Wednesday, July 17, 2013

ஆயிரம் வசனங்களை பேசிடும் ஆற்றல் படைத்த கண்ணசைவை கொண்ட கண்ணழகி

பொண்ணுக்குத் தங்கமனசு, அவள் கண்ணுக்கு நூறு வயசு
நடிகையரில் எவரையுமே குறிப்பிட்டு பாராட்டாத கவியரசு கண்ணதாசன் நடிகை ஸ்ரீவித்தியாவை மட்டும் குறிப்பிடும் போது “பொண்ணுக்குத் தங்கமனசு, அவள் கண்ணுக்கு நூறு வயது” என்று அவரது அழகையும், கண்வீச்சு நடிப்பையும் பாராட்டி எழுதினார்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஒரு பாராட்டு விழாவில் குறிப்பிடும் போது “ஒரு நடிகைக்கான சர்வ லட்சணமும் கொண்ட பெண் இவர்” என்று பாராட்டினார். அழகும், திறமையும் கொண்ட அதிசய நடிகை இவர். கண்ணழகி என்று பாராட்டப்பட்டவர்.
இசை பேரரசி எம்.எல். வசந்தகுமாரி, விகடம் கிருஷ்ணமூர்த்தி தம்பதியரின் மகளாக 1953 ஜுலை 14இல் பிறந்தவர் ஸ்ரீவித்தியா. ஸ்ரீவித்தியாவின் இயற் பெயர் மீனாV. தன் தாயைப் போலவே நல்ல இசை வளம் கொண்டவரான ஸ்ரீவித்தியா, நடனத்திலும் சிறந்து விளங்கினார். சிறு வயது முதலே சினிமாவின் மீது ஈர்ப்பு கொண்டு வளர்ந்தார்.
தாயாரின் எதிர்ப்பையும் மீறி 13வது வயதில் நடிக்கத் தொடங்கினார் ஸ்ரீவித்தியா. திருவருட் செல்வர் படத்தில் சிவகுமாருக்கு ஜோடியாக சக்தியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பின்னர் தொடர்ந்து நிறையப் படங்களில் எம்.ஜி.ஆர். தவிர்த்து எல்லா பிரபல நடிகர்களுடனும் நடிக்க ஆரம்பித்தார் ஸ்ரீவித்தியா.
ஏ.வின் சென்ட் இயக்கத்தில் 1973 இல் வெளியான மலையாளப் படம் ‘செண்ட்’ மூலம் மலையாளத்திலும், பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் மூலம் தமிழிலும் முன்னணிக் கதாநாயகியானார்.
கதாநாயகியாக நடிக்கத் தொடங்கிய ஸ்ரீவித்தியா பின்னர் குணசித்திர வேடங்களிலும் நடிக்கத் தொடங்கினார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என எல்லா தென்னிந்திய மொழிகளிலும் 900 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீவித்தியா.
சினிமாவில் தொடர்ந்து நடித்தாலும் அவரது ஆர்வம் நடிப்பில் அல்ல, நடனத்தில் தான் இருந்தது. 1971 இல் திருமண வாய்ப்பும் வந்தது. அமெரிக்கா வாழ் விஞ்ஞானி ஒருவர் அவரை மணந்து கொள்ள விரும்பினார். குடும்பச் சூழ்நிலையைக் கவனத்தில் கொண்டிருந்த தாயார் எம்.எல்.வி. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே திருமணம் என்று சொன்னதில் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனது.
ஸ்ரீவித்தியா மிக அற்புதமான நடிகை, அவர் கண்ணசைவு ஒன்றே ஆயிரம் வசனங்களை பேசிவிடும் ஆற்றல் படைத்தவை எனலாம். அதற்கு இரண்டே, இரண்டு உதாரணம் கூறலாம்.
அபூர்வராகங்கள் படத்தின் பைரவி வேடத்தை ஹிந்தியில் ஹேமாமாலினி கமலோடு சேர்ந்து நடித்து இருந்தார். ஸ்ரீவித்தியா ஹேமமாலினி இருவருமே நாட்டிய தாரகைகள் என்றாலும், சிறந்த நடிகைகள் என்றாலும் ஹேமாமாலினி நடிப்பு கொஞ்சம் குறைவாகவே ரசிகர்களுக்கு பட்டது. காரணம், ஸ்ரீவித்தியாவின் கண்ணசைவு மிஸ் என்பதே. அதேபோல ரஜினியின் மாப்பிள்ளை படத்தின் ராஜேஸ்வரி அம்மா வேடம் ஸ்ரீவித்தியா அளவுக்கு மனிஷா கொய்ராலாவுக்கு கொஞ்சம் கூட பொருந்தவில்லை.
என்றே படத்தின் தோல்வி கூறியது. ஸ்ரீவித்தியா ஸ்ரீவித்தியா தான் என்று பலரும் கூற செய்தது இவர் நடிப்பு திறன். 1973 இல் பாலசந்தர் இயக்கத்தில் சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் நடித்தார்.
அப்போது தான் கமலுடன் முதல் முறை நடித்தார். அதன் பின்னர் 1975 இல் அபூர்வ ராகங்கள் கமலுடன் ஸ்ரீவித்தியா காதல் வயப்பட்டார். இப்படத்தில் நடித்திருந்த தனக்கும், தன் காதலருக்கும் இடையேயான காதல் இந்தப் படத்தில்தான் உறுதியானதாக ஸ்ரீவித்தியாவே சொல்லியிருக்கிறார். பின்னர் சமஸ்சியா மலையாள படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர்.
நாங்கள் சந்திக்கும், பேச சந்தர்ப்பம் கிடைக்கும் நாட்களிலெல்லாம் என்னை உருகி, உருகி காதலிப்பதாகச் சொன்ன அவர், “உன்னைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று வாக்குறுதியும் அளித்துவிட்டுப் போன மறுநாளே, அவரது திருமணச் செய்தியை காலை நாளிதழில் பார்த்து அதிர்ச்சியாகிப் போனேன்” என்று தனது வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிடும் போது சொல்லியிருக்கிறார் ஸ்ரீவித்தியா.
கிட்ட தட்ட இருவர் வீட்டிலும் திருமணத்துக்கு சம்மதித்த நிலையில் மேல் நாட்டு மருமகள் படத்தில் நடித்த வாணி கணபதிக்கும், கமலுக்குமான நட்பு ஸ்ரீவித்தியா கமல் காதலை மூழ்கடித்தது.
காதல் சோகம் அவரை வாட்டியது. மிகுந்த குழப்பத்தில் என்ன செய்கிறோம் என்பதை கூட உணராது, 1976 தீக்கனல் என்ற மலையாளப் படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் துணை இயக்குநர் ஜார்ஜ் தாமசைக் காதலிக்கத் தொடங்கினார். தீவிரமாக இருந்த காதல் எல்லோரின் எதிர்ப்பையும் மீறி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திருமணத்தில் முடிந்தது.
ஆனால் அவர் அமைதியோ, நிம்மதியோ அவருக்கு திரும்ப கிடைக்கவில்லை. காதல் கணவரின் பணத்தாசை ஸ்ரீவித்தியாவை துரத்தியது. தினமும் சண்டை, பிரச்சினை என்று உறவு கசிந்தது.
ஒன்பதாவது ஆண்டு இருவரது திருமணமும் விவாகரத்தில் முடிந்தது. சம்பாதித்த எல்லாவற்றையும் ஸ்ரீவித்தியா இழந்தார், நடு வீதிக்கு வந்தார். வீடு வங்கிக் கையிருப்பு, சொத்துகள் எல்லாம் கணவரால் பறிபோயின. மீதமிருந்தவற்றை மீட்க சட்ட ரீதியாக போராடியதில் அவருடைய வாழ்க்கை நிம்மதி அற்று போனது. எனினும் தொடர்ந்து நடித்தார்.
1978 கமல் - வாணி கணபதி திருமணத்துக்கு பிறகு கமலும், ஸ்ரீவித்யாவும் 8 ஆண்டு காலம் சேர்ந்து நடிக்கவில்லை. பின்னர் 1986 இல் வெளிவந்த புன்னகை மன்னன் தான் இருவரும் சேர்ந்து நடித்த திரைப்படம். பிறகு கேளடி கண்மணி, தளபதி, கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன், ஆனந்தம் என அற்புதமான படங்கள் தொடர்ந்து வெளியாகின.
1990 அக்டோபரில் மீண்டும் ஒரு காரிருள் அவர் வாழ்க்கையை சூழ்ந்தது. அது அவருக்கு பெரிய இடி. ஸ்ரீவித்தியாவுக்கு இருந்த ஒரே அடைக்கலமும் மறைந்தது. ஆம் அவரது தாயார் இசையரசி எம்.ல்.வி. மறைந்தார்.

No comments:

Post a Comment