Friday, November 23, 2012

குழந்தை நட்சத்திரங்களில் புகழ்பெற்றவர் டெய்சி இராணி

குழந்தை நட்சத்திரங்களில் அகில இந்தியப் புகழ் பெற்று விளங்கியவர், டெய்சி இராணி. இப்போது 3 குழந்தைகளின் தாயாராக மும்பையில் வசிக்கிறார். அகில உலகப் புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரத்தின் பெயர் ஷெர்லி டெம்பிள். ஆங்கிலத்தில் பேசும் படங்கள் வரத் தொடங்கிய போது படங்களில் அற்புதமாக நடித்து ‘ஒஸ்கார்’ பரிசு பெற்றவர்.
தமிழ் நாட்டில் 1937 இல் வெளிவந்த ‘தியாகபூமி’ படத்தில் நடித்த பேபி சரோஜா (டைரக்டர் கே. சுப்பிரமணியத்தின் உறவினர்) மிகப் பிரபலமான குழந்தை நட்சத்திரமாகத் திகழ்ந்தார். அந்தக் காலகட்டத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கெல்லாம் ‘சரோஜா’ என்று பெயர் சூட்டப்பட்டது.
1958 இல் ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமலஹாசன், பெரும் பரபரப்பை உண்டாக்கினார். இளைஞனாக ஆன பிறகு நடிப்பில் புதிய பரிணாமம் கண்டு இன்று ‘உலக நாயகன்’ என்ற பட்டத்துடன் உலகப் புகழ் பெற்ற நடிகராக விளங்குகிறார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக மீனா, ஸ்ரீதேவி ஆகியோரும் பின்னர் பிரபல நடிகைகளாக உயர்ந்தார்கள். கமலஹாசன் திரை உலகுக்கு அறிமுகமாவதற்கு சுமார் 4 ஆண்டுகளுக்கு முன் அகில இந்திய புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரமாக திகழ்ந்தவர், டெய்சி இராணி.
1954 இல் அசோக்குமார் - மீனா குமாரி நடித்த ‘பந்திஷ்’ என்ற இந்திப் படத்தில் டெய்சி இராணி அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 4. அனாதைக் குழந்தையான டெய்சி, அசோக்குமாரை தன் தந்தை என்று நினைத்துக் கொண்டு ‘அப்பா - அப்பா!’ என்று சுற்றி வருவதும், கடைசியில் அசோக்குமார் தன் அப்பா அல்ல என்று தெரிந்ததும் மனம் ஒடிந்து போவதும், பார்ப்போர் உள்ளத்தை நெகிழச் செய்தன.
இந்தப் படம், சில ஆண்டுகளுக்குப் பின்னர் ‘யார் பையன்’ என்ற பெயரில் தமிழில் தயாரிக்கப்பட்டது. திரைக்கதை வசனத்தை ஸ்ரீதர் எழுதினார். ஜெமினிக்கணேசன் - சாவித்திரியுடன் டெய்சியையும் நடிக்க வைத்தனர்.
டெய்சிக்கு அப்படத்தில் ‘பூரி’ என்று பெயர். ஜெமினிகணேசனும், சாவித்திரியும் காதலர்கள். டெய்சி இராணி, ஜெமினிகணேசனை ‘அப்பா’ என்று அழைத்து அவரை பிரிய மறுப்பதால் ஜெமினி மீது சாவித்திரி சந்தேகப்படுவார்.
கடைசியில் உண்மை வெளிப்படும். டெய்சி இராணி வேறொரு காதல் ஜோடிக்கு பிறந்தவர் பெற்றோரை பிரிந்து, தாத்தாவிடம் வளர்வார். தாத்தா, ஜெமினிக்கணேசனை காட்டி ‘அதுதான் உன் அப்பா’ என்று கூறிவிடுவார்.
அதனால் ஜெமினியை ஓட்டிக்கொண்டு சுற்றிச் சுற்றி வருவார். அவர் அப்பா இல்லை என்று அறிந்ததும், அழுது கொண்டே வீட்டை விட்டு ஓடுவார். ஜெமினியும் சாவித்தியும் ஓடிச்சென்று டெய்சியை தங்கள் குழந்தையாக ஏற்றுக்கொள்வார்கள். டெய்சியின் இயல்பான நடிப்பு தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.
திலீப்குமார், வைஜயந்திமாலா, டெய்சி இராணி நடித்த ‘நயாதவுர்’ என்ற படம். ‘பாட்டாளியின் சப்தம்’ என்ற பெயரில் தமிழில் ‘டப்’ செய்யப்பட்டு வெளிவந்தது. அந்தப் படமும், தமிழ் நாட்டில் வெற்றிகரமாக ஓடியது.
அசோக்குமார், மீனாகுமாரி, சுனில்தத் நடித்த ‘ஏக்-ஹி-ரஸ்தா’ என்ற இந்திப்படம், புரட்சிக்கரமான கதை அமைப்பைக் கொண்டதாகும். அந்தப் படத்தில் டெய்சியின் நடிப்பு கொடிகட்டிப் பறந்தது. டெய்சி முக்கிய வேடத்தில் நடித்த ‘ஜெய்லர்’ என்ற இந்திப்படம் ‘கைதி கண்ணாயிரம்’ என்ற பெயரில் தமிழில் தயாரிக்கப்பட்டது. தமிழ்ப் படத்தில் டெய்சி நடிக்கவில்லை.
டெய்சி இராணியின் தங்கை ஹனி இராணியும் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்தார். டெய்சி சுமார் 125 படங்களில் நடித்தார். அதன்பின் 1971 இல் அவருக்குத் திருமணம் நடந்தது. கே.கே. சுக்லா என்ற கதை வசன ஆசிரியரை மணந்தார்.
இந்தத் தம்பதிகளுக்கு 3 குழந்தைகள். திருமணம் நடந்து சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் சுக்லா இறந்து போனார்.
அதன்பின் சில தொலைக்காட்சி தொடர்களில் டெய்சி நடித்தார். நடிப்புப்பள்ளி ஒன்றையும் நடத்தினார். 56 வயதான டெய்சி இராணி இப்போது தொலைக்காட்சி தொடர்களையும் விளம்பரப் படங்களையும் தயாரித்து வருகிறார். குழந்தைகளுக்கு ஓவியங்கள் வரைய கற்றுத் தருகிறார்.

1969ல் தினகரன் நாடக விழாவில் நடித்தவர் கே. ஏ. ஜவாஹர்

கொழும்பில் வாழ்ந்த சிறந்த மேடை, திரைப்பட நடிகர் நீண்ட காலம் கலைத்துறையில் பணியாற்றிய இவருக்கு கிழக்கு பல்கலைக்கழகம் விருது வழங்கி கெளரவித்தது குறிப்பிடற்குரியது.
முதலாவது மேடை நாடகம்- 1964ல் புரட்சிமணி இயக்கிய ‘ஒருத்தி சொன்னாள்’ தொடர்ந்து பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார். 1969ல் தினகரன் நாடகவிழாவில் ‘வாடகைக்கு அறை’ ‘மனித தர்மம்’ ஆகிய நாடகங்களில் நடித்து சிறந்த துணைநடிகருக்கான விருதினைப் பெற்றார். 1974ல் தேசிய நாடகவிழாவில் சுஹேர் ஹமீட்டின் இயக்கத்தில் பிள்ளை பெற்ற ராசா ஒரு நாயை வளர்த்தார் என்ற நாடகத்தில் நடித்து சிறந்த நடிகர் விருதினைப் பெற்றவர்.
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான நாடகங்களில் நடித்தவர்.
‘அபூநானா’ என்ற பாத்திரத்தில் இவர் நடித்த ஐந்து நகைச்சுவை நாடகங்கள் ஒலி நாடாக்களாக வெளிவந்துள்ளன. இவரது முதலாவது திரைப்படம் வி. பி. கணேசன் தயாரித்த ‘புதிய காற்று’ என்ற திரைப்படமாகும்.
தொடர்ந்து ‘வாடைக்காற்று’ திரைப்படத்தில் முக்கிய பாத்திரமொன்றில் நடித்து பாராட்டுப் பெற்றவர். ‘கோமாளிகள்’, ‘நான் உங்கள் தோழன்’, ‘ஏமாளிகள்’ ‘தென்றலும் புயலும்’, ‘தெய்வம் தந்த வீடு’, ‘ஷர்மிளாவின் இதய ராகம்’ போன்ற பல படங்களில் நடித்தவர்.

கண்டக்டராக வேலை பார்த்த ரஜனி இரண்டு ஆண்டு விடுமுறையில் படித்தார்

சினிமா உலகைச் சேர்ந்த நடிகர் - நடிகைகள், டைரக்டர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அடிக்கடி பிலிம் இன்ஸ்டிடியூட்டுக்கு வந்து உரைநிகழ்த்துவார்கள். பயிற்சி பெறுகிறவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்கள். சந்தேகங்களைத் தீர்த்து வைப்பார்கள். பயிற்சி பெறுகிறவர்களை திரைப்படக் கல்லூரி நிர்வாகிகள் சினிமா ஸ்டூடியோக்களுக்கு அழைத்துச் சென்று அங்கு நடைபெறும் படப்பிடிப்புகளை பார்க்கச் செய்வார்கள்.
காலம் வெகு வேகமாக ஓடியது. பயிற்சி முடிய இன்னும் 3 மாதங்களே பாக்கி. அந்தக் காலகட்டம் பற்றி ரஜினி நினைவு கூருகிறார்.
‘நாங்கள் 36 பேரும் பிலிம் சேம்பர் அலுவலகம், சபையர், புளு டைமண்ட் தியேட்டர்கள், அமெரிக்க தூதரகம், சோவியத் கல்சுரல் சென்டர், டிரைவ்இன் ஓட்டல் இப்படி சுற்றிச் சுற்றி வந்தாலும் எங்களுக்கு ஒரு தனி உலகம் இருந்தது. அதுதான் கனவு உலகம்! சுவாரஸ்யமான வாழ்க்கை வித்தியாசமான வாழ்க்கை. பொறுப்பு இருந்தும் பொறுப்பில்லாத மாதிரியான போலி வாழ்க்கை, கனவு வாழ்க்கை. ஓ அந்தக் கனவில்தான் எத்தனை சுகம்!
காலை 10 மணிக்குக் கூருகிறோம், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு, ‘ஹலோ ஹாய்’ என்கிறோம். நகரில் ஓடும் சினிமாப் படங்களை எல்லாம் பார்க்கிறோம். வீட்டில் இருந்துவரும் பணத்தை ஜாலியாக செலவு செய்கிறோம்.
காலம் போவது தெரியவில்லை. இதோ, படிப்பு முடியப் போகிறது!
வெகு தூரத்தில் ஒரு சொர்க்கம் தெரிகிறது. அந்த சொர்க்கம் ஏது? அதுதான் சினிமா உலகம். அங்கே புகுந்துவிட வேண்டும். இன்னும் மூன்றே மாதம் படிப்பு முடிந்து விடும் அதன் பிறகு என்ன செய்வது? எப்படி சினிமா உலகில் சான்ஸ் பிடிப்பது? எல்லோருடைய முகத்திலும் எதிர்காலம் பற்றிய கவலை தெரிகிறது.
வீட்டில் சொன்னதைக் கேட்காமல் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்தோம். பயிற்சி பெற்றோம். ஆனால் வேலைக்கு என்ன உத்திரவாதம்? மனம் குழம்புகிறது. இப்படியெல்லாம் ரஜினி எண்ணினாலும், அவருடைய உள்மனதில் தன்னம்பிக்கை சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. ‘வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்’ என்று அவருடைய இதயம் இடைவிடாமல் கூறிக்கொண்டிருந்தது.

எம். ஜி. ஆரின் பூர்வீகம்

அந்த சமயம் அவர்கள் இருவரும் அம்மா சத்திய தாயிடம் அண்டி பிழைக்க வந்த இடத்தை விட்டு விட்டு தங்களுடைய சொந்த இடத்திற்கே செல்வது மிகச் சிறந்தது ஆகும். அப்போது சத்திய தாய் சொல்லுகிறார், எனக்கு சொந்த இடம் என்பது கேரளா வடவனூர்தான், அந்த ஊர் வேண்டாம் என்று தான் சபதத்தோடு இங்கு வந்தோம்.
இப்போ அவர் இல்லாமல் வடவனூருக்கு எப்படி செல்வேன்? என்ற கேள்வி அவருக்கு எழுந்தது. தான் அந்த சமயத்தில் கும்ப கோணத்தில் இருக்கும் மதுரை பாய்ஸ் நாடக கம்பெனியில் வேலை செய்யும் நாராயணன் என்பவரின் ஞாபகம் வந்தது. இவர் சத்தியபாமாவுக்கு நெருங்கிய உறவினர். நாராயணனுக்கு சத்திய பாமா தன் குடும்ப நிலைமைகளை பற்றி விரிவாக கடிதம் போடுகிறார்.
அதன்படி அவருடைய அழைப்பின் படி நீங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கும்பகோணம் வந்து விடுங்கள் என்று சொல்லுகிறார், அதன்படி வேலுபிள்ளை, ராமுபிள்ளை உதவியுடன் சத்தியபாமா குழந்தைகளை அழைத்துக் கொண்டு கும்பகோணம் வந்து சேருகிறார்கள்.
சத்தியபாமா நாராயணனுடைய உதவியுடன் கும்பகோணத்தில் ஒரு சிறிய வீடு வாடகைக்கு பிடித்து வாழ்ந்து கொண்டு இருக்கும் நாட்களில் தன்னுடைய இரண்டு மகன்களையும் எப்படியாவது ஓரளவுக்கு படிக்க வைக்க வேண்டும் என்று நாராயணனிடம் சத்தியபாமா சொல்கின்றார். அதன்படி, இந்த இரண்டு பையன்களையும் கும்பகோணத்தில் உள்ள யானை அடி இடத்தில் உள்ள அரசாங்க பள்ளிக் கூடத்தில் சேர்த்து விட்டார்கள்.
மேலும் பையன்கள் படிப்பதற்கு சிலேட்டு புத்தகங்களையும் வாங்கி கொடுத்து விட்டு பிறகு இந்த பையன்களின் பள்ளி படிப்புக்கு ஆன செலவுகளுக்கும், சாப்பாட்டிற்கும் என்ன செய்வது என்ற பிரச்சினை உண்டாகிறது. இந்த நேரத்தில் சத்தியபாமா மிக மன தைரியத்தோடு நான் எங்கேயாவது வேலை செய்து என் பிள்ளைகளை காப்பாற்றுவேன் என்று நாராயணனிடம் செல்கிறார்.
அடுத்து சத்தியபாமா குடி இருக்கும் பகுதியில் அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் இந்த அம்மாவினுடைய நிலைமைகளை பார்த்து இந்த அழகான பையன்களுடைய நிலைமைகளை அறிந்தும் சிலர் வேலைக்கு செல்ல உதவி செய்கிறார்கள். இந்த நிலையில் எம்.ஜி.ஆருக்கும் சக்கரபாணிக்கும் 3 வயதுதான் வித்தியாசம். சக்கரபாணி, தம்பியை ராமச்சந்திரா என்று அழைப்பார்.
பள்ளிக்கூடம் முடிந்து அவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் இவர்களுடைய தந்தை பற்றி போதனை சொல்லுவார்கள். சத்தியம், தர்மம், நேர்மை, நீதி, பக்தி எல்லாம் நிறைந்தவர் உங்கள் தந்தை, நன்றாக படித்தவர், நீதிபதியாகவும் பேராசிரியராகவும் பணிபுரிந்து பலரிடம் மதிப்பும், மரியாதையும் பெற்றவர்.
அவர் போல் நீங்களும் நன்கு படித்து வாழ்ந்து காட்ட வேண்டும் இதைக் கேட்ட இருவரும் தன் தாயிடம் உறுதி மொழி எடுத்து கொள்கிறார்கள். தந்தை சொல்லுக்கு மந்திரம் இல்லை என்பார்கள். ஆனால் இவர்களுக்கு தந்தைக்கு பதிலாக தாய் சொல்கிறார் மந்திரத்தை. அந்த மந்திரத்தை மனதில் பதிவு செய்து கொண்டவர்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன் தாயினுடைய உழைப்பால் மூன்று வேளையும் சாப்பிட்டு கொண்டு பள்ளிக்கூடம் சென்று வருகிறோம் என்ற எண்ணம் எம்.ஜி.ஆரு மனதுக்குள் நாளுக்கு நாள் வளரத் தொடங்கியது.




No comments:

Post a Comment