நடிப்பு பயிற்சி பெற்று வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் கண்டக்டராக பெங்களூர் வந்தார் ரஜனி
நடிப்பு பயிற்சி பெற்றும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் கண்டக்டர் வேலையில் சேரும் எண்ணத்துடன் பெங்களூருக்கு ரயிலில் ஏறினார் ரஜினி. ரயிலில், ரஜினியின் எதிரே ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். உங்களை எங்கேயோ பார்த்தது மாதிரி இருக்கே என்றார் அவர்.
ஆமாம் என்றார் ரஜினி. பெரியவர் தொடர்ந்து சொன்னார்.
என் மூத்த பையன் பி. எஸ். சி. முதல் வகுப்பில் பாஸ் செய்தவன். நான்கு வருடமாக வேலைக்கு முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. கடைசியில் பஸ் கண்டக்டர் வேலைக்கு மனு போட்டோம். பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால், வேலை வாங்கித் தருவதாக ஒரு பெரிய அதிகாரி கூறியிருக்கிறார்.
அந்த வேலை நல்லபடியாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காக திருப்பதிக்குச் சென்று வெங்கடாசலபதியிடம் வேண்டிக்கொண்டு இப்போது ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன்.
பெரியவர் இப்படிக் கூறியதைக் கேட்டு ரஜினிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
பி. எஸ். சி. படித்த பட்டதாரிக்கு கண்டக்டர் வேலை கிடைக்க வேண்டும் என்று இவ்வளவு தூரம் முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த வேலையை மிகச் சாதாரணமானதாக நினைத்துக் கொண்டிருந்தோமே கண்டக்டர் வேலை எவ்வளவு பெரிய வேலை என்று நினைத்தார்.
நல்ல வேளையாக கண்டக்டர் வேலையை ராஜினாம செய்யவில்லை. தொடர்ந்து கண்டக்டர் வேலை பார்த்து, பிழைத்துக் கொள்ளலாம் என்று மகிழ்ச்சி அடைந்தார். ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார். ஆனந்தமாக புகை விட்டார்.
ரயில் பெங்களூர் போய்ச் சேர்ந்தது. ரெயிலில் இருந்து இறங்கிய ரஜினிகாந்த், வீட்டுக்குப் போவதற்காக 36 ஆம் நம்பர் பஸ்சில் ஏறினார். பஸ்சில் கண்டக்டராக இருந்தவர் புட்ராஜ், ரஜினியின் நண்பர் இருவரும் ஒரே நேரத்தில் தான் கண்டக்டர் வேலையில் சேர்ந்தார்கள்.
ரஜினியைப் பார்த்த அவர் வியப்பும், திகைப்பும் அடைந்தார். என்ன சிவாஜி எப்போது பெங்களூருக்கு வந்தாய்? என்று விசாரித்தார். இப்போதுதான் ரயிலில் இருந்து இறங்கினேன். வீட்டுக்குத்தான் போய்க்கொண்டிருக்கிறேன் என்று ரஜினி பதிலளித்தார்.
நடிப்பு பயிற்சி எல்லாம் எப்படி இருக்கிறது? பயிற்சி எல்லாம் முடிந்து விட்டது. இதுவரை பட வாய்ப்பு எதுவும் வரவில்லை.
உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? என்று தயக்கத்துடன் புட்ராஜ் கேட்டார்.
என்ன விஷயம்? ஒன்றும் தெரியாதே என்று ரஜினி கூறினார்.
புட்ராஜ் கொஞ்ச நேரம் பேசவில்லை. பிறகு மனதைத் திடப்படுத்திக் கொண்டு, போன வாரம் 12 கண்டக்டர்களை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள். அதில் நீயும் ஒண்ணு. இரண்டு வருடங்களுக்கு மேலாக விடுமுறையில் இருந்ததால், மேற்கொண்டு அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார்கள் என்றார்.
அந்த பஸ் மட்டுமல்ல, உலகமே திசை மாறி சுழல்வது போல் இருந்தது. ரஜினிக்கு, கவலைப்படாதே. நீ பெற்ற நடிப்பு பயிற்சி, உன்னை கைவிட்டு விடாது என்று ஆறுதல் கூறினார் புட்ராஜ். சோர்வுடன் வீட்டுக்குச் சென்றார், ரஜினி.
டிஸ்மிஸ் ஆன செய்தியை சொல்வதற்காகத்தான் அவசரமாக அழைத்திருக்கிறார்கள் என்பதை ரஜினி தெரிந்து கொண்டார்.
அன்று இருந்த மனநிலை பற்றி ரஜினி எழுதியிருப்பதாவது :-
நடிப்பு பயிற்சி முடிந்ததும் பட அதிபர்கள் என்னை ஒப்பந்தம் செய்ய கியூ வரிசையில் நிற்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அது பலிக்கவில்லை. கண்டக்டர் வேலை பார்க்கலாம் என்று ஊர் திரும்பினால், அந்த வேலையும் போய்விட்டது. ரொம்பவும் சோர்ந்து போய்விட்டேன். வாழ்க்கையில் முதல் தடவையாக.
பஸ் டிப்போவுக்கு சென்றேன். அங்கிருந்தவர்கள் என்னை பரிதாபமாகப் பார்த்தார்கள்.
பத்து குண்டுகள் பாய்ந்தாலும் தைரியமாகத் தாங்கிக் கொள்வேன். ஆனால் பரிதாபத்தோடு பார்க்கிற ஒரு பார்வையைக்கூட என்னால் தாங்கிக்கொள்ள முடியாது.
முன்பெல்லாம் என்னை புகழ்ந்து பேசியவர்கள் இப்போது, நடிகனாக வேண்டும் என்று மெட்ராஸ் போனான். இவன் மூஞ்சிக்கு நடிகனாக முடியுமா? யார்- யார் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே இருக்கணும் என்று என் காதுபடவே பேசினார்கள்.
அப்போதே நான் முடிவு செய்தேன். நம்மிடம் இருக்கும் ஒரே ஆஸ்தி - தன்மானம். மீண்டும் சென்னைக்குத் திரும்ப வேண்டும். நடிகனாகாமல் பெங்களூருக்குத் திரும்பக்கூடாது என்று சபதம் எடுத்துக்கொண்டேன்.
அன்று இரவே சென்னைக்கு ரயில் ஏறினேன். இவ்வாறு ரஜினி குறிப்பிட்டுள்ளார்.
ஜெய்சங்கரும் வசந்தாவும் அறிமுகமான இரவும் பகலும்
நடிகர் ஜெய்சங்கரும், வசந்தாவும் ‘இரவும் பகலும்’ படத்தில் ஜோடியாக அறிமுகமானார்கள். நாடக உலகில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் வசந்தா. ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்த வசந்தாவுக்கு சிறுவயதிலேயே அவரது தாயார் நடனப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார்.
1957ல் என் அப்பா இறந்த பிறகு அம்மாதான் கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தார். அப்போது குடும்ப பொருளாதாரம் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை. இருந்தாலும் அம்மா என்னை கொன்வென்ட்டில் படிக்க வைத்தார். இதனால் எனக்கு ஆங்கிலம் சரளமாக வரும். சேவா ஸ்டேஜ் நாடக குழுவில், நடிகர் எஸ்.வி. சஹஸ்ரநாமம் எனக்கு நடிப்பில் பயிற்சி கொடுத்தார்.
இதன் பிறகு 1961ல் டி.கே.எஸ். நாடக சபாவுக்கு வந்தேன். டி.கே.எஸ். நாடக சபா நடத்திய ‘ராஜராஜ சோழன்’ நாடகத்தைப் பார்க்க, சிட்டாடல் பட நிறுவன அதிபரும், டைரக்டருமான ஜோசப் தளியத் வந்தார். என் நடிப்பைப் பார்த்தவுடன், அவர் தயாரிக்க இருந்த ‘விளக்கேற்றியவள்’ படத்தில் கதாநாயகியாக நடிக்க என்னை ஒப்பந்தம் செய்தார்.
இதற்கிடையே, சிட்டாடல் பேனரில் ‘இரவும் பகலும்’ என்ற இன்னொரு படத்தையும் தயாரிக்க ஏற்பாடு செய்தார். அந்தப் படத்துக்கு நாயாகனாக நடிக்க ஜெய்சங்கரை ஒப்பந்தம் செய்தார். அதுதான் ஜெய்சங்கருக்கு முதல் படம். அவருக்கு ஜோடியாக ஒரு புதுமுகத்தை அறிமுகம் செய்யத் தீர்மானித்தார்.
‘விளக்கேற்றியவள்’ பட நாயகியான என்னையே ‘இரவும் பகலும்’ படத்திலும் கதாநாயகியாக நடிக்க வைத்தால் என்ன என்று அவருக்குத் தோன்றியது. நேராக என்னை வந்து பார்த்தவர், நீதான் இரவும் பகலும் படத்துக்கும் கதாநாயகி என்று சொல்லி ஒப்பந்தம் செய்தார்.
இரவும் பகலும் படத்தில் அசோகன், நாகேஷ், பண்டரிப்பாய் ஆகியோர் மட்டுமே தெரிந்த முகங்கள். நான் ஜெய்சங்கர், மற்ற நடிகர்கள் எல்லோருமே புதியவர்கள். அப்போது சம்பளமெல்லாம் பெரிதாக இல்லை. நாடகத்தில் நடித்துக் கொண்டே, சினிமாவிலும் நடித்தேன்.
ஜெய்சங்கர் கதாநாயகன் என்ற பந்தா இல்லாமல் நடந்து கொள்வார். எப்பவும் துறுதுறு என்று இருப்பார். நாங்கள் இரண்டு பேருமே புதுமுகமா இருந்ததால் அதிகமாகப் பேசிக் கொள்வது கிடையாது. படம் வேகவேகமாக வளர்ந்து, 1965 பொங்கல் தினத்தன்று வெளிவந்தது.
எங்கள் படம் ரிலீஸ் ஆனபோது, கூடவே எம்.ஜி.ஆர். நடித்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’, சிவாஜி நடத்த ‘பழனி’ ஆகிய படங்களும் ரிலீஸ் ஆயின.
பெரிய நடிகர்களுடன் போட்டி போட்டாலும் ‘இரவும் பகலும்’ 100 நாள் ஓடி வெற்றிபெற்றது. முதன் முதலாக நான் ஒப்பந்தமான ‘விளக்கேற்றியவள்’, 1965 ஏப்ரலில் வெளிவந்தது. அதே ஆண்டு இறுதியில், ‘கார்த்திகை தீபம்’ வெளிவந்தது. இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக அதாவது கதாநாயகனாக கே.விஜயன் நடித்தார். இந்த விஜயன்தான் பின்னாளில் டைரக்டர் கே.விஜயனாகி, சிவாஜியின் ‘தீபம்’, ‘தியாகம்’, ‘திரிசூலம்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கினார்.
ஜெய்சங்கருடன் ‘இரவும் பகலும்’ படத்தில் ஜோடியாக நடித்த பிறகு அவர் வேறு நாயகிகளுடன் பல படங்களில் ஜோடியாக நடித்தார். மறுபடி நாங்கள் ‘எங்கவீட்டுப் பெண்’, ‘அடுத்த வாரிசு’, என இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்தோம். இதற்குள் கலைப்பயணத்தில் பல வருடங்கள் கடந்திருந்தது. இவ்வாறு வசந்தா கூறினார்.
No comments:
Post a Comment