ஸ்ரீவித்தியாவுக்கு ஜோர்ஜ் தோம்ஸிடமிருந்து விவாகரத்து 1990ல் கிடைத்தது. சற்று விடுதலை ஆனார். ஸ்ரீவித்யா உச்சநீதி மன்றம் அவருடைய சொத்துக்களை கணவரிடம் இருந்து மீட்டுக் கொடுத்தது. தொண்ணூறுகளின் இறுதியில் வாய்ப்புகள் குறையத் தொடங்கின.
யாரிடமும் சென்று வாய்ப்புக் கேட்டறியாத ஸ்ரீவித்யா தமிழில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். ஸ்ரீவித்யா தொலைக் காட்சிக்கு நடிக்க சென்றார். அழைக்கப்பட்ட சினிமா வாய்ப்புகளை மட்டுமே ஒப்புக்கொண்டார். அவற்றில் பெயர் சொல்லும்படி அமைந்தவை குறைவு.
2000ல் ஸ்ரீவித்யா சென்னையிலிருந்து கிளம்பி திருவனந்தபுரத்துக்குக் குடிபெயர்ந்திருந்தார். மலையாளப் படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். மலையாள சினிமா ஸ்ரீவித்யாவை சொந்தம் பாராட்டியது. ஏற்கனவே மலையாள சினிமா தமிழ் நடிகை ஸ்ரீவித்யாவை கொண்டாடி வித்தியாசமான பாத்திரங்கள் பலவற்றை கொடுத்தது. அதிகமான படங்களில் நாயகியாக ஸ்ரீவித்யா நடித்தது மலையாளத்தில் தான்.

உருவக் குலைவு ஏற்படாமலிருக்கச் சிகிச்சைகள் மேற்கொண்டார். கடைசி வரை அந்த அகன்ற விழிகளின் உயிர்ப்பையும் முகத்தின் பிரகாசத்தையும் மருந்து காப்பாற்றியது. மரணம் நெருங்குவது தெரிந்ததனாலோ என்னவோ தீவிரமாக செயல்பட ஆரம்பித்தார். படங்கள், தொடர்கள் என்று தன்னை மறந்த நடிப்பில் ஈடுபட்டார். மேடையேறிக் கச்சேரிகள் செய்தார். சாயிபாபாவின் பக்தராகியிருந்தார்.
இறுதியில் மரணம் வேகமாக துரத்த பயந்து போய் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டு, போராடி வந்தார். அப்போது சினிமா உலகத்தைச் சேர்ந்த யாரையுமே சந்திக்க மறுத்தார். எவரோடும் தொடர்பின்றி வாழ்ந்தார். சொத்துக்களை எல்லாம் தொண்டு நிறுவனங்களுக்கும், கலாஷேத்ராவுக்கும் எழுதி வைத்தார். ஒரு முறை கமல்ஹாசனை மட்டும் சந்தித்தார். அவரும் வெளி உலகில் எதையும் சொல்லாமல், என் நீண்ட கால தோழியைச் சந்தித்தேன் என்று கூறி விட்டுச் சென்றார்.
காலமெல்லாம் போராட்டத்தை சந்தித்து வந்த ஸ்ரீவித்யா மரணத்தோடும் போராடினார். 19 அக்டோபர் 2006 அன்று தன் போராட்டத்தை கைவிட்டு மரணத்திடம் தோற்றார். ஆம் 53 வயதில் அந்த கலையரசி மறைந்தார். சிறந்த பாடகி நாட்டிய தாரகை நடிகை என புகழப்பட்டவர் கேரளாவிலேயே மறைந்தார். அதற்கு மரியாதை அளிக்கும் விதமாக அவருடைய இறுதிச் சடங்கு கேரள அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டது. ஸ்ரீவித்யா ஒரு குறிஞ்சி மலர் அது கேரளாவுக்கு தெரிந்து இருந்தது.
அந்த நீண்ட விழிகளையும் அழகிய உதடுகளையும் மட்டுமல்ல, ஒரு கலை பொக்கிஷத்தையும் அன்று தீ தின்று கொண்டிருந்தது. அழகின் ரசிகர்கள் மனதுக்குள் அழுது கொண்டிருந்தார்கள்.
No comments:
Post a Comment