Thursday, November 27, 2014

28 வருடங்களுக்குப்பின், மீண்டும் தமிழ் படத்தில் நடிப்பது ஏன்


‘‘28 வருடங்களுக்குப்பின், மீண்டும் தமிழ் படத்தில் நடிப்பது ஏன்?’’ என்பதற்கு ஸ்ரீதேவி விளக்கம் அளித்தார்.

ஸ்ரீதேவி

1980களில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளை சேர்ந்த ரசிகர்களின் ‘கனவுக்கன்னி’யாக இருந்தவர், ஸ்ரீதேவி. தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இரு பெரும் கதாநாயகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தார்.

கடைசியாக, 1986-ம் ஆண்டு வெளிவந்த ‘நான் அடிமை இல்லை’ என்ற படத்தில் ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தார். அதன்பிறகு அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார்.

28 வருடங்களுக்குப்பின்...

2 வருடங்களுக்கு முன்பு ஸ்ரீதேவி, ‘இங்லீஷ் விங்லீஷ்’ (இந்தி) படத்தின் மூலம் மீண்டும் திரையுலக பிரவேசம் செய்தார்.

அதைத் தொடர்ந்து 28 வருடங்களுக்குப்பின், அவர் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்கிறார். பெயர் சூட்டப்படாத இந்த படத்தில், விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். ஹன்சிகா, சுருதிஹாசன் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். சிம்புதேவன் டைரக்டு செய்கிறார். சிபு, பி.டி.செல்வகுமார் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

பேட்டி

மிக நீண்ட இடைவெளிக்குப்பின் தமிழ் படத்தில் நடிப்பது பற்றி ‘தினத்தந்தி’ நிருபருக்கு ஸ்ரீதேவி பேட்டி அளித்தார். அப்போது நிருபர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு ஸ்ரீதேவி அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இரண்டு பெரிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்த உங்களுக்கு மீண்டும் அதுபோன்ற தமிழ் பட வாய்ப்புகள் வந்தபோது அதை தவிர்த்ததாக பேசப்பட்டது. இப்போது, விஜய் படத்தில் நடிக்க சம்மதித்தது எப்படி?

பதில்:- சிம்புதேவன் சொன்ன கதை எனக்கு பிடித்தது. என் கதாபாத்திரம் பிடித்தது. தென்னிந்தியாவின் பெரிய கதாநாயகர்களில் ஒருவர், விஜய். பெரிய கதாநாயகன் என்றாலும் எளிமையாக இருக்கும் அவருடைய பண்பு எனக்கு பிடித்தது. அதனால் நடிக்க சம்மதித்தேன்.

வேடம்

கேள்வி:- ராஜமவுலி டைரக்ஷனில் அனுஷ்கா நடிக்கும் ‘பாகுபலி’ என்ற தெலுங்கு படத்திலும் நடிப்பதை நீங்கள் தவிர்த்தது உண்மையா?

பதில்:- உண்மைதான். அந்த சமயத்தில் என்னிடம் ‘கால்ஷீட்’ இல்லை.

கேள்வி:- விஜய் படத்தில் உங்களுக்கு என்ன வேடம்?

பதில்:- அதுபற்றி இப்போது நான் சொல்லக் கூடாது. இது, உடையலங்காரத்துக்கு முக்கியத்துவம் உள்ள வியாபார ரீதியிலான பிரமாண்டமான படம் என்று மட்டும் கூற முடியும்.

அனுபவம்

கேள்வி:- இளைய தலைமுறை நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் சேர்ந்து பணிபுரியும் அனுபவம் எப்படி இருக்கிறது?

பதில்:- அத்தனை பேருமே என்னிடம் அன்பாக இருக்கிறார்கள். மரியாதையுடன் பழகுகிறார்கள். நான் மீண்டும் நடிக்க வருவேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை. திட்டமிட்டு மறுபடியும் நடிக்க வரவில்லை. தமிழ் படத்தில் நடித்து பல வருடங்கள் ஆனாலும், இன்றைய நடிகர்-நடிகைகள் அத்தனை பேரின் படங்களையும் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எல்லோருமே திறமையாக நடிக்கிறார்கள்.

தமிழ் பட உலக கலைஞர்களின் பண்பும், ஒழுக்கமும் என்னை கவர்ந்து இருக்கிறது. இதுபோன்ற கலைஞர்களுடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்புகள் வந்தால், தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பேன்.’’

இவ்வாறு ஸ்ரீதேவி கூறினார்.

No comments:

Post a Comment