‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் சோர்வோடு இருந்த சிவகுமாருக்கு, அவருடைய மாமன் ரத்தினம் ஒரு மகிழ்ச்சி செய்தியை சொன்னார்.
‘எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி ஆகியோரை நடிக்க வைத்து, ‘சித்ரா பெளர்ணமி’ என்ற படத்தை தயாரிக்க இருக்கிறேன். இதை கிருஷ்ணன் - பஞ்சு டைரக்ட் செய்கிறார்கள். இதில் விஜயகுமாரின் தம்பி வேடத்தில் நீ நடிக்க வேண்டும் என்றார். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார் சிவகுமார். ஆனால் ‘சித்ரா பெளர்ணமி’ எதிர்பார்த்த வேகத்தில் வளரவில்லை.

டைரக்டர் ஏ. சி. திருலோகசந்தரும், ஏ. வி. எம். சரவணன் சகோதரர்களும், சிவகுமாரை வரச்சொல்லி பார்த்தனர். அவர்களுக்கு பிடித்து விட்டது. காக்கும் கரங்களில் இரண்டாவது கதாநாயகனாக நடிக்க சிவகுமார் ஒப்பந்தமானார்.
இந்தப் படத்துக்கு ஆரூர்தாஸ் வசனம் எழுத, கே. வி. மகாதேவன் இசை அமைத்தார்.
சிவகுமாரின் இயற் பெயர் பழனிச்சாமி.
அதை ‘சிவகுமார்’ என்று திருலோகசந்தரும், ஏ. வி. எம். சரவணன் சகோதரர்களும் மாற்றி வைத்தனர்.
‘காக்கும் கரங்கள்’ 1965 ஜூன் 19 ஆம் திகதி ரிலீஸ் ஆயிற்று.
படம் வெளியாவதற்கு முந்தின நாள், சிவகுமாருக்கு ஒரு அதிர்ச்சியான தகவல். சிவகுமாருக்கு ஜோடியாக நடித்த பெண் அவரைவிட மூத்தவர் போல தோன்றியதால் 500 அடி நீளம் கொண்ட காதல் காட்சியை வெட்டி விட்டார்கள் என்பதே அந்த தகவல். இதனால் சோகம் அடைந்த சிவகுமாரை சரவணன் தேற்றினார். ‘கவலைப்படாதீர்கள், மிக நல்ல வடம் ஏற்று நீங்கள் நடிக்கும் காலம் விரைவில் வரும்’ என்று கூறினார்.
(சிவகுமார் முதன் முதலாக ஒப்பந்தமான ‘சித்ரா பெளர்ணமி’ பிறகு வளரவே இல்லை. சில ஆண்டுகளுக்குப் பின் இதே பெயரைக் கொண்ட வேறொரு படத்தில் சிவாஜிகணேசன் நடித்தார்.)
‘காக்கும் கரங்கள்’ வெளியாகி ஒரு வாரத்தில், ஜெமினி நிறுவனத்தில் இருந்து சிவகுமாருக்கு ஒரு தந்தி வந்தது. ஜெமினி தயாரிக்கும் ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தில் சிவாஜிகணேசனின் மூத்த மருமகனாக (காஞ்சனாவுக்கு ஜோடியாக) நடிக்கும் வாய்ப்பு சிவகுமாருக்கு அளிக்கப்படுவதாக அந்த தந்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜெமினி படத்தில் நடிக்கும் வாய்ப்பு தன்னைத் தேடி வந்தது கண்டு மிகவும் மகிழ்ந்தார் சிவகுமார்.
முதல் நாள் படப்பிடிப்பின் போது ஒரு வேடிக்கை நடந்தது. கதைப்படி, கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் காஞ்சனாவை சிவகுமார் திருமணம் செய்து கொள்கிறார். கல்லூரிப் படிப்பு முடியும் வரை காஞ்சனாவை சந்திக்கக் கூடாது என்று சிவகுமாருக்கு அவர் தந்தை தடை போட்டார். தந்தைக்குத் தெரியாமல் மனைவியை வந்து சந்திப்பார் சிவகுமார்.
சிவாஜியும், சிவகுமாரும் சாப்பிடும் காட்சி படமாக்கப்பட்டது. செளகார் ஜானகி உணவு பரிமாறிக் கொண்டே ‘என்னங்க மாப்பிள்ளையை இன்னிக்கு தங்கிட்டு நாளைக்குப் போகச் சொல்லுங்க’ என்பார். உடனே சிவாஜி, ‘எனக்கும் ஆசைதான்! ஆனால் மாப்பிள்ளை அவர் அப்பாவுக்குத் தரியாமல் திருட்டுத்தனமாக வந்திருக்காரே! என்ன மாப்பிள்ளை?’ என்று கேட்க, சிவகுமார் சிரித்து மழுப்புவார்.
இதுதான் அன்று எடுக்கப்படும் காட்சி. ‘நான் என்ன செய்ய வேண்டும்’ என்று, டைரக்டர் எஸ். எஸ். வாசனிடம் கேட்டார் சிவகுமார். ‘உங்களுக்கு இன்று வசனம் ஏதும் இல்லை. நீங்க சும்மா சாப்பிட்டுக் கொண்டு இருங்க, போதும்’ என்றார் டைரக்டர்.
ருமுறை ஒத்திகை பார்க்கப்பட்டது. ‘டேக்!’ என்று குரல் எழுப்பியபடி, சிவகுமாரின் இலையைப் பார்த்தார் வாசன். அதில் அப்பளத்தைக் காணோம்!
‘எங்கே அப்பளம்?’ என்று கேட்டபடி தேடினார் சிவகுமாரின் இலை அருகே வந்து குனிந்து பார்த்தார். அப்பளத் துண்டுகள் பொடி பொடியாகக் கிடப்பதைப் பார்த்தார். அவருக்கு விஷயம் புரிந்துவிட்டது.
‘என்ன! அப்பளத்தை சாப்பிட்டேளா?’ என்று கேட்டுவிட்டு, ஹ... ஹ... ஹா என்று சிரித்தார். பிறகு, ‘ஒத்திகையின் போதெல்லாம் சாப்பிட வேண்டியதில்லை. சாப்பிடுவது மாதிரி நடித்தால் போதும்!’ என்றார்.
சிவாஜி, சிவகுமாரை நோக்கினார். அவர் பார்வையில் தீப்பொறி பறந்தது.
அந்தப் படப்பிடிப்பு நிகழ்ச்சியை இப்போது நினைவு கூர்ந்த சிவகுமார், ‘சிவாஜி பார்த்த பார்வையில் நான் பொசுங்கிப் போய்விட்டேன். சாப்பிடாமல், சாப்பிடுகிற மாதிரி நடிப்பது எப்படி என்று அப்போது எனக்குத் தெரியலில்லை. அந்த அளவுக்கு கற்றுக்குட்டி!’ என்றார்.
‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’யில் நடித்த சிவகுமாருக்கு 1,500 ரூபாய் சம்பளம் கிடைத்தது. பணத்தை அனுப்பியதுடன், ‘படத்தை நல்லபடியாக முடிக்க நீங்கள் கொடுத்த ஒத்துழைப்புக்கு நன்றி’ என்று கடிதமும் எழுதியிருந்தது, ஜெமினி நிறுவனம்.
No comments:
Post a Comment