Thursday, August 23, 2012

தான் தயாரித்த படத்தில் 

மூன்று வேடங்களில் நடித்த நடிகை 

வெண்ணிற ஆடை நிர்மலா

வெண்ணிற ஆடை மூலம் தமிழ்த்திரை உலகில் அறிமுகமான நிர்மலா எம். ஜி. ஆர்., சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்து புகழ் பெற்றார்.
உண்மையில், ‘வெண்ணிற ஆடை’யில் நடித்தபின் மேற்கொண்டு நடிக்க நிர்மலா விரும்பவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள். முதல் காரணம், தனியாக 10ம் வகுப்பு பரீட்சை எழுதி பாஸ் செய்து விட்டு, கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று விரும்பினார். இரண்டாவது காரணம், ‘வெண்ணிற ஆடை’யில் தன்னுடைய நடிப்பு நிர்மலாவுக்கு திருப்தி அளிக்கவில்லை. எனவே, நடிப்புக்கு முழுக்குப் போட்டிவிட்டு பட உலகையே விட்டு ஒதுங்கிவிட எண்ணினார்.
இந்த சமயத்தில் பிரபல மலையாள டைரக்டர் குஞ்சாகோ, தான் எடுக்கும் ‘காட்டு துளசி’ என்ற படத்தில் நிர்மலாவை நடிக்க வைக்க விரும்பினார்.
ஆனால் நிர்மலா நடிக்க மறுத்தார். ‘என் முதல் படத்திலேயே என் நடிப்பு எனக்குத் திருப்தி அளிக்கவில்லை. எனவே எனக்கு நடிக்க விரும்பம் இல்லை’ என்று கூறினார்.
ஆனால் குஞ்சாகோ விடுவதாக இல்லை. ‘உங்களிடம் மறைந்திருக்கும் நடிப்புத் திறமையை வெளியே கொண்டுவர என்னால் முடியும். ‘காட்டுத்துளசி’ உங்களுக்கு ஏற்ற அருமையான கதை இதில் நடித்தால் உங்களுக்கு பெரும் புகழ் கிடைப்பது உறுதி’ என்று கூறினார்.
அவருடைய வற்புறுத்தல் காரணமாக, காட்டுத்துளசியில் நிர்மலா நடித்தார் அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. மலையாளப் படவுலகில் நிர்மலா பெரும் புகழ் பெற்றார். நிறைய படவாய்ப்புகள் தேடி வந்தன. இதனால் மேற்கொண்டடு படிக்கும் எண்ணத்தைக் கைவிட்டு மலையாளப் படங்களில் நடிக்கலானார்.
இதன்பின் 1968ம் ஆண்டு சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்த ‘லட்சுமி கல்யாணம்’ படத்தில் நடிக்க நிர்மலாவுக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்று நிர்மலா நடித்தார்.
எம். ஜி. ஆர். நடித்த ரகசிய பொலிஸ் 115 என்ற படத்தில், எம். ஜி. ஆரைக் காதலிக்கும் இளம் பெண்ணாக நிர்மலா நடித்தார். எம். ஜி. ஆருடன் சேர்ந்து ‘கண்ணில் தெரிகன்ற வானம் கையில் வராதோ’ என்று டூயட் பாடும் காட்சி சிறப்பாக அமைந்தது.
தொடர்ந்து ‘பூவா தலையா’, மன்னிப்பு, வைராக்கியம், வீட்டுக்கு வீடு, அன்புக்கு ஒரு அண்ணன், சுடரும் சூறாவளியும், நீதிதேவன், தங்கச்சுரங்கம், எங்க மாமா, தங்கைக்காக, அன்பு சகோதரர்கள் வெகுளிப்பெண், இன்று போல் என்றும் வாழ்க, இதயக்கனி உட்பட பல படங்களில் நடித்தார்.
1972ல் இந்தியில் ‘தோரகா’ என்ற படம் வெளிவந்தது. துணிச்சலான கதை அமைப்பைக் கொண்ட ‘புதிய அலை’ படம். இந்தியா முழுவதும் பெரும் வெற்றி பெற்ற இந்தப்படத்தை, ‘அவள்’ என்ற பெயரில் தமிழில் தயாரித்தனர். கதாநாயகியாக நிர்மலாவும், கதாநாயகனாக சசிகுமாரும், வில்லனா ஸ்ரீகாந்தும் நடித்தனர்.
இந்தப் படத்தில் நிர்மலா பணக்கார வீட்டுப்பெண். அவரை சசிகுமார் காதலித்து மணப்பார். சசிகுமாரின் நண்பரான ஸ்ரீகாந்த், நிர்மலா மீது மோகம் கொள்வார். ஒரு விருந்தில், எல்லோரும் குடித்துவிட்டு மயங்கிக் கிடப்பார்கள். அந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, நிர்மலாவை ஸ்ரீகாந்த் கெடுத்துவிடுவார். விடிந்த பிறகுதான் நிர்மலாவுக்கு உண்மை தெரியும்.
இந்தப்படம் பரபரப்பாக ஓடியது. எனினும் இத்தகைய கதையை படமாக்கலாமா என்ற பட்டி மன்றமே நடந்தது. ‘படம் ஆபாசம்’ என்று சிலர் கூறினார்கள். ‘குடிப்பழக்கத்தின் தீமையை இப்படம் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது’ என்று வேறு சிலர் வாதம் செய்தனர்.
1974ம் ஆண்டு ‘அவளுக்கு நிகர் அவளே’ என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார் நிர்மலா. இதில் மூன்று வேடங்களில் நடத்தார். இப்படதின் கதாநாயகன் ரவிச்சந்திரன். வசனம் எழுதி, டைரக்ட் செய்தவர் மதுரை திருமாறன்.
200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நிர்மலா, ஏராளமான நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருதும், ‘நாட்டியத்திலகம்’ என்ற பட்டமும் பெற்றவர் ‘ஆடி வரும் தேனே’ ‘கற்பகம்’ ‘கல்கி’ ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் நிர்மலா நடித்துள்ளார்.
தன்னுடைய கலை உலக அனுபவங்கள் பற்றி நிர்மலா கூறியதாவது:-
‘எப்படி நடிக்க வேண்டும் என்பதை சிவாஜி சேரிடம் கற்றுக்கொண்டேன். பிறருக்கு உதவ வேண்டும் என்ற எம். ஜி. ஆரின் குணம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. முடிந்தவரை உதவ வேண்டும் என்ற எண்ணத்தை என்னிடம் உருவாக்கியது. சினிமாவில் நடிப்பதை விட தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பதற்கு அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளது. எனவே, தொலைக்காட்சித் தொடர்கள் எனக்கு ஒத்துவரவில்லை. தொடர்ந்து சீரியல்களில் நடிக்க நான் ஆர்வம் காட்டவில்லை.
இவ்வாறு நிர்மலா கூறினார்.



 

பகுத்தறிவு பாடல்கள் பாடுவதில் திறமை பெற்ற பட்டுக்கோட்டையார்

பாட்டுக் கட்டிப் பாடுவதே அவரது பணி
சிந்தனையைத் தூண்டும் தத்துவப் பாடல்கள் எழுதி, திரை உலகில் கொடி கட்டிப் பறந்தவர் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள செங்கல்பத்தான்காடு என்னும் கிராமத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் 13.04.1930ல் பிறந்தார்.
தந்தை பெயர் அருணாசலக் கவிராயர். தாயார் விசாலாட்சி. இந்த தம்பதிகளுக்கு 6 குழந்தைகள். இவர்களில் 4வதாகப் பிறந்தவர் கல்யாண சுந்தரம்.
மூத்தவர் கணபதி சுந்தரம். உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் அண்ணன் கணபதி சுந்தரத்துடன் கல்யாண சுந்தரம் அரிச்சுவடி பயின்றார். அதோடு பள்ளிப்படிப்பு முடிந்தது. 2 ஆம் வகுப்புக்கு பிறகு பள்ளிக்கு போகவில்லை. அண்ணனிடமே சில ஆண்டுகள் அடிப்படைக் கல்வியையும், நாட்டு நடப்புகளையும் கற்றார்.
தந்தை அருணாசல கவிராயர் கவிதை எழுதும் ஆற்றல் உடையவர். தந்தையைப் போலவே கணபதிசுந்தரமும் கவிதை பாடுவதில் வல்லவர். சிறந்த ஓவியராகவும் விளங்கினார். அத்தகைய அண்ணனின் அரவணைப்பில் வளர்ந்த கல்யாண சுந்தரம் தினமும் கவிதை புனையும் ஆற்றல் இயல்பாகவே அமைந்துவிட்டது.
இளம் வயதிலேயே, பாடல்களைப் பாடுவதில் கல்யாணசுந்தரம் ஆர்வமாக இருந்தார். நாடகம் பார்ப்பது, சினிமா பார்ப்பது, பிறகு பார்த்துவிட்டு வந்தவற்றில் கேட்ட பாடல்களை வரி பிசகாமல் பாடிக்கொண்டிருப்பது கல்யாண சுந்தரத்தின் விருப்பமான பொழுது போக்காக இருந்தது. பொது நிகழ்ச்சிகளுக்கும் சென்று வந்தார்.
பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளும் கம்யூனிசக் கொள்கைகளும் அவரை வெகுவாகக் கவர்ந்தன. இதனைத் தொடர்ந்து இளம் வயதிலேயே மேடைப் பாடகரானார். கம்யூனிஸ்டு கட்சி கூட்டங்களிலும், பிற நிகழ்ச்சிகளிலும் பாட்டுக்கட்டிப் பாடுவது அவரது பணிகள்.
நல்லதைச் சொன்னா நாத்திகனா?’ இதுதான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் முதல் பாடலாகும். இதை எழுதி அண்ணன் கணபதி சுந்தரத்திடம் காட்டி அவரது பாராட்டை பெற்றார். பகுத்தறிவு பாடல்களை பாடுவதில் திறமை பெற்றிருந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அதிராம்பட்டணத்தில் தி. மு. க. மேடையில் ஏறி பாடி இருக்கிறார்.
சினிமா சிந்தனை மேலோங்க கல்யாணசுந்தரம் கிளம்பி சென்னைக்கு வந்தார். அக்காலத்தில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த டி. எஸ். துரைராஜ் சேலம் மாடர்ன் தியேட்டர் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ‘நாங்கள் எல்லாம் நாடகத்தில் நடித்துவிட்டுத்தான் சினிமாவுக்கு வந்தோம். நீயும் முதலில் நாடகம் நடித்துவிட்டுப் பின்பு சினிமாவுக்கு வருவதுதான் சிறந்தது’ என்று டி. எஸ். துரைராஜ் ஆலோசனை கூறியதோடு சிபாரிசு கடிதம் கொடுத்து சக்தி நாடக சபாவுக்கு அனுப்பி வைத்தார்.
முதலில் நாடகத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு தரவில்லை. நாடக சபாவுக்கான ஆயத்த வேலைகளையே செய்துவந்தார். பின்னர் அவரது குட்டிக் கதைகளையும், பாடல் திறமையையும் அறிந்ததால், நடிக்க வாய்ப்பு கொடுத்தனர். ‘என் தங்கை’, ‘கவியின் கனவு’ ஆகிய நாடகங்களில் நடித்தார்.
‘கவியின் கனவு’ நாடகத்தில் முக்கியமான ராஜகுரு வேடமேற்கு நடித்து வந்த எம். என். நம்பியார் சபாவில் இருந்து விலகி விட்டதால், அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கல்யாணசுந்தரத்துக்கு கிடைத்தது. அந்த கதாபாத்திரம் அவருக்கு புகழைத் தேடிக்கொடுத்தது. அப்போது ‘ஏ. கே. சுந்தரம்’ என்றே அழைக்கப்பட்டார்.
1954 ஆம் ஆண்டில் டி. கே. பாலசந்திரன் தயாரித்த ‘கண்ணின் மணிகள்’ என்ற நாடகத்தில் கல்யாணசுந்தரம் பொலிஸ்காரர் வேடமேற்று நடித்தார். அந்த நாடகத்தில் அவர் எழுதிய, ‘தேனாறு பாயுது.
செங்கதிரும் சாயுது - ஆனால் மக்கள் வயிறு காயுது’ என்ற பாடல் பிரபலமானது. இந்த பாட்டுத்தான் பின்னர் சில புதிய கருத்துக்களோடு ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ சினிமாப் படத்திலும் இடம்பெற்றது.
பிறகு புதுச்சேரி சென்று தனது மானசீக குருவான பாரதிதாசனை சந்தித்தார். ஏற்கனவே அறிமுகம் ஆகி இருந்த கல்யாண சுந்தரத்தை அவர் தன்னுடன் தங்கி இருந்து ‘குயில்’ ஏட்டை வெளியிடும் பணியில் ஈடுபடுமாறு கூறினார். அதன்படியே பாரதிதாசனின் விருப்பத்தை நிறைவேற்றினார்.
அந்த சமயத்தில் பாரதிதாசன் எழுதும் கவிதைகள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் சமூகப் பார்வையை கூர்மைப்படுத்தியது எனலாம். பாரதிதாசனிடம் மாணவராக இருந்து கவிதை இலக்கணங்களை கற்றுக்கொண்டார். பல நல்ல கவிதைகளை எழுதி பாராட்டும் பெற்றார். மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்திற்கு வசனம், பாடல் எழுதும் பணியில் பாரதிதாசன் ஈடுபட்டிருந்தார். கல்யாண சுந்தரத்தையும் பாட்டு எழுதுவதற்காக அங்கு அழைத்துச் சென்றார்.
அந்த சந்தர்ப்பத்தில் மாடர்ன் தியேட்டர்சாருடன், பாரதிதாசனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு திரும்பினார். உடனே அவரோடு கல்யாணசுந்தரமும் புறப்பட்டார். ஆனால் பாரதிதாசன், கல்யாணசுந்தரத்தை தட்டிக்கொடுத்து ‘நீ முன்னேற வேண்டியவன் பொறுத்துக்கொண்டு இங்கேயே இரு’ என்று சொல்லிவிட்டு போனார். குருவின் கட்டளையை ஏற்று கல்யாணசுந்தரம் சேலத்திலேயே தங்கி இருந்து, மாடர்ன் தியேட்டர்ஸ் சினிமா படங்களுக்கு பாடல் எழுதினார்.
இப்படி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கவிதை வளர்ச்சிக்கும், திரைப்பட உலக பிரவேசத்துக்கும் துணையாக பாரதிதாசன் விளங்கியதால் தன்னுடைய கவிதை, கடிதம் எதுவாக இருந்தாலும் முதலில் ‘பாரதிதாசன் துணை’ என்று எழுதும் வழக்கத்தை கையாண்டார். சில பாடல் எழுதும் போது ‘வாழ்க பாரதிதாசன்’ என்றும் எழுதி இருக்கிறார். 1950 ஆம் ஆண்டுவாக்கில் சினிமாவுக்கு பாட்டெழுதுவதில் கண்ணதாசன், மருதகாசி, உடுமலை நாராயணகவி போன்றோர் பிரபலமாக இருந்தார்கள்.
அந்த காலகட்டத்திலேயே கல்யாண சுந்தரமும் நுழைந்தார். 1954ல் கல்யாணசுந்தரம் ‘படித்த பெண்’ என்றனது. இதனால் அவர் பாடல் எழுதி முதலில் வெளிவந்த படம் ‘மகேஸ்வரி’ என்பதாகும். இந்தப் படம் 13.11.1955ல் வெளிவந்தது. அதற்கு அடுத்து 20.04.1956ல் ‘படித்த பெண்’ வெளிவந்தது. மகேஸ்வரி படத்தில் கல்யாண சுந்தரம் எழுதிய பாடல்:
‘அறம்காத்த தேவியே, குலம் காத்த தேவியே! நல் அறிவின் உருவமான சோதியே கண் பார்த்து அருள்வாயே அன்னையே! அன்னையே! என்பதாகும். 1956 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘பாசவலை’, ‘ரங்கோன் ராதா’, ‘மர்மவீரன்’ போன்ற படங்களுக்கு பாடல் எழுதினார். பின்னர் 1957, 58 ஆம் ஆண்டுகளில் எம். ஜி. ஆர்., சிவாஜிகணேசன் நடித்த படங்களிலும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் இடம்பெறத் தொடங்கின. சுமார் 6 ஆண்டு காலத்தில் 57 சினிமாப் படங்களுக்கு 186 பாடல்களை எழுதினார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.

No comments:

Post a Comment