Thursday, May 25, 2023

வேலையும் மயிலையும் வணங்க சிறந்த நாள் வைகாசி விசாகம்

முருகப் பெருமானுக்குரிய முக்கிய விரத நாட்களில் ஒன்று வைகாசி விசாகம் ஆகும். அனைத்து மாதங்களிலும் விசாகம் நட்சத்திரம் வரும் என்றாலும், வைகாசி மாதத்தில் வரும் விசாகம் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். இது முருகப் பெருமான் அவதரித்த தினம் என சொல்லப்படுகிறது. ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் முருகப் பெருமான். நெற்றிக்கண்ணில் உதித்த குழந்தை ஆயிரம் இதழ் கொண்ட தாமரை இதழின் மேல் காணப்பட்டது.

கார்த்திகை பெண்களை அழைத்த சிவ பெருமான், இந்த குழந்தையை வளர்க்கும் பொறுப்பை அளித்தார். ஆறு பேரும் தொட்டவுடன் அது ஆறு குழந்தைகளாக தோன்றியது. ஆறு உருவங்களாக இருந்த முருகப் பெருமானை அன்னை பார்வதி தேவி, ஒன்றாக சேர்த்து அணைத்ததும் ஆறு உருவமும் ஒரே உருவாகமாக மாறி, ஆறு முகங்களுடன் முருகப் பெருமான் காட்சி அளித்த தினம் தான் இந்த வைகாசி விசாக திருநாள். நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதால் அவருக்கு கந்தன் என்ற பெயரும் ஏற்பட்டது.

விசாக நட்சத்திரத்தில் புதிய உருவம் கொண்டவர் என்தால் முருகனுக்கு விசாகன் என்ற திருநாமம் உண்டு. 'வி' என்றால் பக்ஷி என்றும், 'சாகன்' என்றால் வாகனமாக கொண்டவன் என்றும் பொருள். மயிலை வாகனமாக கொண்டவன் என்பது விசாகன் என்ற சொல்லுக்கு பொருளாகும். இதனால் வைகாசி விசாகத்தன்று வேலையும், மயிலையும் வணங்குவது மிக சிறப்பானதாகும். அதே சமயம் 6 முனிவர்களின் சாபங்களை போக்கி, முருகன் அருள் செய்த தினமும் இதே வைகாசி விசாகம் தான். வைகாசி மாதத்தில் பெளர்ணமி திதியும், விசாகம் நட்சத்திரமும் கூடி வரும் நாளை வைகாசி விசாகம் என்கிறோம். இது ஆண்டு தோறும் மே அல்லது ஜூன் மாதங்களில் கடைபிடிக்கப்படுகிறது. 2023 ம் ஆண்டில் வைகாசி விசாகமானது ஜூன் 2 ம் திகதி காலை 05.55 மணிக்கு துவங்கி, ஜூன் 03 ம் திகதி காலை 05.54 வரை விசாகம் நட்சத்திரம் உள்ளது.

நான்கு திசைகளில் மட்டுமின்றி சொர்க்கம் மற்றும் பாதாளத்தில் உள்ள அடியவர்களையும் காப்பதற்காகவே முருகப் பெருமான் ஆறு திருமுகங்களைக் கொண்டுள்ளார் என புராணங்கள் சொல்கின்றன. இந்த ஆறு முகங்களும் முறையே ஞானம், வைராக்கியம், பலம், கீர்த்தி, செல்வம், ஐஸ்வர்யம் ஆகிய ஆறு விதமான பலன்களை தரக் கூடியதாகும். வைகாசி விசாகத்தன்று முருகனின் அருள் வேண்டுவோர் பால்குடம், காவடி எடுத்து வழிபடுவார்கள்.

No comments:

Post a Comment