No comments:

Post a Comment