Tuesday, June 17, 2014

திரையுலகில் 70 ஆண்டுகளாக பங்களிப்பு செய்த மாமனிதர்

rஜிதை எடுத்துச் சொல்லும் திறன் வேண்டும். அந்தத் திறன் கலைஞருக்கு இருந்தது. அதை எடுத்துச் சொல்ல ஒரு தளம் வேண்டும். அந்தத் தளமும் இயக்கம் என்ற பீடமாகக் கலைஞருக்கு அமைந்தது. இது எல்லோருக்கும் வாய்க்கா. பிறகு, திரையுலகில் அவர் எழுதிய வசனங்களை அசை பிரித்தால் புதுக்கவிதை என்று சொல்லத் தோன்றுகிறது.
அவருடைய பழைய பராசக்தியையும் பழைய மனோகராவையும் திரும்பிப் பார்த்தால் அங்கே புதுக்கவிதை வீச்சுக்களை நம்மால் காணமுடிகிறது. கலைஞருடைய வசனங்களில் ஊளைச்சதையற்ற வார்த்தைகளை நான் பார்த்தேன். அலங்காரங்கள்கூட அர்த்தத்தோடு இருக்க வேண்டும்.
அடைமொழியை அதிகமாகப் பயன்படுத்தக்கூடாது என்று கவிஞர் சுரதா சொல்லுவார். தாமரை என்று சொல். செந்தாமரை என்று சொல்லுகிறபோது சிவப்பு என்று அடையை அனாவசியமாகப் பயன்படுத்தாதே என்று அவர் சொல்லுவார். அடைமொழியைக்கூட அளந்து, அர்த்தத்தோடு பயன்படுத்திய ஆற்றல் கலைஞரிடம் உண்டு. என்றைக்கோ அவர் எழுதிய உரைநடைகள் இன்றைக்கும் எடுத்தாளப்படுவது ஆச்சரியமில்லையா?
தமிழ் இலக்கியத்தில் வெண்பாக்களும் விருத்தங்களும் பழமொழிகளும் மேற்கோள் காட்டப்படுவது இயல்பு.
எந்த ஒரு மேற்கோள் வடிவமானாலும் அது செய்யுள் என்ற பாத்திரத்திற்குள் செப்பமாக உட்கார்ந்திருக்க வேண்டும்.
செய்யுள் என்ற பீடத்தில் இருக்கிற அல்லது யாப்பு என்ற கட்டமைப்பில் இருக்கிற சொற்களை மட்டும்தான் தமிழன் மேற்கோள் காட்டுவான். முதன்முதலில் உரைநடை மேற்கோள் காட்டப்பட்டது என்றால் அது கலைஞருடைய உரைநடைதான்.
“ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்” என்று கலைஞர் பராசக்தியில் எழுதினார். பிரிட்டிஷ் ராஜகுடும்பத்தின் உயரமான பெண்ணும் உயரமான பெண்களில் துயரமான பெண்ணுமான டயானா இறந்த போது, ஒரு பத்திரிகை அந்தச் செய்திக்குத் தலைப்பிட்டது “ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்” என்று.
எழுதப்பட்டு 50 ஆண்டுகளுக்குப் பின்னும் ஒரு உலக நிகழ்வுக்குத் தலைப்பாக அமையக்கூடிய எழுத்து கலைஞரின் எழுத்து. அது ஆச்சரியமில்லையா? இன்னும் சொல்லலாம். அவர் ஆற்றல் ஒரு பேட்டிக்குள் முடிக்கிற பொருளல்ல, ஒரு கிளிஞ்சல் கொண்டு கடலை இறைத்துவிட முடியாது.
ஒரு திரைப்படப் பாடலாசிரியராக இருந்து, கலைஞரின் திரைப்பாடல்களை எப்படிப் பார்க்கிaர்கள்?
கலைஞர், திரைப்படப் பாடல்களை அளந்து எழுதியிருக்கிறார். அதிலும் அழகாக எழுதியிருக்கிறார். எண்ணிக்கையில் குறைவாக எழுதியிருக்கிறார். ஆனால் எண்ணங்களில் வலிமையாக எழுதியிருக்கிறார்.
“பூமாலை நீயே” பாடலில் நீதிக் கட்சித் தலைவர் பன்னீர்செல்வத்தைக் கொண்டு வந்து, திராவிட இயக்க முத்திரையைப் பதித்திருக்கிறார். வசனங்களில் தனது சமகாலத் தோழர்களின் பெயர்களைப் பதிவு செய்து பாசத்தைக் காட்டியிருக்கிறார்.
சேரன் செங்குட்டுவன் வசனத்தில், “அரங்கின் அண்ணலே உன்னை இழந்தார்கள். ஆசைத்தம்பி இளங்கோ உன்னை இகழ்ந்தார்கள். நெடுஞ்செழியப் பாண்டியரே உன்னை இகழ்ந்தார்கள், என்றெல்லாம் தன் சமகாலத் தோழர்களை இலக்கியத்திற்குள் கொண்டுவரும் பெருந்தன்மை அவருக்கு இருந்தது.
அதே பாணியைத்தான் நான் முன்னர் தொட்டுக்காட்டிய “பூமாலை நீயே” பாட்டில் கையாண்டார். அவருடைய பாடலில் எனக்கு மிகவும் பிடித்தது “வாழ்க்கை எனும் ஓடம்” ஆகும். அது பாட்டல்ல. பாடம். ஒருமுறை சில அரச அதிகாரிகள் என்னிடம் வந்தார்கள்.
எய்ட்ஸ் தடுப்பு குறித்து சில வரிகள் எழுதித்தர முடியுமா என்று என்னிடம் கேட்டார்கள்.
நான் சொன்னேன்... கலைஞரை முதலமைச்சராக வைத்துக் கொண்டு என்னிடம் வந்து இதற்கு வரிகள் கேட்கிaர்களே அவர் எழுதிய வரிகளே பொருத்தமாக இருக்குமே. வருமுன் காப்பவன்தான் அறிவாளி அது வந்த பின்னே தவிப்பவன்தான் ஏமாளி என்ற கலைஞரின் வரிகளை எழுதிக் கொள்ளுங்கள் என்றேன். சிரித்துக் கொண்டே எழுதி வாங்கிக் கொண்டு போனார்கள். இப்படி எல்லாத் துறைகளுக்கும் இவரது பாட்டு பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.
காஞ்சித் தலைவனில் ஒரு பாட்டு எழுதியிருப்பார். “மகிமைகொண்ட மன்னரின் மீது எதிரிகளின் கால்கள்
மலர் பறிப்ப தில்லையடா வீரர்களின் கைகள்
இவையெல்லாம் தமிழனுக்கு உணர்ச்சி கொடுத்த உயிர்ப்பான வரிகள். குறைவாக எழுதினாலும் நிறைவான கருத்துக்களோடு திகழுகின்றன கலைஞருடைய பாடல்கள்.
கலைஞரை எப்போது எந்த வயதில் எவ்விதமாக அறிந்தீர்கள்? அவரை எப்போது முதன் முதலாகச் சந்தித்தீர்கள்?
கலைஞரை நான் உணர்ந்து கொண்டது சின்ன வயதில். எனக்கு அப்போது பன்னிரண்டு பதின்மூன்று வயதிருக்கும். என் சித்தப்பா பாண்டித்தேவர், பெரியகுளத்தில் இருந்து வாங்கி வந்த பராசக்தி வசனப் புத்தகம் அந்த வயதில் என் மடியில் விழுகிறது. பராசக்தி வெளிவந்து ஓராண்டுக்குப் பிறகு தான் நான் பிறக்கிறேன். கலைஞர் கல்லக்குடி போராட்டத்தில் பங்கேற்றுத் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்த போது நான் இரண்டு நாள் குழந்தை. நான் பிறந்து பத்துப் பன்னிரண்டு ஆண்டுகள்.
தமிழ்ச் சமூகத்தில் “பராசக்தி” ஊடறுத்துப் பயணம் செய்துகொண்டிருந்தது. ஐம்பது அறுபதுகளில் பிறந்த படிக்கத்தெரிந்த கலைஞர்கள் அனைவரும் கலைஞரின் “பராசக்தி”, “மனோகரா”வில் மனம் பறிக்கொடுக்காமல் இருந்திருக்க முடியாது. அன்றைக்கிருந்த தலைமுறைக்கு ஒரு தமிழ் ஊட்டம் கிடைத்தது என்று சொன்னால் அது கலைஞரின் வசனங்களால்தான்.
கலைஞரின் விரலும் சிவாஜியின் குரலும் இந்த இரண்டும் இல்லையென்றால் தமிழனுக்கு காதுகளின் வழியாகத் தமிழ் பாய்ந்திருக்காது. “இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே” என்ற பாரதியின் பாடலுக்கு கலைஞரும் சிவாஜியும் தான் உரையெழுதியவர்கள்.
கலைஞரின் தமிழை சிவாஜியின் குரலில் கேட்ட தமிழ்நாடு சிலிர்த்தது. அப்படி அறிந்தபோது யார் கலைஞர் என்ற சின்ன வயதுக் கேள்வி எனக்குள் வளர்ந்தது.

No comments:

Post a Comment