Tuesday, September 11, 2012


 

மூவேந்தர்களுடன் நடித்த ~அமுதை பொழியும்' ஜமுனா இந்திரா காந்தியின் அழைப்பில் எம்.பி. ஆனவர்

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி திரையுலக மூவேந்தர்களுடன் நடித்த ஜமுனா தேர்தலில் போட்டியிட்டு ‘எம்.பி.’ ஆனார்.
தென்னாட்டின் சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்த ஜமுனா, தேர்தலில் இ. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஆனவர். ஜமுனா, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்.
தந்தை பெயர் சீனிவாசராவ், தாயார் கெளசல்யாதேவி. ஜமுனா படிப்பில் படுசுட்டி. அதனால் அவரை டொக்டருக்குப் படிக்க வைக்க பெற்றோர் விரும்பினர்.
சிறு வயதிலேயே ஜமுனா மிகவும் அழகாக இருப்பார். அவர் ஆடுவதையும், பாடுவதையும் கண்ட உறவினர்களும், நண்பர்களும், இந்தப் பெண்ணை சினிமாவில் சேர்த்து விட்டால், வெகு சீக்கிரத்தில் பெரிய நடிகையாகிவிடுவாள் என்றனர்.
ஜமுனாவின் தந்தைக்கு டொக்டர் ராஜாராவ் என்ற சினிமா டைரக்டர் நெருங்கிய நண்பர். அவர் முயற்சியால் தெலுங்குப் படத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு ஜமுனாவுக்குக் கிடைத்தது.
1954ல் பிரபல பட அதிபர் எச். எம். ரெட்டி அவருடைய ‘ரோகிணி பிக்சர்ஸ்’ பெனரில், தமிழ், தெலுங்கு, மராத்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரு படத்தைத் தயாரித்தார். தமிழ்ப்படத்தின் பெயர் ‘பணம் படுத்தும் பாடு’.
இதில் என். டி. ராமராவும், செளகார் ஜானகியும் ஜோடியாக நடித்தனர். ஜமுனா இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். அவருக்கு ஜோடி கே. ஏ. தங்கவேலு. இது நகைச்சுவைப் படம். சுமாராக ஓடியது. 1955ல் விஜயா - வாகினி ஸ்டூடியோ, ‘மிஸ்ஸியம்மா’ வைத் தயாரித்தது. மாபெரும் வெற்றிப்படமான இதில் ஜெமினிகணேசனும், சாவித்திரியும் இணைந்து நடித்தனர். படத்தின் டைரக்டர் எல். வி. பிரசாத்.
இந்தப் படத்தின் இரண்டாவது கதாநாயகியாக ஜமுனா நடித்தார். குழந்தை முகமும், குழந்தைத்தனமும் கொண்ட கெரக்டர் அந்த கதாபாத்திரத்தில் ஜமுனா பிரமாதமாக நடித்தார். ‘தமிழுக்கு ஒரு நல்ல நடிகை கிடைத்தார்’ என்று பத்திரிகைகள் எழுதின.
‘மிஸ்ஸியம்மா’வைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக ஜமுனா நடித்தார். 1957ல் சிவாஜிகணேசனுடன் ‘தங்கமலை ரகசிய’த்தில் நடித்தார். இந்த வெற்றிப் படத்தில், சுசீலா குரலில் ஜமுனா பாடுவது போல அமைந்த ‘அமுதைப் பொழியும் நிலவே’ என்ற பாடல் ரசிகர்களின் செவிகளில் அமுதைப் பொழிந்தது.
தொடர்ந்து ‘நிச்சயதாம்பூலம்’, ‘மருதநாட்டுவீரன்’ முதலிய படங்களில் சிவாஜியுடன் நடித்தார். பேரறிஞர் அண்ணா எழுதிய ‘தாய் மகளுக்குக் கட்டிய தாலி’ என்ற கதையை, ஒளிப்பதிவாளர் ஆர் ஆர். சந்திரன் 1959ல் அதே பெயரில் படமாகத் தயாரித்தார். இதில் எம்.ஜி.ஆரும், ஜமுனாவும் ஜோடியாக நடித்தனர். ஜமுனாவுக்கு தாயாராக நடித்தவர் கண்ணாம்பா.
ஜமுனாவின் சிறந்த நடிப்பை எடுத்துக் காட்டிய படம் ‘குழந்தையும் தெய்வமும்’. ஏ.வி.எம். தயாரிப்பான இந்தப் படத்தில் ஜமுனாவுக்கு ஜோடியாக ஜெய்சங்கர் நடித்தார். இதில் ஜமுனாவுக்கு இரட்டைக் குழந்தைகள். அந்தக் குழந்தைகளாக இரட்டை வேடத்தில் சிறப்பாக நடித்தார். குட்டி பத்மினி அப்போது அவர் குழந்தை நட்சத்திரம்.
பிற்காலத்தில், இளைய தலைமுறை நடிகர்களுக்கு அக்காவாகவும், அம்மாவாகவும் ஜமுனா நடித்தார். ‘தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் கமல்ஹாசனுக்கு அம்மாவாக நடித்தார்.
தமிழில் ஜமுனா அதிக படங்களில் நடிக்கவில்லையென்றாலும், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொத்தம் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
தெலுங்குப் பட உலகின் சூப்பர் ஸ்டார்களாகத் திகழ்ந்த என். டி. ராமராவ், ஏ. நாகேஸ்வரராவ் ஆகியோருடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். 1983ல் ஜமுனாவை அரசியலுக்கு வருமாறு இந்திரா காந்தி அழைத்தார். அதைத் தொடர்ந்து இ. காங்கிரஸில் ஜமுனா சேர்ந்தார்.
ராஜமகேந்திரபுரம் தொகுதியில், பாராளுமன்ற த்துக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் இ. காங்கிரசை விட்டு விலகி, பாரதீய ஜனதாவில் சேர்ந்தார். ஜமுனாவுக்கு 1965ல் திருமணம் நடந்தது. கணவர் பெயர் ரமணராவ் இவர் கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றினார்.
இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் வம்சி கிருஷ்ணா, அமெரிக்காவில் கம்ப்யூட்டர் துறை பேராசிரியராகப் பணியாற்றுகிறார் மகள் சரவந்தியும் பட்டதாரி ஆவார்.


 

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அம்பிகா

தமிழ், மலையாளம் உட்பட 150 படங்களில் நடித்த அம்பிகா, மலையாளப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். அம்பிகாவின் சொந்த ஊர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள கல்லரா.
தந்தை குஞ்சன் நாயர், தாயார் சரசம்மா. குஞ்சன் நாயர் மின்சாரத்துறையில் பணிபுரிந்தார். சரசம்மா காங்கிரஸ் கட்சியில் பிரபலமானவராக இருந்தார். அம்பிகாதான் வீட்டில் மூத்த பெண்.
அவருடன் பிறந்தவர்கள்: மல்லிகா, சந்திரிகா (நடிகை ராதா) அர்ஜுன் (புதுநெல்லு புதுநாத்து படத்தின் கதாநாயகன் ராமார்ஜுன்), சுரேஷ் (பரதேசி தெலுங்கு படத்தின் கதாநாயகன்). அம்பிகாவுக்கு சிறு வயதிலேயே சினிமா மீது மோகம் ஏற்பட்டது.
கவும் நினைவாற்றல் கொண்டதால் ரேடியோவில் ஒரு முறை பாட்டைக்கேட்டால் உடனடியாக அதை அப்படியே திரும்ப பாடும் ஆற்றலுடன் விளங்கினார். தினமும் காலையில் 7.45 மணியளவில் இருந்து 8 மணிக்குள் ரேடியோவில் லலிதசங்கீதம் என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பாகும்.
அதில் பிரபல இசையமைப்பாளர் எம்.ஜி. ராதாகிருஷ்ணன் என்பவர் பாடல்களை பாடும் விதம் பற்றி விளக்குவார். அவர் சொல்வதை அப்படியே ஒரு நோட்டில் எழுதத் தொடங்கி விடுவார், அம்பிகா.
பள்ளிக்கு செல்லும் போதும் அதையே தான் நினைத்துக்கொண்டு செல்வார். இது பற்றி அம்பிகா கூறியதாவது:
‘ரேடியோவில் கற்றுக்கொண்ட பாடல்களை, பள்ளியில் நடத்தப்படும் விழாக்களில் கலந்து கொண்டு ராகத்துடன் பாடுவேன். எனக்கு அப்போது முதல் பரிசு அல்லது இரண்டாவது பரிசு கிடைக்கும். நான் பாட்டுப்போட்டியில் கலந்து கொள்ளும் போது எனக்கு போட்டியாக உத்தமன் என்ற மாணவனும் பாட்டுப்போட்டிக்கு வருவான். அவன் பாடல்களை பெண் குரலில் பாடி பரிசை தட்டிச்சென்று விடுவான்.
அதனால் சில நேரங்களில் நான் முதல் பரிசை இழந்ததும் உண்டு. அதனால் அவன் மீது எனக்கு எரிச்சலும் அதிகமாக உண்டு. நான் பாடிய அதே பாடலை மற்றொரு பள்ளியில் படித்த என் சகோதரி ராதாவும் பாடி பரிசுகளை வாங்கி வருவாள்.
அப்போது நான் மிமிக்ரி, கவிதை போட்டி, நடிப்பு, நடனப்போட்டி, நாடகம் ஆகிய அனைத்திலும் பங்கேற்பேன். விளையாட்டில் எனக்கு ஈடுபாடு கிடையாது. ஆனால் விளையாட்டில் ராதாவுக்கு அதிக ஈடுபாடு உண்டு. நான் சராசரி மாணவிதான், எங்கள் வீட்டில் வாரம் ஒரு நாள் சனிக்கிழமை பொழுது போக்கு நிகழ்ச்சி நடக்கும். அப்போது அனைவரும் குடும்பத்தோடு ஒன்றாக இருந்து அவரவர் திறமையை காண்பிப்போம்.
நான் நடனம் ஆடுவேன், மேலும் நடித்துக்காட்டுவேன். என் தங்கை மல்லிகாவுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிடுவாள். ராதா நடனம் ஆடுவாள். எங்களை பெற்றோர் ஊக்கப்படுத்துவார்கள். இவ்வாறு அம்பிகா கூறினார்.
சிறுமியாக இருக்கும் போது அம்பிகா தாயாரை வற்புறுத்தி சினிமாப் படப்பிடிப்பை பார்க்க அழைத்து செல்வார். ஆலப்புழையில் நடந்த ஒரு படசூட்டிங்கை பார்க்க சென்றனர். படத்தில் கமலஹாசன், சோமன் ஆகியோர் நடித்துக்கொண்டு இருந்தனர். அம்பிகாவை பார்த்த கமலஹாசன், ‘நீ என்னுடன் நடிக்கிறாயா?’ என்று சிரித்துகொண்டே கேட்டார். ‘நடிக்கிறேன்’ என்றார், அம்பிகா. ‘நீ ஸ்ரீ வித்தியா மாதிரி இருக்கிறாய். சினிமாவில் நடிக்கலாம். எதிர்காலத்தில் பெரிய நடிகையாக வரலாம்’ என்று கமல் கூறினார்.
அதைக்கேட்டு அம்பிகா மிக்க மகிழ்ச்சி அடைந்தார். இந்தக் காலகட்டத்தில் மலையாளப்பட உலகில் iலா மிகப்புகழ் பெற்ற நடிகையாக விளங்கினார். அவரைப்போல் பெரிய நடிகையாக வரவேண்டும் என்று அம்பிகா கனவு கண்டார். இந்த சந்தர்ப்பத்தில் நீலா புரொடக்சன்ஸ் பட நிறுவனம் ‘சோட்டாணிக்கரா’ என்ற படத்தை எடுத்தனர்.
அந்தப் படத்தின் படப்பிடிப்பை காண தாயாருடன் அம்பிகா சென்றார். அங்கு பட அதிபர் சுப்பிரமணியனும், டைரக்டரும் இருந்தார்கள். ‘என் மகள் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறாள். வாய்ப்பு கொடுப்பீர்களா?’ என்று கேட்டார்.
மேக்கப் போட்டு, ‘டெஸ்ட்’ எடுத்துப் பார்த்தார்கள். அம்பிகாவின் அழகும். நடிப்பும் அவர்களுக்குப் பிடித்திருந்ததால், அந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
தொடர்ந்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். மங்கைப் பருவம் எய்திய பிறகு, நடிப்பதை நிறுத்தினார். ஒருநாள் வீட்டுக்கு அருகே உள்ள தியேட்டரில் அம்பிகா சினிமா பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது படத்தில் நடிப்பதற்கு அழைப்பு வீடு தேடி வந்தது. தியேட்டருக்கு ஆள் அனுப்பி, அம்பிகாவை அழைத்து வரச்சொன்னார், சரசம்மா.
சற்று நேரத்தில் அம்பிகா வந்தார். எம். முகுந்தன் என்ற பிரபல எழுத்தாளர் எழுதிய ‘சீதா’ என்ற நாவல், திரைப்படமாகத் தயாரிக்கப்பட இருப்பதாகவும் அதில் அம்பிகா நடிக்க வேண்டும் என்றும் வீடு தேடி வந்த படக் கம்பெனியினர் கேட்டுக்கொண்டனர். அம்பிகாவும், அவர் தாயாரும் சம்மதம் தெரிவித்தனர். ஒப்பந்தம் கையெழுத்து ஆயிற்று. கேரள பட உலகில் ஏற்கனவே ஒரு அம்பிகா (பத்மினியின் உறவினர்) இருந்தார்.
எனவே அம்பிகாவின் பெயரை மாற்ற வேண்டும் என்று சிலர் கூறினார்கள். சீதா பிருந்தா, பிரியா, சந்தியா என்ற பெயர்கள் ஆலோசிக்கப்பட்டன.
ஆனால் பெயர் மாற்றத்துக்கு அம்பிகாவின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. எனவே, அம்பிகா என்ற பெயரிலேயே நடித்தார். அப்படம் வெற்றி பெறவே, தொடர்ந்து மலையாள படங்களில் நடித்தார். படங்களில் நடித்துக்கொண்டே, ‘பி.ஏ’ வரலாறு படித்தார்.

No comments:

Post a Comment