Thursday, May 25, 2023

நம் வாழ்வில் நல் முத்திரை பதிக்க சித்திரையே

வா“கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி” என்ற பெருமைக்குரிய தமிழினம் ஆனது ஒவ்வொரு வருடமும் தமிழில் சித்திரை முதலாம் திகதியை வருடப்பிறப்பாக கோலாகலமாக கொண்டாடுகிறது.

இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழும் உலக தமிழர்களால் இப்பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தமிழர்கள் ஆரம்ப காலங்களில் இருந்தே வானியல் ஜோதிடங்களில் சிறந்து விளங்கியதால் ஒரு தமிழ் ஆண்டு காலரீதீயாக சிறப்பாக கணிப்பிட படுகின்றது.

அதாவது சூரியன் மேடராசியில் பிரவேசிக்கும் போது தொடங்கும் வருடம் மீன ராசியில் பிரவேசிக்கும் போது முடிவடைகின்றது. இதனடிப்படையில் பஞ்சாங்கங்களின் வாயிலாக தமிழ் புத்தாண்டானது கணிப்பிடப்படுகிறது.

சித்திரை மாதம் காலநிலை அடிப்படையில் வசந்த காலத்தின் ஆரம்பமாகும் இதனால் மக்கள் மகிழ்ச்சியோடு இப்புத்தாண்டை வரவேற்கின்றனர்.

தமிழ் புத்தாண்டின் வரலாறு சித்திரையின் மரபுகள் சிறப்புக்கள் என்பவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

தமிழர்கள் இயற்கையோடு ஒன்றித்து வாழ்ந்தவர்கள். இதனால் பண்டிகைகளை பருவகாலங்களுக்கு ஏற்ப கொண்டாடினார்கள்.

தமிழர்களின் நாட்காட்டி 12 ராசிகளை அடிப்படையாக கொண்டதாகும். இதனால் ராசிகளில் முதலாவதான மேட ராசியில் சூரியன் ​ முதல் நாள் தமழிர்களின் புதுவருடம் ஆகும்.

இதை சங்க இலக்கியமான நெடுநல்வாடை “திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக விண்ணுர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து” குறிப்பிடுகிறது.

மேலும் அகத்தியாயிரம் புட்பவிதி நூலின் மூலம் சித்திரை முதல் நாளே தமிழ்புத்தாண்டு என்பதற்கான சான்றுகள் கிடைக்கப்பெறுகின்றன.

சித்திரை புத்தாண்டு பலவகையான சம்பிரதாயங்களை கொண்டதாகும். புத்தாண்டு ஆரம்பித்து விட்டால் வீடுகளில் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது.

புத்தாடை வாங்குதல், மருத்துநீர் வைத்து நீராடல், இனிப்பு பண்டங்களை பரிமாறி கொள்ளல், பொங்கல் இடுதல், கைவிசேடம் பெறுதல் சுபநேரத்தில் புதிய தொழில்களை ஆரம்பித்தல், பெரியவரக்ளிடம் ஆசி பெறுதல்,

கிளித்தட்டு, ஊஞ்சல், மாட்டுவண்டில் சவாரி, ஏறுதழுவுதல் என தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் வழிபாடுகளோடு மங்களகரமாக மக்கள் புத்தாண்டை வரவேற்பர்.

தமிழர்கள் உலகமெங்கும் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் தமது பண்பாடான பண்டிகையை கொண்டாட தவறவில்லை.

தமிழ் மாதங்களிள் ஒவ்வொரு மாதங்களும் தனி சிறப்புடையன. அவற்றில் சித்திரை தனித்துவமானது.. அம்மாதத்தின் பௌர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் வருவதனால் இம்மாதம் சித்திரை என அழைக்கப்படுகிறது.

“சித்திரையே வா நம் வாழ்வில் நல் முத்திரை பதிக்க வா” என்று சொல்லும் மரபு காணப்படுகிறது இதன்மூலம் சித்திரையின் சிறப்பினை காணலாம். காலநிலை ரீதியாக சித்திரை சிறுமாரி என்று குறிப்பிடுவார்கள்.

இக்காலத்தில் நெல் விதைப்பில் சிறுபோகம் ஆரம்பமாவதுடன் விவசாயிகள் பயிர்செய்ய ஆரம்பிப்பார்கள். இவ்வாறு பல மகத்துவங்களை தன்னகத்தே கொண்டது இம்மாதமாகும்.

No comments:

Post a Comment