Monday, June 30, 2014

தாய்க்குக் கோயில் கட்டியவர்

இராமாபுரம் தோட்டத்தில் தன் தாய்க்கு கோயில் கட்டினார் மக்கள் திலகம். வெளியே போகும் போது தினம்தோறும் தன் தாயை வணங்கிவிட்டுத்தான் செல்வார்.
இதேபோல் ராயப்பேட்டையில் தன் தாய் வீட்டிலும் ஒரு பெரிய தாயின் படம். “சத்யா ஸ்டூடியோவிலும் அவருடைய அலுவலகத்திலும் தாயின் படம். மாம்பலம் அலுவலகத்திலும் தாயின் படம். தாயே தெய்வம் என்று தினந்தோறும் பூஜித்து வந்தார் மக்கள் திலகம். மக்கள் சேவையே என் சேவை, நான் முதல் மந்திரியாக இருந்தாலும் மக்கள் சேவகன். மக்கள் வாழ்வே என் வாழ்வு. இது எம்.ஜி.ஆர். முதல் அமைச்சராக ஆன பின் அவர் சொன்ன வார்த்தைகளும் எண்ணமும் இதுதான்.
தன் தாய் இறந்த பின் தன் அண்ணன் சக்கரபாணியை தாயாக நினைத்து எந்த விஷயமாக இருந்தாலும் கலந்து பேசாமல் செய்ய மாட்டார். இதில் அவர்கள் இருவரும் அண்ணன் தம்பியும் சொந்தத்தில் ஆரம்பித்த நாடக கம்பெனிக்கும் சினிமா கம்பெளிக்கும், முழு பொறுப்பையும் தன் அண்ணனிடமே கொடுத்து இருந்தார்.
அவருக்கு துணையாக இருந்து எல்லா பொறுப்புகளையும் கணக்கு வழக்குகளையும் கவனிக்கும்படி ஆர். எம். வீரப்பனை நியமித்தார். தான் முதல் அமைச்சராக ஆன பின்னும் கூட தன் அண்ணனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்துக்கொண்டே இருந்தார்.
இதேபோல் சக்கரபாணியும் தன் உடன் பிறந்த தம்பி மனம் நோகாமல் நடந்துகொள்வார். தம்பி தன்னிடம் பேசும்போதெல்லாம் மிக கவனமாக தம்பிக்கு ஏற்றமாதிரி பதில்களை சொல்வார். சக்கரபாணி தன்னுடன் பிறந்த மூத்தவர்கள் சகோதரிகளையும், சகோதரனையும் தன் தந்தையுடைய புகழ்களையும் தன் தாய் அவர்களுக்கு பிறகு தன்னையும் தன் உடன் பிறந்த தம்பியையும், வளர்க்க எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை நினைக்காத நேரமும் இல்லை. இதைப்பற்றி தனக்கு வேண்டிய முக்கியஸ்தர்களிடம் பேசாமல் இருப்பதும் இல்லை.
தன்னையும் மனைவி மக்களையும் எந்தக் குறைகளும் இல்லாமல் எனது தம்பி ராமச்சந்திரன் பார்த்துக்கொள்கிறான் என்ற பெருமையை வெளியே பேசாமலும் இருப்பதும் இல்லை. தன் தம்பி ராமச்சந்திரன் சிறுபிள்ளையாக இருக்கும் போது ரொம்பவும் சுறுசுறுப்பாகவும் சன்டித்தனமாகவும் இருப்பான்.
அவன் செய்யும் குறும்புகளை அம்மா ஒருவரால்தான் அவனை அடக்க முடியும். அப்படிப்பட்ட என் தம்பியுடன் நாடகம், சினிமா, அரசியல், இப்படி அவனுடன் நான் சேர்ந்து வாழ்ந்த காலங்களை நினைத்து ஆச்சரியப் படுவேன். அவன் பிரபலமாக வாழ்கின்ற இந்த காலத்தில் பெரிய சாது போலவும், ஞானிகள் போலவும், பெரும் அரசியல் தலைவர் போலவும் அவன் பேசுவதும் அவன் நடந்துகொள்ளும் விதமும் ஒரு பெரிய உயர்ந்த மாமனிதனாக ஆகிவிட்டான் என்பதை நினைத்து பூரிப்பு அடைந்தேன்.

No comments:

Post a Comment