Tuesday, March 26, 2013

கடன் தொல்லையால் வீடு கை நழுவும்போது எழுதிய பாடல்

கவிஞர் கண்ணதாசன்
ஒரு சமயம் பீம்சிங் இயக்கத்தில் கவிஞர் கண்ணதாசன் பாவமன்னிப்பு படத்திற்காக பாடல் எழுத அமர்ந்திருந்தார். அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
அவர் அந்த தொலைபேசி அழைப்பில் பேசி விட்டு அமர்ந்தார். எம். எஸ். வி. நம் கவிஞரின் முகத்தை பார்த்தவுடன் ஏதோ ஒன்று நடந்து இருக்கிறது என்பதை உணர்ந்தார். பாடலுக்கான சூழ்நிலையை இயக்குநர் சொல்லிக்கொண்டு இருந்தார். கவிஞரின் முகம் வாடி இருந்ததை உணர்ந்த எம். எஸ். டி. என்ன கவிஞரே ஏதாவது பிரச்சினையா என்று கேட்டார். அதற்கு நம் கவிஞர் சிரித்துக்கொண்டே ஒன்றும் இல்லை என்று பதில் அளித்தார்.
கதையையும் சூழ்நிலையையும் கேட்டவுடன் பாடலை எழுதி முடித்து பணத்தை பெற்றுக்கொண்டு அவசரமாக கிளம்பினார். எம். எஸ். வி. தன்னுடைய காரில் அவரை இறக்கிவிட்டு மறுபடியும் கேட்டார் என்ன ஏதாவது பிரச்சினையா என்று. அப்போது நடந்தவற்றையெல்லாம் எம். எஸ். வி. யிடம் சொன்னார் நம் கவிஞர்.
அவருக்கு வந்த தொலைபேசி அழைப்பில் கடன் தொல்லையால் அவருடைய வீட்டை ஏலத்தில் விட நோட்டீஸ் வந்திருப்பதாகவும் வீட்டு பொருட்களை எடுத்துக்கொண்டு போகுமாறு சொல்லியிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் எப்படி ஒருவரால் சிந்திக்க முடியும் ஆனால் கவிஞரோ வழக்கம் போல தன் நிலையை இந்தப் பாடலில் எழுதியிருப்பார்.
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்
நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
காலம் ஒருநாள் மாறும்
நம் கவலைகள் யாவும் தீரும்
வருவதை எண்ணி சிரிக்கின்றேன்
வந்ததை எண்ணி அழுகின்றேன்
படம்- பாவ மன்னிப்பு
இந்தப் பாடல் வரிகளில் மிக சிறப்பானது ‘வந்ததை எண்ணி அழுகின்றேன்’ என்பது அவருக்கு வந்த பிரச்சினையும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன்’ என்பது இந்தப் பாடல் எழுதியதால் வரக்கூடிய பணத்தையும் நினைத்து எழுதிய வரிகள். இந்தப் பாடலால் வந்த பணத்தை வைத்து அந்த வீட்டு பிரச்சினையில் இருந்து வெளிவந்தார். இவ்வாறு ஒவ்வொரு பாடலிலும் தன் வாழ்க்கையை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.

No comments:

Post a Comment