கே.பாலசந்தர் இயக்கத்தில் வசந்தா நடித்த படம் ‘பத்தாம் பசலி’. இது, கவிஞர் ஆலங்குடி சோமு தயாரித்த படம். இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் போதே, வசந்தாவுக்கு சோதனை ஏற்பட்டது. பாலச்சந்தரும், மற்ற கலைஞர்களும் படப்பிடிப்புக்குத் தயாராகக் காத்திருக்க, வசந்தா தாமதமாக வந்தார். அதற்குக் காரணம் அவர் அல்ல.
அவருக்கு சிகை அலங்காரம் செய்த ஹேர் டிரஸ்சர் அதிக நேரம் எடுத்துக் கொண்டதே காரணம். இதனால், பாலசந்தர் கோபமாக இருக்கிறார் என்பதை வசந்தாவிடம் கிசு கிசுத்துவிட்டுப் போனார் நாகேஷ். அதன் பிறகு நடந்தது பற்றி வசந்தா கூறுகிறார்.
பாலசந்தர் சேர் என் அருகே வந்து, படமாக்கப்பட இருந்த காட்சியை விவரித்தார். சுமார் 200 அடி வரக்கூடிய காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்பதை நடித்துக் காட்டினார். படப்பிடிப்பை ஆரம்பிக்கலாமா?’ என்று அவர் கேட்க, நானும் சரி என்றேன். வரிசையாக பலரிடம் கை குலுக்கிவிட்டு, இயல்பாக நடந்தபடி என் அலுவலக அறையில் நுழைந்து என் இருக்கையில் அமர வேண்டும். டைரக்டர் சொல்லிக் கொடுத்தபடியே நடித்தேன்.
ஒரே டேக்கில் 200 அடி காட்சியும் ‘ஓ.கே’ ஆயிற்று. இதற்குப் பிறகு, நாகேஷ் என்ன செய்தார் தெரியுமா? பாலு! நான் அப்போதே சொன்னேன் இல்லையா? வசந்தா நாடகத்தில் இருந்து வந்த பொண்ணு, ஒரே டேக் போதும். இப்போது கோபம் போய்விட்டதா?’ என்று செட்டில் எல்லோருக்கும் கேட்கும்படி கூறினார். பாலசந்தர் பதில் சொல்லவில்லை. நாகேஷின் வார்த்தைகளை அவர் ஏற்றுக் கொண்டதை அவர் மெளனம் புலப்படுத்தியது.
பாலசந்தர் டைரக்ஷனில் நடித்தது, எனக்குக் கிடைத்த பாக்கியம். பெண்களின் உணர்ச்சிகளை, மனப்போராட்டங்களை சித்தரிப்பதில் அவருக்குள்ள ஆற்றலைக் கண்டு பிரமித்துப் போயிருக்கிறேன். பத்தாம்பசலிக்குப் பிறகு அவரது இயக்கத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிட்டவில்லை. எனக்கான கெரக்டர் அவர் படங்களில் உருவாக்கவில்லை என்பதாகவே எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு வசந்தா கூறினார்.
No comments:
Post a Comment