1961 ஆம் ஆண்டு இயக்குநர் பீம்சிங்க் இயக்கத்தில் பாலும் பழமும் என்ற திரைக்காவியம் வெளியாகி பெரு வெற்றி பெற்றது. இதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாயகனாகவும், கன்னடத்து பைங்கிளி, கொஞ்சு கிளி சரோஜாதேவி கதாநாயகியாக நடித்துள்ளனர். மேலும் இத்திரைப்படத்தில் நடிகவேள் எம். ஆர். ராதா, டி. எஸ். பாலையா, எஸ். வி. சுப்பையா, செளகார் ஜானகி, மனோரமா மற்றும் பலர் நடித்து மெருகூட்டியிருப்பர்.

இப்பாடல் நட பைரவி என்ற ராகத்தில் அமைந்துள்ளது. இது இருபதாவது மேளகர்த்தா ராகமாகும். இது பெண் பால் ராகம் என்றும் தமிழிசையில் ‘ஓரி’ ராகம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இது ஹிந்துஸ்தானி இசையில் மரபில் ‘ஆசாவரி’ என்றழைக்கப்படும். இது மாலையில் பாடப்படும் பாடவேண்டிய ராகமாகும்.
கவியரசர் கண்ணதாசனின் அற்புத வரிகளால் உயிரூட்டப்பட்டு, காவியப்பாடகர் டி.எம். செளந்தர்ராஜனால் உணர்வூட்டப்பட்டு, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் செரிவூட்டப்பட்ட பாடல் இது. தனது மனைவி, நோய் வருவதற்கு முன்பு எப்படி இருந்தாள் என்பதையும், தீரா நோய்வாய்ப்பட்டபோது அவளது உடலும் உள்ளமும் எப்படி சோர்ந்து, போனது என்பதை ஒப்பிட்டு வாசமுள்ள வரிகளை பயன்படுத்தி வாசமிழந்த அம்மலரை தேற்றி அவளது மனதில் நம்பிக்கை விதைகளை விதைத்து வடித்ததை கேட்கும்போது பார்க்கும்போது உணரும்போது, நமது கண்களில் நீரை வரவழைக்கிறது.
கணவன் தனது மனைவியின் மீது கொண்டுள்ள அன்பின் ஆழத்தையும் காதலின் புனிதத்துவத்தையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது இந்தப் பாடல்.
(பாலும் பழமும் கைகளில் ஏந்தி)
இரவில் தனது பசி அறிந்து ஒரு கையில் பாலும், மறுகையில் பழங்களையும் தனது மனைவி எடுத்து- அதை
(பவள வாயில் புன்னகை சிந்தி)
புன்னகை பூத்த மலராக பூத்து குலுங்கியவாறே
(கோல மயில் போல் நீ வருவாயே)
கார்மேகம் கண்டுவிட்ட அழகிய தோகை மயிலென
வந்தாயே என்றும்
(கொஞ்சம் கிளியே அமைதிகொள்வாயே)
கொஞ்சும் கிளிபோல பேசுபவளே மன அமைதி கொள்
என்றும்
(பிஞ்சு முகத்தின் ஒளியிழந்தாயே)
மழலையின் முகப் பொலிவை தனது மனைவி
இழந்துவிட்டாளே!
(பேசிப் பழகும் மொழி மறந்தாயே)
ஒரு வார்த்தைக்கூட பேச சக்தி அற்றும் செவி
அடைத்தும் கிடக்கிறாயே
(அஞ்சி நடக்கும் நடை மெலிந்தாயே)
நடக்கக்கூட முடியாமல் மெல்ல நடப்பதாகவும்
(அன்னக் கொடியே அமைதி கொள்வாயே)
அன்னக் கொடியிடை பெண்ணே மன அமைதிகொள்
(உண்ணும் அழகைப் பார்த்திருப்பாயே)
நீ பறிமாறிய உணவை, நான் உணவருந்தும்போது அந்த
அவள் அழகை ரசித்ததாகவும்,
(உறங்க வைத்தே விழித்திருப்பாயே)
நான் உறங்கும் வரையில் விழித்திருப்பாயே!
(கண்ணை இமைபோல் காத்திருப்பாயே)
கண்களை காக்கும் இமைகள் போல என்னை காத்தாயே!
(காதற் கொடியே கண் மலர்வாயே)
காதல்பெண்ணே கண்திறந்து பார்ப்பாயே
(ஈன்ற தாயை நான் கண்டதில்லை)
தாயைக்கூட பார்க்காத எனக்கு மனைவியான உன்
வடிவில் தாயையும் கண்டுவிட்டேன்.
(எனது தெய்வம் வேறெங்கும் இல்லை)
தெய்வம் என்று தனியாக ஒன்று இல்லை அந்த
தெய்வமே எனது தாய் நீதானம்மா
(உயிரைக் கொடுத்தும் உனை நான் காப்பேன்)
தாயாகவும், தெய்வமாக இருக்கும் உன்னை எனது
உயிரைக் கொடுத்து காத்திடுவேன்.
(உதய நிலவே கண் மலர்வாயே)
உதிக்கும் (குளிர்ச்சியான) நிலவே கண் திறப்பாயே
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவழ வாயில் புன்னகை சிந்தி
கோல மயில் போல் நீ வருவாயே
கொஞ்சம் கிளியே அமைதி கொள்வாயே
என்று நெஞ்சுருக பாடி, ஒரு கணவன் தனது மனைவியின்பால் தான் கொண்டுள்ள காதலின் ஆழத்தை அழகாகவும் அற்புதமாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல் ஓர் அற்புதமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல் ஓர் அற்புத பாடல் ஆகும்.
No comments:
Post a Comment