Friday, November 2, 2012


 

கையில் கிடைக்கும் பணத்தில் படம் பார்த்து விட்டு பட்டினி கிடந்தவர்

தந்தையின் விருப்பப்படி கல்லூரியில் சேர்ந்த ரஜினிகாந்த். படிக்கப் பிடிக்காமல் வேலை தேடி சென்னைக்கு ஓடிவந்தார். பல கஷ்டங்களை அனுபவித்தார்.
கிடைத்த சம்பளத்தில் சினிமா பார்த்து விட்டு, பட்டினி கிடந்தார். பெங்களூர் ராமகிருஷ்ணா மிஷன் பாடசாலையில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து முடித்த போது ரஜினிக்கு வயது 16. அரும்பு மீசை வளரத் தொடங்கிய பருவம். சும்மா ஊர் சுற்றிக் கொண்டிருந்தால், பையன் கெட்டுப்போய் விடுவான். கல்லூரியில் சேர்ந்து படிக்கட்டும் என்று, ரஜினியின் தந்தை முடிவு செய்தார்.
தந்தையின் வற்புறுத்தல் காரணமாக, வேறு வழியின்றி கல்லூரியில் ‘பி.யு.சி’ வகுப்பில் சேர்ந்தார் ரஜினி. சில மாதங்கள்தான் படித்தார். படிப்பு வேம்பாய்க் கசந்தது. கல்லூரியில் சம்பளம் கட்டுவதற்காகக் கொடுத்த 200 ரூபாவை எடுத்துக்கொண்டு, சென்னைக்கு ரயில் ஏறிவிட்டார்.
இந்தக் கால கட்டத்தில் ரஜினி சினிமாப் படங்கள் பார்ப்பது உண்டு. என்றாலும், சினிமாவில் நடிக்கும் ஆசை வரவில்லை. ஏதாவது வேலை தேடலாம் என்ற எண்ணத்தில்தான் சென்னைக்கு வந்தார். ஆனால் பல இடங்களில் தேடியும் வேலை கிடைக்கவில்லை.
பணம் கரையக் கரைய, பயம் ஏற்பட்டது. கடைசியில் ஒரு தச்சுப் பட்டறையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு போதிய வருமானமும் இல்லை. வேலையும் பிடிக்கவில்லை. எனவே, பெங்களூருக்குத் திரும்பிச் சென்றார். பெங்களூரில் ஒரு மளிகைக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.
சில நாட்கள்தான் வேலை பார்த்தார். அதன் பின் வேலை பிடிக்காமல் மீண்டும் சென்னைக்கு வந்தார். சென்னையில் வேலை தேடி அலைந்தார். அப்போது மிட்லண்ட் தியேட்டரில் கே. பாலசந்தர் இயக்கத்தில் நாகேஷ் நடித்த ‘எதிர்நீச்சல்’ படம் ஓடிக்கொண்டிருந்தது.
அந்தப் படத்தை போய் பார்த்தார். மறுநாள் ஒரு கட்டட கெண்டிராக்டரிடம் வேலை கிடைத்தது. அங்கு கிடைக்கும் சம்பளத்தில் நிறைய சினிமா படங்கள் பார்த்தார். சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆர். நடித்த படங்கள் அவரை வெகுவாகக் கவர்ந்தன.
குணச்சித்திர வேடங்களில் சிவாஜியின் நடிப்பையும், வீரதீரச் செயல்கள் நிறைந்த காட்சிகளில் எம்.ஜி.ஆர். நடிப்பையும் கண்டு பிரமித்தார். கையில் கிடைக்கும் காசில் சினிமா பார்த்துவிட்டு, பல நாள் பட்டினி கிடந்திருக்கிறார்.
ஒருநாள் இப்படி சினிமா பார்த்துவிட்டு ‘எல்.ஐ.சி’ கட்டடத்தின் முன் பிளாட் பாரத்தில் படுத்துத் தூங்கினார். இரவில் ரோந்து சுற்றிய பொலிஸார் சந்தேகப்பட்டு அவரைப் பிடித்து உள்ளே வைத்துவிட்டனர். மறுநாள் காலை விசாரணை நடத்தியதில், அவர் நிரபராதி என்று தெரிந்தது. உடனடியாக விட்டு விட்டனர்.
போதிய வருமானம் இல்லை. பசி பட்டினியுடன் எத்தனை நாள் காலம் தள்ள முடியும்? மீண்டும் பெங்களூருக்குத் திரும்ப முடிவு செய்தார் ரஜினி. டிக்கெட் வாங்கக்கூட கையில் பணம் இல்லை. ‘வருவது வரட்டும்’ என்று தீர்மானித்து, பெங்களூர் ரயிலில் ஏறி, பெஞ்சுக்கு அடியில் படுத்துக்கொண்டார்.
நல்லவேளையாக டிக்கெட் பரிசோதகர் எவரும் வரவில்லை. மறுநாள் காலை பத்திரமாக பெங்களூர் போய்ச் சேர்ந்தார். வீட்டுக்குப் போன போது, யாரும் அவரிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. சொல்லிக்கொள்ளாமல் ஊரை விட்டு ஓடியதால், கோபமாக இருந்தார்கள்.
ஏதாவது வேலை பார்த்தால்தான் இனி மரியாதை கிடைக்கும் என்று தீர்மானித்த ரஜினி, ஒரு தச்சுப் பட்டறையில் வேலைக்குச் சேர்ந்தார். சில நாட்கள் கழித்து, ஒரு வேலைத்தளத்தில் சேர்ந்தார். அந்த வேலையும் பிடிக்கவில்லை.
ஒரு அரிசிமண்டியிலுள்ள லொறி ஷெட்டுக்கு போனார். அங்கு வேலை கிடைத்தது. அதாவது மூட்டை தூக்கும் வேலை! அரிசியைச் சுமந்து லொறியில் ஏற்ற வேண்டும்.
60 மூட்டையைத் தூக்கினால் 2 ரூபாய் கூலி ரஜினிகாந்த் 180 மூட்டைகளை தூக்கிப்போட்டு, ஒரு நாளைக்கு 6 ரூபாய் சம்பாதித்து விடுவார். ரஜினி மீது அவர் அண்ணி தாய்ப்பாசம் வைத்திருந்தார். இரவில் நேரம் கழித்து வந்தாலும், அவருக்கு சாப்பாடு போட்டு விட்டுத்தான் தூங்கப்போவார். அண்ணன் விழித்திருந்தால், ரஜினிக்கு ‘அர்ச்சனை’ கிடைக்கும்.


 

வெற்றித் திரைப்படமாகிய வானொலி தொடர் நாடகம்

கோமாளிகள் 1976 இல் வெளிவந்த ஓர் இலங்கைத் திரைப்படம் ஆகும். இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்ட புகழ் பெற்ற கோமாளிகள் கும்மாளம் என்ற வானொலித் தொடர் நாடகமே கோமாளிகளாக திரைப்படமாக்கப்பட்டது.
எஸ். ராமதாஸ் எழுதிய இந்த தொடர் நாடகத்தில் நடித்தவர்களில் சிலர் திரைப்படத்திலும் நடித்தார்கள். புதிய கதாபாத்திரங்களும் திரைப்படத்திற்கென உருவாக்கப்பட்டன.
எஸ். ராமதாஸ், ரி. ராஜகோபால், எஸ். செல்வசேகரன், அப்துல் ஹமீட், கே. சந்திரசேகரன், சுப்புலட்சுமி காசிநாதன், ஆனந்தராணி பாலேந்திரா (இராசரத்தினம்), சில்லையூர் செல்வராஜன், கமலினி செல்வராஜன், கே. ஏ. ஜவாஹர் போன்ற பலர் நடித்தார்கள்.
முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்கனவே வானொலி மூலம் பிரபலமாக இருந்தது இத்திரைப்படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. சிறந்த படத்தொகுப்பாளராக சிங்களப் படங்களில் பணியாற்றிய எஸ். ராமநாதன் இத்திரைப்படத்தை இயக்கியவராவார்.
யாழ்ப்பாணத்தில் பிரபல இசைக்குழுவான கண்ணன் இசைக்குழுவைச் சேர்ந்த எம். கண்ணன், கொழும்பில் பிரபலமான டிறம் வாத்தியக் கலைஞரான நேசம் தியாகராஜா இருவரும் இணைந்து இசை அமைத்தார்கள். சில்லையூர் செல்வராஜன், சாது, பெளசுல் அமீர் ஆகியோர் இயற்றிய பாடல்களை, மொஹிதீன் பேக், வி. முத்தழகு, கலாவதி, சுஜாதா, ராமதாஸ் ஆகியோர் பாடினார்கள்.
திரைப்படங்களில் பின்னணி பாடிய மொஹிதீன் பேக் முதன்முதலாக தமிழ்த் திரைப்படத்தில் பாடியது இத்திரைப்படத்தில் தான்.
1995ல் வெளியான மணிரத்தினத்தின் பம்பாய் திரைப்படத்தில், பிறப்பால் இஸ்லாமியரான நடிகர் நாசர் ஒரு இந்துவாகவும், இந்துவான நடிகர் சிட்டி இஸ்லாமியராகவும் நடித்தது சிறப்பாக பேசப்பட்டது. ஆனால் ஏற்கெனவே 1976ல் வெளியான கோமாளிகள் திரைப்படத்தில்இஸ்லாமியரான பி. எச். அப்துல் ஹமீட் இந்துவாகவும் பிறப்பால் இந்துவான எஸ். ராமதாஸ் இஸ்லாமியராக அதாவது ‘மரிக்காராக’வும் நடித்திருந்தார்கள்.


 

கலைப் பொக்கி'மாக விளங்கிய குண்டுராவ் நாகேஷ் இளம் வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறியவர்

தமிழ் திரை உலக நகைச்சுவைக் காட்சிகளில் தனி முத்திரை பதித்தவர் நடிகர் நாகேஷ். நகைச்சுவை நடிகராக மட்டுமன்றி கதநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் இவர் நடித்துள்ளார்.
கடந்த 1956 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்தார். தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். 1958 ஆம் ஆண்டு முதல் முதலாக சினிமாவில் கால் பதித்தார். அப்போதிருந்து அவரது வெற்றிப்பாதை துவங்கியது. இவர் நடிக்காத படமே இல்லை என்ற அளவுக்கு எல்லா கதாநாயகர்களுடனும் நடித்தார்.
“நான்” என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற “அம்மனோ சாமியோ” என்ற பாடல், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், மேஜர் சந்திரகாந்த், நீர்க்குமிழி, சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல், காதலிக்க நேரமில்லை, திருவிளையாடல் ஆகியவை மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்த திரைப்படங்கள்.
ஒரே நாளில் ஐந்து படங்களின் ஷ¥ட்டிங்கில் பங்கேற்கும் அளவு, “பிசி”யாக இருந்தவர். நகைச்சுவை காட்சி என்றாலே, நாகேஷ் என்ற அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்தார். 1974 ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
“நம்மவர்” படத்தில் நடித்ததற்காக தமிழக அரசு இவருக்கு, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கியது. நீர்குமிழி, எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவே வாழ்ந்துள்ளார். இவரது மனைவி ரெஜினா, இவரது நடிப்புக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தவர்.
இவருக்கு ஆனந்த் பாபு (43), ரமேஷ் பாபு (40), ராஜேஷ்பாபு (37) என மூன்று மகன்கள் உள்ளனர். ஆனந்த் பாபு மட்டும் சினிமாத் துறைக்கு வந்தார். நாகேஷ¤க்கு நான்கு பேரன் மற்றும் மூன்று பேத்திகள் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் ரசிகர்களை சிரிக்க வைத்த நகைச்சுவை மன்னன் நாகேஷ் போன்ற நடிகரையோ, அவருக்கு இணையான ஒரு நடிகரையோ இனி தமிழ் சினிமாவில் பார்ப்பது மிக அரிது. கலை பொக்கிஷமாக விளங்கியவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், விஜய் என்று அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவரது இயற் பெயர் குண்டுராவ். கடந்த 1933 ஆம் ஆண்டு செப். 27ம் திகதி கிருஷ்ணராவ் மற்றும் ருக்மணி அமமாளுக்கு மகனாக பிறந்தார். தமிழகத்துக்கு வந்த இவர்கள் தாராபுரத்தில் தங்கியிருந்தனர்.
இளம் வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறிய நாகேஷ், ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்தார். சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில், ஒரு சிறிய அறையில் கவிஞர் வாலி, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் நாகேஷ் தங்கியிருந்தார். ஒருமுறை “கம்ப ராமாயணம்” நாடகத்தை பார்த்த நாகேஷ், தன்னாலும் சிறப்பாக நடிக்க முடியும் என நினைத்தார். தன்னையும் சேர்த்துக் கொள்ளும்படி நாடகம் நடத்துபவர்களிடம் போராடி முதல் வாய்ப்பை பெற்றார்.
ரயில்வேயில் பணிபுரிந்து கொண்டிருந்த நாகேஷ¤க்கு முதலில் நாடகத்தில் கிடைத்தது “வயிற்று வலி நோயாளி” வேடம். அந்த நாடகத்தில் நாகேஷ் சில நிமிடங்களே மேடையில் தோன்றுவார்.
ஆனால், அவர் இதை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். “டாக்டர்....” என அலறியபடி மேடையில் நுழையும் நாகேஷ், நிஜமாகவே வயிற்று வலியால் துடிப்பது போல உடலை வளைத்து, நெளித்து, கைகளால் வயிற்றை பிடித்துக் கொண்டே சிறப்பாக நடித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத பார்வையாளர்களுக்கு ஆச்சர்யம். அவர்களின் கைத்தட்டலால் அரங்கமே அதிர்ந்தது.
அன்றைக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த எம்.ஜி. ஆரும் நாகேஷின் நடிப்பை ரசித்தார். நாடகம் முடிந்த பின் மேடை ஏறிய எம்.ஜி.ஆர். “நாடகம் நன்றாக இருந்தது.
ஒரே ஒரு சீனில் வந்தாலும் அபாரமாய் நடித்து அனைவரையும் கவர்ந்து விட்டார் ஒருவர். தீக்குச்சி போன்ற ஒல்லியான உருவில் வயிற்று வலிக்காரராக வந்தாரே அவரைத்தான் சொல்கிறேன்.
நாகேஸ்வரன் என்ற பெயர் கொண்ட அவருக்கு நடிப்புக்கான முதல் பரிசை கொடுக்கிறேன்” என முதல் பரிசுக்குரிய கோப்பையை நாகேஷிடம் வழங்கினார். “மேக்அப்” போட்டு மேடையேறிய முதல் நாளிலேயே நாகேஷ¤க்கு கைதட்டலும் பரிசும் பாராட்டும் கிடைத்தது. அதற்கு முன்பு நாகேஷ் எம்.ஜி.ஆரை. பார்த்ததில்லை.
தயாரிப்பாளர் பாலாஜி மூலமாக இவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. “தாமரைக்குளம்” இவரது முதல் படம். அதன் பின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். “திருவிளையாடல்” படத்தில் ஏழ்மையில் வாழும் புலவர் தருமியாக நாகேஷ் நடித்தது, எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பெற்றுவிட்டது.
“காதலிக்க நேரமில்லை” படத்தில் பாலையாவிடம் நாகேஷ் கதை சொல்லும் காட்சி ரசிகர்களின் வயிற்றை இன்றும் புண்ணாக்கும். நாகேஷின் திறமையை நன்கு பயன்படுத்திக்கொண்ட பெருமை இயக்குனர்கள் ஸ்ரீதர் மற்றும் பாலச்சந்தர் ஆகியோரையே சேரும்.


 

தேனிலவ க்கு பட்ட கஷ்டம்; குறித்து ஸ்ரீதர் விளக்கம்

அன்றைக்கு டெக்னிக்கல் வசதிகள் இல்லாத காலத்தில் தேனிலவு படத்தை எடுக்க புதுமை இயக்குனர் ஸ்ரீதர் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை ஸ்ரீதரே சொல்லி உள்ளார்.
தேன் நிலவு படத்தை காஷ்மீரில் ஐம்பத்திரண்டு நாட்கள் ஷ¥ட் பண்ணினோம். எடுத்த காட்சிகளை உடனே போட்டுப் பார்க்கும் வசதி எல்லாம் அப்போது கிடையாது. அதிலும் நாங்கள் இருந்த இடம் ஸ்ரீ நகரில் இருந்து வெகு தொலைவில் ஒரு கிராமத்துக்கு அருகில் இருந்தது. அந்த கிராமத்தில் ஒரேயொரு சினிமா தியேட்டர்தான் உண்டு. காஷ்மீரில் கஷ்டப்பட்டு எடுத்த காட்சிகளை சென்னைக்குப் போய் போட்டுப் பார்த்து சரியாக வரவில்லை என்றால் மீண்டும் ஷ¥ட் பண்ணுவது எல்லாம் முடியாத காரியம்.
அதனால் நாங்கள் காஷ்மீரில் இருக்கும் போதே எடுத்தவற்றை எல்லாம் அவ்வப்போது போட்டுப் பார்க்க விரும்பினோம். சரியாக வரவில்லையென்றால் மீண்டும் எடுத்துக்கொள்ளலாமே என்பதனால். காஷ்மீரில் அதற்கான வசதிகள் அப்போது இல்லாததால், ஷ¥ட்டிங் எடுத்தவற்றை போட்டுப் பார்க்க ஃபிலிம் ரோலர்களை சென்னை அனுப்பித்தான் கழுவி பிரிண்ட் போட்டு வரவேண்டும்.
அப்போதெல்லாம் ஸ்ரீ நகரில் இருந்து வாரம் இரண்டு முறை மட்டும் ‘டகோட்டா’ விமானம் டில்லிக்குப் போகும். அதில் எங்கள் சித்ராலயா நிர்வாகி ராமகிருஷ்ணன் மற்றும் ஒருவரை நாங்கள் எடுத்த நெகட்டிவ் படச் சுருள்களோடு அனுப்பி வைப்போம். அவர்கள் டில்லி சென்று அங்கிருந்து சென்னை செல்லும் விமானத்தை பிடித்து சென்னை சென்று அங்கு விஜயா லேபரட்டரியில் அவற்றை பிரிண்ட் போட்டு மீண்டும் டில்லி வழியாக ஸ்ரீ நகர் வருவார்கள்.
அந்தப் படப் பிரதிகளை எடுத்துக்கொண்டு நள்ளிரவில் நாங்கள் இருந்த இடத்துக்கு அருகிலுள்ள கிராமத்தின் தியேட்டருக்குப் போய் அவர்களிடம் அனுமதி பெற்று அங்கு வழக்கமான இரவுக் காட்சி முடிந்த பிறகு இரவு ஒரு மணிக்கு மேல் அங்குள்ள புரொஜக்டரில் திரையிட்டு நான் கோபு, ஜெமினி, வைஜயந்தி (மாலா), நம்பியார், வின்சென்ட், பி.என். சுந்தரம் மற்றும் எங்கள் படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் பார்ப்போம்.
மனதுக்கு திருப்தியாக இருக்கும். திருப்தி இல்லாத சில காட்சிகளை மீண்டும் எடுத்திருக்கிறோம்.
இரவு சுமார் மூன்று மணிக்கு மேல் அங்கிருந்து திரும்பி வந்து படுத்து விட்டு காலை ஆறு மணிக்கெல்லாம் மீண்டும் உற்சாகமாக படப்பிடிப்பில் கலந்து கொள்வோம்.
உண்மையில் ‘தேன் நிலவு’ படம் முதலில் ரிலீஸான தியேட்டர், காஷ்மீர் கிராமத்திலுள்ள அந்த தியேட்டர் என்றுதான் சொல்ல வேண்டும்.
அந்த இடத்துக்கு முழுவதும் காரில் போக முடியாது. சிறிது தூரம் நடந்தும் போக வேண்டும். அப்படிப் போகும் போது தான் ஒரு பெரிய வில்லன் என்ற பந்தா கொஞ்சமும் இல்லாமல் படச்சுருள் பெட்டிகளை நம்பியார் தன்னுடைய தலையிலும், தோளிலும் சுமந்து வந்ததை நான் இப்போதும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். நாங்கள் பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைத்தது. படம் வெற்றிகரமாக ஓடியது. இவ்வாறு ஸ்ரீதர்
சொல்லியிருந்தார்.

கல்லாப்பெட்டி

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் படம் கல்லாப்பெட்டி அஸ்வின் பாலாஜி, ரோஸின் ஜாலி என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். நமோ நாராயணா வில்லன். ஜி. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். சபேஷ் – முரளி இசை அமைக்கிறார்.
பல குறும் படங்களை இயக்கிய ரா.ரா இயக்குகிறார். ‘ஹீரோ ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்பவர் பல தில்லுமுல்லுகளை செய்து குறுகிய காலத்தில் பணக்காரனாகிவிட நினைப்பவர்.
கோடிகளில் பிசினஸ் செய்வதாக காட்டிக் கொண்டு சிங்கிள் டீக்கு அல்லல் படுகிறவர் இப்படி ஒரு ஜாலியான கதை. பணம்தான் உலகில் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. பணம் இல்லாத மனிதன் பிணம் என்கிற மெசேஜுயும் சொல்கிறோம் என்கிறார் இயக்குனர்

இனிமையான குரல் வலிமையால்

60 இலட்சம் ரூபாவை சுவீகரித்த ஆஜpத்
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 பட்டத்தை சிறுவன் ஆஜித் தட்டிச் சென்றுள்ளான். வெற்றி பெற்ற சிறுவனுக்கு 60 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டினை இசை அமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.
சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 பட்டத்தை வெல்வதற்காக ஓர் ஆண்டுக்கும் மேலாக தினந்தோறும் தங்களின் இனிய குரலால் பாடி பல்லாயிரக்காணவர்களை வசீகரித்த குழந்தைகள் காத்திருந்தன. அந்த தருணத்திற்காகத்தான்.
இறுதிப் போட்டியில் சிறப்பாகப் பாடி எப்படியாவது பட்டத்தை வென்றுவிடவேண்டும் என்று போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் கனவும், லட்சியமும் இருந்தது. அதற்கான நாளும் வந்தது.
கடந்த 26 ஆம் திகதி பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் சுகன்யா, பிரகதி, கெளதம், ஆஜீத், யாழினி ஆகிய 5 போட்டியாளர்களும் தங்களின் மிகச் சிறந்த பங்களிப்பினை வெளிப்படுத்தினர். ஒவ்வொருவரும் பாடி முடித்த உடன் பார்வையாளர்களின் கரகோஷம் அரங்கத்தை எட்டியது.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக பிரபல இசை அமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் வந்திருந்தது குழந்தைகளின் குரலில் வெளிப்பட்ட பாடல்களை ரசித்து சிரித்தார்.
அனைவருமே நன்றாக பாடினர். என்றாலும் பரிசு ஒருவருக்குத் தானே தரமுடியும். நடுவர்களின் மதிப் பெண்களோடு, உலகம் முழுவதும் இருந்த ரசிகர்கள் எஸ். எம். எஸ். மூலம் ஒட்டளித்து தேர்ந்தெடுத்த தமிழகத்தின் செல்லக் குரலை இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அறிவித்தார்.
சிறு வயதில் மைக்கேல் ஜாக்சனின் திறமை அந்த சிறுவனிடம் வெளிப்பட்டதாக தெரிவித்ததும் அரங்கமே ஊகித்துவிட்டது.
ஆஜித் பாடிய வந்தே மாதரம் பாடல் நடுவர் ஏ.ஆர்.ரகுமானை மட்டுமல்ல ஒவ்வொரு ரசிகரையும் கவர்ந்துவிட்டதுபோல் ஆஜித் முதல் இடம் பெற்றுள்ளதாக பலத்த கரகோஷத்திற்கு இடையே அறிவித்தார். ஏ.ஆர். ரகுமான் சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 பட்டத்துடன் 60 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டிற்கான சாவியை ஆஜித்திற்கு வழங்கினார் ஏ. ஆர். ரஹ்மான்.
இரண்டாவது இடம்பெற்ற பிரகதிக்கு 5 இலட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது. மூன்றாவது இடம் பிடித்த யாழினிக்கு 3 இலட்சம் ரூபாய் பரிசும், நான்கு ஐந்தாம் இடம் பிடித்த சுகன்யா, கெளதமிற்கு தலா 2 இலட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது.

சாரி டீச்சருக்கு கடும் எதிர்ப்பு

பேராசிரியர் மீது காதல் வயப்பட்டு அவரை அடையத் துடிக்கும் மாணவன் கதையுடன் உருவாகி வரும் ‘சாரி டீச்சர்’ படத்திற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ளது. தமிழ் பதிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆர்யாமேனன் நாயகனாகவும், காவ்யா சிங் நாயகியாகவும் நடிக்கின்றனர். டைரக்டர் ஸ்ரீசத்யா இயக்கியுள்ளார். இதில் ஆசிரியை கெரக்டரில் வரும் காவ்யா சிங் ஆபாசமாக நடித்துள்ளார்.
மாணவன், ஆசிரியையும் நெருக்கமான காட்சிகளும் படத்தில் உள்ளன. இப்படத்துக்கு முதலில் ஐ லவ் யூ டீச்சர் என பெயரிட்டு இருந்தார். எதிர்ப்பால் சாரி டீச்சர் என மாற்றப்பட்டது.
தெலுங்கில் யு ஏ சான்றிதழுடன் படம் ரிலீசானது. படத்தை பார்த்த ஆசிரியர் சங்கத்தினர் அதிர்ச்சியானார்கள். ஆசிரியை, மாணவன் உறவை படத்தில் கொச்சைப்படுத்தியுள்ளதாகவும் ஆசிரியை கெரக்டரை ஆபாசமாக காட்டியுள்ள தாகவும் கண்டித்துள்ளனர். இப்படத்தை தடைசெய்ய வேண்டும் என்று மாநில மனித உரிமை கொமிஷனில் மனு கொடுத்துள்ளனர். இந்த எதிர்ப்பை தமிழகத்திலும் இப்படம் சந்திக்கும் என தெரிகிறது.

கவர்ச்சியில் இறங்கும் ஜெனிலியா

ஷங்கரின் போய்ஸ் படத்தில் அறிமுகமாகி கடைசி படம் வரை கிளாமர் ரோலில் இறங்காத ஜெனிலியா, கவர்ச்சியாக நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் ரித்தேஷ் தேஷ்முக்குடன் ஜெனிலியாவிற்கு திருமணம் ஆனது. சிறிது காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்த ஜெனிலியாவுக்கு மீண்டும் வாய்ப்புகள் வர தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து, இனி வரும் படத்தில் தேவைப்பட்டால் கவர்ச்சியில் நடிக்க போவதாக ஜெனிலியா கூறியதாக தெரிகிறது.


 

கரண் ஜோடியாக வித்யாபாலன்

கரண் ஜோடியாக வடிவுடையான் இயக்கும் படத்தில் வித்யாபாலன் நடிக்கப்போவதாக தகவல் வெளிவந்தது. இந்த தகவலை அப்பட வட்டாரங்களே தெரிவித்திருந்தன.
இதுபற்றி அறிந்து கொதித்து போயிருக்கிறார் வித்யாபாலன். அவர் கூறியது அடிக்கடி இதுபோல் செய்திகள் வருகின்றன. ஏற்கனவே ஒரு தமிழ் படத்தில் நான் நடிக்கப் போவதாக செய்தி வெளியானது. என் படத்தை வைத்து விளம்பரம் கூட செய்திருந்ததாக அறிந்தேன்.
அப்போதே அந்த படங்களில் நான் நடிக்கவில்லை என மறுத்தேன். இப்போது இன்னொரு படம் (கரண் படம்) பற்றி சொல்கிறார்கள். தமிழில் எந்தப் படத்திலும் நடிக்க என்னிடம் யாரும் பேசவில்லை.
இப்போதைக்கு இந்தியில் பிசியாக நடித்து வருகிறேன். வேறு மொழிகளில் கவனம் செலுத்த நேரமில்லை. தமிழ் உட்பட எந்த மொழியிலும் நான் நடிப்பேன். ஆனால் நல்ல கதை அமைய வேண்டும், அப்போதுதான் அது சாத்தியம்.


 

பொலிவுட்டில் நடிப்பதற்கு பொறுமை வேண்டும்

‘பொய்’, ‘ராமன் தேடிய சீதை’ படங்களில் நடித்திருப்பவர் விமலா ராமன். அவர் கூறியதாவது : தமிழில் 2 படங்களில் நடித்தேன். நல்ல கதாபத்திரத்துக்காக காத்திருந்தேன்.
எதுவும் வரவில்லை. இதனால் பிற மொழியில் கவனம் செலுத்தி நடித்து வந்தேன். பொலிவுட்டில் 2 படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததும் ஏற்றுக்கொண்டேன். ‘அப்ரா டஃபாரி’, ‘மும்பை மிரர்’ ஆகிய படங்களில் நடிக்கிறேன். ‘டேம் 999’ ஆங்கில படம் உட்பட இதுவரை 6 மொழிகளில் நடித்திருக்கிறேன்.
பொலிவுட் அனுபவம் பற்றி கேட்கிறார்கள். தென்னிந்திய படங்களில் வேலை செய்வதை காட்டிலும் பொலிவுட் படங்களில் பணியாற்றுவது முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.
தென்னிந்திய படங்களில் சிறிய பட்ஜெட் படங்கள்தான் அதிகம் தயாராகிறது. அதன் ஷ¥ட்டிங் வேகமாக நடக்கும். ஆனால், பொலிவுட்டில் பெரும்பாலும் பெரிய பட்ஜெட் படங்கள் உருவாகின்றன.
ஷ¥ட்டிங்கும் மெதுவாகவே நடக்கிறது. இதற்கு பொறுமை அவசியம். பொலிவுட்டில் பணியாற்றுவதன் மூலம் பெரிய அளவில் பேர் கிடைக்க வாய்ப்புள்ளது. ‘அப்ரா டஃபாரி’ படத்தில் கோவிந்தா ஜோடியாகவும், ‘மும்பை மிரர்’ படத்தில் துப்பறியும் நிருபராகவும் நடிக்கிறேன். இவ்வாறு விமலா ராமன் கூறினார்.











No comments:

Post a Comment