சுவைக்க சுவைக்க திகட்டாத அமுதகானங்கள்
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீ ரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை
-“ஏதும் செய்வதற்குத் திராணியற்ற ஏழைகளின் கண்ணீர் செல்வத்தைத் தேய்த்துவிடும் படை!”
- என்று ஈராயிரமாண்டுகளுக்கு முன்னரே வள்ளுவப் பேராசான் சொல்லிச் சென்றுள்ளான்.
அதாவது, ஏழைகளின் சார்பாக நின்று பணக்காரர்களுக்கு எச்சரிக்கிறான் வள்ளுவன். அதாவது,
உழைப்பவர்களுக்காகக் குரல் கொடுக்கிறான். அந்த நமது முப் பாட்டன். ஆனால், அந்த உழைப்பவர்களே தங்களுக்காகக் குரலெழுப்பியதற்கும் ஒரு மிக நீண்ட வரலாறு இருக்கவே செய்கிறது. இன்னும் சொல்லப் போனால் வரலாறு என்பதே உழைப்பவர்களுக்கும், அவர்களை ஒடுக்கி வந்த சுரண்டல்காரர்களுக்கு மிடையிலான முரண் போராட்டம்தானே? உழைப்பவர்களின் குரல் காலாகாலமாக ஒலித்தே வந்திருக்கிறது.
அதன் ஒரு நீட்சியாக தொடர்ச்சியாக நமது தமிழ் திரை இசைப் பாடல்களிலும் அது பன்முகத்தன்மையோடு பதிவாகியிருப்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியாது அத்தகைய பாடல்களில் சிலவற்றைப் பற்றி நாம் இங்கே பேசுவோம்.
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நானொரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின்மீது
அனைவரும் எனது கூட்டாளி... (பாடலாசிரியர் ஆலங்குடி சோமு, படம் - தொழிலாளி)
- இது ஒரு பாடல் இன்னொரு பாடலும் இதுபோல உண்டு. அது -
கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி... (பாடலாசிரியர் மருதகாசி, படம் - விவசாயி)
இவை இரண்டும் தொழிலாளியையும் விவசாயியையும் குறித்துப் பாடுகின்றன. ஆனால், இந்த உலகைப் படைத்தது கடவுள் என்ற மரபார்ந்த பழமைச் சிந்தனையை அடியொற்றி கடவுளை முதலாளியாக்கிவிட்டன இப்பாடல்கள். அப்படியென்றால் முதலாளி குறித்தே இங்கே சரியான பார்வை இல்லாமல் போகிறது. சுரண்டலால் உருவான உபரிச் செல்வமே மூலதனம் ஆகிறது என்னும் உண்மையை மறைக்கின்றன இப்பாடல்கள். அதே சமயம் தொழிலாளியையும், விவசாயியையும் போற்றவும் முயல்கின்றன. அந்தப் போற்றுதல்களும் கூட முதலாளியின் நலன்சார்ந்து அமைந்து விடுகின்றன. அவற்றைப் பார்ப்போம்.
No comments:
Post a Comment