Wednesday, November 26, 2014

கையில் புலிக்குட்டியுடன் சிங்கத்தின் மீது சவாரி: பயம் இல்லாமல் நடித்தார், குட்டி பத்மினி

குட்டி பத்மினி, கையில் புலிக்குட்டியுடன் சிங்கத்தின் மீது சவாரி செய்யும் காட்சி ஒரு தெலுங்குப் படத்துக்காகப் படமாக்கப்பட்டது. குட்டி பத்மினியின் தாயாரை தந்திரமாக வெளியே அனுப்பிவிட்டு, இக்காட்சியை டைரக்டர் படமாக்கினார்.

"இளங்கன்று பயமறியாது'' என்பார்கள். குட்டி பத்மினி, பாம்பு கொத்துகிற மாதிரியான காட்சிகளில் கூட நடித்தார்.

ஆனால், அவருக்கே தெரிவிக்காமல் திடீரென ஒரு தெலுங்குப்படத்தில் சிங்கங்களுக்கு மத்தியில் அவரை நடிக்க வைத்தார்கள். அவரும் பயம் எதுவுமின்றி நடித்து முடித்தார்.

சிங்கத்துடன் நடித்த அனுபவம் குறித்து குட்டி பத்மினி கூறியதாவது:-

"சகுந்தலா'' என்ற தெலுங்குப் படத்தில், நடிகை சரோஜாதேவியின் மகளாக நடித்தேன். ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்தது. ஐதராபாத்தில் மக்காச்சோளம் அதிகம். அம்மா மக்காச்சோளத்தை சுட்டு, மிளகாய் பொடி தூவி பக்குவமாக சாப்பிடத் தருவார். அம்மாவின் இந்த கைப்பக்குவத்துக்கு செட்டில் இருந்தவர்கள் ரசிகர்களாகி விட்டார்கள். இப்படி படப்பிடிப்பில் எல்லாருக்கும் தெரிந்தவராக, வேண்டியவராகி விட்ட அம்மாவை அன்றைய தினம் எங்கோ சுற்றிப் பார்க்க அழைத்துப்போய் விட்டார்கள்.

அம்மாவை திட்டம் போட்டே வெளியே அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்பது பிறகுதான் தெரிந்தது. படத்தின் டைரக்டர் என்னிடம், "உனக்கு புலிக்குட்டின்னா பிடிக்கும்தானே?'' என்று கேட்டார்.

எதற்காக கேட்கிறார் என்பது புரியாமல், "ஓ! ரொம்ப பிடிக்குமே என்றேன்.

அதன் பிறகுதான் என்னை செட்டின் இன்னொரு புறம் கூட்டிப் போனார்கள். எனக்கு கைநிறைய சாக்லெட் தந்தவர்கள், "இப்ப நீ புலிக்குட்டியை கையில் தூக்கிக்கிட்டு சிங்கத்தின் மேல் ஏறி வரப்போறே'' என்றார்கள்.

சிங்கம், புலி போன்ற பயங்கர மிருகங்களை பயிற்றுவிக்கும் `புலி கோவிந்தராஜ்' அங்கிருந்தார். சுற்றிலும் ஒரு இரும்பு வேலி அமைத்து, ஐந்து சிங்கங்களையும், மூன்று புலிகளையும் உலவ விட்டிருந்தார்கள். எதற்குமே வாய் தைக்கவில்லை. `புலி கோவிந்தராஜ்' மாஸ்டர், அவற்றுக்கு பயிற்சி கொடுக்க அழைத்து வந்திருந்தார்.

கொஞ்ச நேரத்தில் ஒரு ஆள் நுழையக்கூடிய வழியை திறந்து என்னை அந்த கூண்டுக்குள் அனுப்பினார்கள். சர்க்கசில்தான் ஒரே நேரத்தில் இத்தனை சிங்கம், புலிகள் பார்த்திருக்கிறேன். மாஸ்டர், அழகாக இருந்த ஒரு புலிக்குட்டியை என் கையில் கொடுத்து, "இதை கெட்டியா பிடிச்சுக்கோ'' என்றார். புலிக்குட்டியை பிடித்துக்கொண்டதும், அங்கிருந்த சிங்கத்தின் மீது என்னை உட்கார வைத்தார். சிங்கம் அந்த தடுப்பு வேலிக்குள் ரவுண்ட் அடிக்க, கையில் புலிக்குட்டியுடன் சிங்கத்தின் மீது நான்!

வெளியே நின்று காட்சிகளை படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். படப்பிடிப்பு குழுவில் இருந்தவர்களை நான் சிங்கத்தின் மீது வலம் வந்தபடி பார்க்கிறேன். அவர்களில் ஒருவர் முகத்திலாவது சந்தோஷம் இல்லை. கொடூர குணம் படைத்த மிருகங்களாயிற்றே. எந்த நேரத்தில் என்ன செய்து வைக்கப்போகிறதோ?'' என்று அவர்கள் உள்ளூர கலங்கிக் கொண்டிருந்தார்கள்.

அந்தப் பதட்டத்திலும் காட்சி படமாகிக் கொண்டிருக்க, அப்போதுதான் அம்மா செட்டுக்குத் திரும்பியிருக்கிறார். படப்பிடிப்பில் இருந்த மொத்தக் கூட்டமும் இமைக்காமல் இரும்பு வேலிக்குள் சிங்க ஊர்வலம் வரும் என்னைப் பார்த்துக் கொண்டிருந்ததை அம்மாவும் பார்த்து விட்டார். பெற்ற வயிறல்லவா! துடித்துப் போனார், அம்மா. "அய்யோ! இந்தக்காட்சியை எடுக்கணும்னுதான் என்னை வெளியே அனுப்பினீங்களா?'' என்று கதறினார்.

நான் அங்கிருந்தபடியே, "அம்மா பயப்படாதீங்க! எனக்கு ஒண்ணும் ஆகாது'' என்று சமாதானப்படுத்த முயன்றேன். ஆனால் அவர் அழுகையை நிறுத்தவில்லை. அவசரமாய் அந்தக் காட்சியை படமாக்கி, மாஸ்டர் என்னை பத்திரமாக வெளியே அழைத்து வந்த பிறகுதான் அம்மாவுக்கு உயிரே வந்தது.

அப்போது கூட எனக்கு கையெல்லாம் ஒரே வலி. நான் அசையாமல் தூக்கி வைத்திருந்தேனே புலிக்குட்டி. அது 5 கிலோவுக்கு மேல் எடை இருக்கும் போலிருக்கிறது. அதுதான் கை வலிக்கு காரணம்!

ஆனால் இந்த வலியையெல்லாம் தாண்டி அந்தப் படத்தில் என் நடிப்புக்கு ஆந்திர அரசின் `சிறந்த பேபி நட்சத்திர விருது' கிடைத்தது.''

இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.

"குழந்தையும் தெய்வமும்'' படத்தில் குட்டி பத்மினியின் இரட்டை வேட நடிப்பை பார்த்து வியந்த பெருந்தலைவர் காமராஜர், தேர்தல் பிரசாரத்தில் குட்டி பத்மினியை காங்கிரஸ் கூட்டங்களில் பேச அனுமதித்தார். சென்னை மைலாப்பூரில் நடந்த காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் குட்டி பத்மினியை பேச வைத்தார். தொடர்ந்து படப்பிடிப்புக்கு இடையே காங்கிரசின் மேடைப் பேச்சாளராகவே மாறிப்போனார், குட்டி பத்மினி.

காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபட்டபின், குட்டி பத்மினி தி.மு.க. கூட்டத்திலும், அதன் பிறகு அ.தி.மு.க. மேடைகளிலும் பேசினார்.

இதுபற்றி அவர் கூறும்போது, "நான் எந்த கட்சி மேடையில் பேசினாலும் நடந்து முடிந்த ஆட்சி பற்றி குறையெல்லாம் சொல்வதில்லை. நான் சார்ந்த கட்சி மக்களுக்கு என்ன மாதிரியான நல்ல காரியங்களெல்லாம் செய்யும் என்று மட்டுமே பேசுவேன். இதனால் மாற்றுக்கட்சிகாரர்கள் கூட என் பேச்சை கேட்டு ரசித்தார்கள்'' என்றார்.

குட்டி பத்மினி 2 ஆங்கிலப் படங்களிலும் நடித்தார். `தி பிரின்ஸ் அண்ட் த பாப்பர்', `டார்சான் கோஸ் டு இந்தியா' என்ற இந்த படங்களுக்காக தனது 12-வது வயதில் காஷ்மீர் போயிருக்கிறார்.

குட்டி பத்மினியிடம் மிகவும் அன்பு கொண்டவர் சவுகார் ஜானகி. "எங்களுக்கிடையே இருந்தது அம்மா - மகள் உறவு'' என்று சொன்ன குட்டி பத்மினி, அதுபற்றி கூறியதாவது:-

"சவுகார் ஜானகியின் மகள் என்றே என்னை பலரும் நினைத்தார்கள். எங்களுக்குள் இருந்த முக ஒற்றுமை அவர்களை இப்படி நினைக்க தூண்டியிருக்கலாம். சவுகாரும் என்னை தனது மகள்களில் ஒருவராகவே நேசித்தார்.

படப்பிடிப்புக்கு வரும்போது தன் கைப்பட சமைத்த சாப்பாட்டை எடுத்து வருவார். தனது கலையுலக நட்பு வட்டாரத்தில் யாருக்காவது பிறந்த நாள் என்றால் அதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு பரிசளிப்பார். என்னை அவருடைய மகள் என்று நினைத்த ரசிகர்கள் பல நேரங்களில் சவுகாரின் வீட்டுக்கே என் நடிப்பை பாராட்டி கடிதம் எழுதுவதும், அதை ஆன்ட்டி என்னிடம் கொடுப்பதும் தொடர்கதை மாதிரி போய்க்கொண்டிருந்தது.

எனக்கு திருமணமாகி முதல் பிரசவத்தின்போது நிஜமாகவே எனக்கு அன்னையானார். பிரசவத்தின் போது உடனிருந்து தாயாக பார்த்துக்கொண்டார். மகள் பிறந்தபோது, குழந்தைக்கு தங்கக்காசு கொடுத்து வாழ்த்தினார்.

சமீபத்தில் சவுகார் ஆன்ட்டிக்கு அவரது பெண்கள், பேரன், பேத்திகள், ஸ்டார் ஓட்டல் ஒன்றில் பெரும் விழா எடுத்தார்கள். அவரை வாழ்த்தி மைக்கில் பேசும்போது அழுது விட்டேன். சினிமா மூலம் எனக்கு கிடைத்த `அம்மா' அவர்.''

இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.

குழந்தை நட்சத்திரமாக 175 படங்களுக்கு மேல் நடித்து விட்டாலும், `கதாநாயகி'யாக குட்டி பத்மினி நடிக்கவில்லை! அதற்கான காரணம் குறித்து அவர் கூறியதாவது:-

"சிறு வயதுப் பிராயம் தாண்டி 13 முதல் 15 வயதிலான கால கட்டத்தில் `சிறுமி'யாகவும் நடிக்க முடியாது. பெரிய பெண்ணாகவும் நடிக்க முடியாது. அப்படியான காலகட்டத்தில் குச்சிப்புடி, கதக் நடனங்கள் கற்றுக்கொண்டேன். அப்போது நாடக மேடையில் கிடைத்த கதாநாயகி வாய்ப்பை விடாமல் பற்றிக்கொண்டேன். மவுலி, எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரன், விசு என நாடக ஜாம்பவான்கள் அத்தனை பேரின் நாடகங்களிலும் தொடர்ந்து நடித்தேன்.

இந்த காலகட்டத்தில் வருடம் தவறாமல், மயிலை ஆர்ட்ஸ் அகாடமியின் "சிறந்த நாடக நடிகை'' விருது எனக்கு கிடைத்து விடும். நாடக காட்சியின்போது ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்கான ஒரு நிமிடத்துக்கும் குறைவான இடைவெளியில் நான் வேறு புடவை மாற்றிக்கொண்டு நடிக்க வருவேன். இந்த வேகமான வித்தையை பார்த்து, நாடகத்துக்கு வந்த பெண்கள் ஆச்சரியப்பட்டார்கள். என்னிடம் நாடகம் முடிந்த நேரத்தில் இதுபற்றி பாராட்டி பேசியவர்களும் உண்டு.

ஜெமினிகணேசன் சாரின் மனைவி புஷ்பவல்லியின் மகள் ரேகா, பின்னாளில் இந்தித் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார். ரேகாவின் அண்ணன் பாபுஜியைத்தான் எனது இரண்டாவது அக்கா விஜயலட்சுமி திருமணம் செய்திருக்கிறார். இந்த பாபுஜி இயக்கிய `நயாபக்ரா' இந்திப்படத்தில்தான் நான் ஹீரோயின் ஆனேன். படத்தில் எனக்கு ஜோடி வினோத் மெஹ்ரா. முழுக்க காமெடிப் படமான இந்தப்படம் இந்தியில் நன்றாகவே ஓடியது.

இந்த நேரத்தில் எனக்கு 16 வயது. எம்.ஜி.ஆர். சார் அப்போது "உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தை தயாரிக்க வெளிநாடுகளுக்கு போவதாக இருந்தார். படத்தின் ஒரு கதாநாயகியாக என்னை நடிக்க வைக்கும் நோக்கில் என்னை அழைத்து வரச்செய்தார் எம்.ஜி.ஆர். அம்மாவுடன் போய் அவரை பார்த்தேன். எங்களிடம் நலம் விசாரித்த அவர், "படத்தின் 2 மாத படப்பிடிப்பு ஜப்பான், ஆங்காங், சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் நடக்கிறது. எனவே, பயணச் செலவில் கூடுதல் செலவை தவிர்க்கும் விதத்தில் `கதாநாயகி' மட்டுமே வரவேண்டும்'' என்றார்.

பெண்ணை 2 மாத காலம் தனியாக அனுப்ப அம்மாவுக்கு மனதில்லை. அதனால் வீட்டில் கலந்து பேசிவிட்டு முடிவை சொல்கிறோம்'' என்று சொல்லி விட்டு வந்தார். வீட்டிலும் சகோதரர்களுக்கு என்னை தனியாக அனுப்ப மனதில்லாதிருந்ததால் அந்த வாய்ப்பை `மிஸ்' பண்ணி விட்டேன். சில நேரங்களில் தவறாக எடுக்கும் ஒரு முடிவு கூட எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதற்கு என் விஷயத்தில் என் குடும்பம் எடுத்த இந்த முடிவும் ஒரு உதாரணம்.

தொடர்ந்து நாடகத்திலும் நடித்து வந்ததால் சில கதாநாயகி வாய்ப்புகள் `மிஸ்' ஆயின. இப்படி டைரக்டர்கள் கே.பாலசந்தர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், பி.மாதவன் ஆகியோர் படங்களுக்கு கேட்டு வந்த கதாநாயகி வாய்ப்பை நாடகத்துக்கு ஏற்கனவே கொடுத்த தேதிகள் கெடுத்தன. ஒரு டைரக்டர், "உனக்கு சினிமா முக்கியமா? நாடகம் முக்கியமா?'' என்று கேட்டு கோபப்பட்டதும் உண்டு. நான் இப்படி மிஸ் பண்ணின சில படங்களில் ஜெயசித்ரா, ஸ்ரீபிரியா நடித்தார்கள். பின்பு எம்.ஜி.ஆர். சாரின் தங்கையாக "நான் ஏன் பிறந்தேன்'' படத்திலும், சிவாஜி சாரின் மருமகளாக "நல்லதொரு குடும்பம்'' படத்திலும் நடித்தேன்.

இப்படி சினிமா என்னை விட்டுப் போயிருந்தாலும், சின்னத்திரையில் நான் வலுவாக காலூன்ற அது ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

No comments:

Post a Comment