இரு குழந்தைகளை தத்தெடுத்த ஹன்சிகா
நடிகை ஹன்சிகா மோத்வானி தனது பிறந்த நாளில் இரு குழந்தைகளை தத்தெடுத்து பிறந்த நாளை அர்த்தமுள்ளதாகக் கொண்டாடியிருக்கிறார்.சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார் நடிகை ஹன்சிகா. பொதுவாக நடிகர், நடிகைகள் பிறந்த நாளன்று பார்ட்டி, ஆட்டம் பாட்டம் என தூள் கிளப்புவார்கள். ஆனால் ஹன்சிகா ரொம்பவே வித்தியாசமானவர். கடந்த முறை தனது பிறந்த நாளன்று இரு ஏழைக் குழந்தைகளைத் தத்தெடுத்தார்.
இந்த பிறந்த நாளிலும் ஏதாவது நல்ல விஷயத்தைச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் குடிசைப் பகுதியைச் சேர்ந்த மேலும் இரு குழந்தைகளைத் தத்தெடுத்துள்ளார். இவர்களின் படிப்பு உள்ளிட்ட செலவுகளை ஹன்சிகா தான் செய்யப் போகிறாராம். மாலையில் தனது தத்துக் குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி மகிழ்ந்தார்.
அக்ஷயா
ரகசிய திருமணம்

அக்ஷயா ஆந்திரத்தைச் சேர்ந்தவர். சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது ஆங்கில தொழிலதிபர் ஒருவரை தீவிரமாக காதலித்து வருவதாகவும், அவரையே ரகசிய திருமணம் செய்து கொண்டு ஐதராபாத்தில் செட்டிலாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அக்ஷயாவிடம் கேட்டால், நான் ஒருவரை காதலிப்பது உண்மை. ஆனால் திருமணம் செய்யவில்லை. எனது திருமணம் வெளிப்படையாக நடக்கும் என்கிறார்.
புதுமுக இயக்குனர் எஸ். நாகராஜன் இயக்கும் படம் இது சாருவோட டேட்டிங். இதில் கேரளாவைச் சேர்ந்த மாடலிங் கிரிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹீரோயினாக குஜராத் படங்களில் நடித்து வரும் ஸ்வப்னா அறிமுகமாகிறார். இயக்குனர் ஜி. எம். குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தற்போது சென்னையில் அதிகரித்து வரும் டேட்டிங் கலாசாரத்தை பற்றிய கதை. டைட்டல் பார்க்கிலிருந்து பாண்டிச்சேரிக்கு டேட்டிங் கிளம்பும் ஒரு பெண்ணும், ஆணும் கிழக்கு கடற்கரை சாலையில் அனுபவிக்கும் கொடூர சம்பவங்கள்தான் கதையாம்.
“இந்தப் படத்துக்காக பல இடங்களில் ஹீரோயின் தேடியபோதும் கிடைக்காத நிலையில், தற்செயலாக இணையதளத்தின் மூலம் கிடைத்தவர்தான் இந்த ஸ்வப்னா. அவர் நடித்த படங்களின் டி.வி.டி.யை அனுப்பி வைத்தார். பிடித்திருக்கவே அவரை ஹீரோயின் ஆக்கிவிட்டோம்” என்று ஹீரோயின் கிடைத்த தகவலைச் சொல்கிறார் இயக்குனர் நாகராஜன். டேட்டிங் என்பதற்கு சரியா தமிழ் வார்த்தை கிடைக்காததால் ஆங்கிலத்தை சேர்த்துள்ளோம் என்றார்.
290 Àபடங்களுக்கு மேல் நடித்த ~வசந்த மாளிகை' வாணிஸ்ரீ
இன்றைய திரைப்பட ரசிகர்களாலும் ‘காதல் காவியம்’ என்று போற்றப்படுகிற ‘வசந்தமாளி கை’யில் சிவாஜியுடன் நடித்தவர் வாணிஸ்ரீ. இவர் ‘உயர்ந்த மனிதன்’ ‘சிவகாமியின் செல்வன்’ ‘வாணி ராணி’ ‘கண்ணன் என் காதலன்’ உட்பட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். வாணிஸ்ரீயின் சொந்த ஊர் ஆந்திரா மாநிலம் நெல்லூர். அவரது இயற்பெயர் ரத்தினகுமாரி.
நடனம் கற்று முடித்ததும் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
அதன் விளைவாக நாடக மேடைகளில் நடிக்கத் தொடங்கினார். நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது பீஷ்மர் என்ற தெலுங்குப் படத்தில் சிறு வேடத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அதன்பிறகு சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் நாடகத்தில் நடக்கத் தொடங்கினார்.
‘சில்லரகொட்டு சின்னம்மா’ என்ற நாடகத்தில் கதாநாயகியாகத் தோன்றிய இவரது நடிப்பு, பலரையும் கவர்ந்தது. அதன்பின்னர் முதன்முதலாக ‘வீரசங்கல்ப’ என்ற கன்னடப் படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன்பிறகு தொடர்ந்து தெலுங்கில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்தார்.
இந்த சமயத்தில் ‘காதல் படுத்தும்பாடு’ என்ற தமிழ்ப் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. இந்தப் படத்தில் ஜெய்சங்கருக்கு ஜோடியாக நடித்தார். அந்தப் படம் வெளிவந்த பிறகு தமிழ்ப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் தேடி வரத் தொடங்கின.
1968ம் ஆண்டு வெளியான ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் சிவாஜியுடன் வாணிஸ்ரீ ஜோடி சேர்ந்தார். ஏ. வி. எம். தயாரிப்பில் வெளிவந்த ‘உயர்ந்த மனிதன்’ வெற்றிப்படமானது.
சிவாஜியுடன் நடத்தது பற்றி வாணிஸ்ரீ கூறியதாவது:-
‘நெல்லூரில் நான் வசித்த போது, சிவாஜி நடித்த ‘மனோகரா’ தெலுங்கில் ‘டப்’ செய்யப்பட்டு வெளிவந்தது. அந்தப் படத்தில் தான் முதல் முதலாக சிவாஜியைப் பார்த்தேன். பின்னர், சிவாஜியுடன் நடிக்க ஆரம்பித்த பிறகு கூட, அவரிடம் பேச எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஏ. வி. எம்.மின் உயர்ந்த மனிதன் படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற இருந்தது. அதில் நடிக்க நானும் சென்றேன்.
இதில் சிவாஜி எனக்கு ஹீரோ என்றதும், இரவு முழுக்க தூக்கமே வரவில்லை. மறுநாள் காலையில் சிவாஜியுடன் நடிக்க வேண்டும். முன்பின் அறிமுகம் கூட நமக்கு இல்லையே, எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று கலக்கமாக இருந்தது.
நெல்லூரில் திரையில் பார்த்தவரை நேரில் பார்த்தேன். அதுவும் அவரது கதாநாயகியாக.
சிவாஜி என்னைப் பார்த்தவுடன் ‘உன் போட்டோக்களை பத்திரிகைகளில் பார்த்து இருக்கிறேன். நல்லா நடிப்பியா, தமிழ் நன்றாக பேசவருமா? என்று கேட்டார். நான் சிரித்தபடி தலை அசைத்தேன்.
‘வெள்ளிக் கிண்ணம்தான் என்ற பாட்டுக்குத்தான் முதன் முதலாக சிவாஜியுடன் நடித்தேன்.
இவ்வாறு வாணிஸ்ரீ கூறினார்.
‘உயர்ந்த மனிதன்’ படத்திற்கு பிறகு சிவாஜிக்கு ஜோடியாக அதிக படங்களில் நடிக்க வாணி ஸ்ரீக்கு வாய்ப்புக்கள் கிடைத்தன. அப்படி நடித்த படங்களில் ‘சிவாகாமியின் செல்வன்’ ‘வசந்த மாளிகை’ ஆகிய படங்களில் வாணிஸ்ரீ நடிப்பின் சிகரத்தைத் தொட்டார் என்று கூறலாம். இந்தியில் வெளியாகி சக்கை போடுபோட்ட ‘ஆராதனா’ படம் சிவகாமியின் செல்வன் என்ற பெயரில் தமிழில் தயாராகியது. சூப்பர் ஸ்டார் ராஜேஷ்கண்ணா நடித்த இரட்டை வேடத்தில் சிவாஜி நடித்தார். சார்மிளா டாகூர் நடித்த வேடத்தில் வாணிஸ்ரீ நடித்தார்.
முன் பகுதியில் இளமையான கதாநாயகியாகி,
பின் பகுதியில் வயோதிபத் தோற்றம். மாறுபட்ட இரு வேடங்களில் அற்புதமாக நடித்தார் வாணிஸ்ரீ. அதேபோலத்தான் தமிழ்த் திரைப்பட ரசிகர்களால் காதல் காவியம் என்று போற்றப்படும் ‘வசந்தமாளிகை’ திரைப்படத்தில் வாணிஸ்ரீ நடிப்பில் அசத்தி இருந்தார். எந்த நேரமும் போதையில் தள்ளாடும் சிவாஜியைத் திருத்தி காதலிக்கும் விமானப் பணிப்பெண் கதாபாத்திரத்தில் வாணிஸ்ரீ நடித்தார். அனைத்து பாடல்களும் அருமையாக அமைந்த வசந்த மாளிகை சிவாஜி, வாணிஸ்ரீ நடிப்பால் என்றென்றும் வாழும் காவியமாக இருந்து வருகிறது.
தொடர்ந்து டீச்சர் அம்மா, கன்னிப் பெண், தாமரை நெஞ்சம், வெள்ளிவிழா, இருளும் ஒளியும், வாணிராணி போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்தார். இந்தியில் ஹேமாமாலினி நடித்த ‘சீத்தா அவுர் கீதா’ என்ற படம்தான் தமிழில் வாணி ராணி என்ற பெயரில் தயாராகியது. இரட்டை வேடத்தில் வெகுசிறப்பாக நடித்தார் வாணிஸ்ரீ.
எம். ஜி. ஆருடன் கண்ணன் என் காதலன், தலைவன், ஊருக்கு உழைப்பவன் போன்ற படங்களில் வாணிஸ்ரீ நடித்துள்ளார்.
எம். ஜி. ஆருடன் நடித்தது பற்றி வாணிஸ்ரீ கூறியதாவது:-
‘எம். ஜி. ஆருடன் நடிப்பதற்கு முன்பே பலமுறை அவருடன் பேசி இருக்கிறேன். அவரது படிப்பிடிப்பையும் பார்த்து இருக்கிறேன். கண்ணன் என் காதலன்’ படத்தில் எம். ஜி. ஆருடன் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. முதல்நாள் படப்பிடிப்புக்கு சென்றேன் ‘கண்களிரண்டும் ஒளி விளக்காக’ என்ற பாடலுக்கு ஒத்திகை நடந்தது.
அப்போது என காதருகே ‘ஒன்றும் பயப்பட வேண்டாம்’ தைரியமாக நீ ஆடலாம்’ என்று எம். ஜி. ஆர். கூறினார். எனக்கு வியர்த்துப் போய்விட்டது. எப்படியோ என்னைச் சமாளித்துக் கொண்டு, ‘நன்றி’ என்று நடித்தேன். காலை ஏழு மணிக்கு தொடங்கிய படப்பிடிப்பு இரவு 12 மணிவரை நடந்தது. எம். ஜி. ஆருடன் நான்தோன்றிய முதல் காட்சியே ஒ. கே. ஆனது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
இவ்வாறு வாணிஸ்ரீ கூறினார்.
தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் 290 படங்களுக்கு மேல் வாணிஸ்ரீ நடித்து உள்ளார்.
‘விஸ்வநாதன் வேலை வேணும்’ பாடல் பிறந்த விதம்
காதலிக்க நேரமில்லை பாடல் கம்போஸிங்குக்காக சித்ராலயா அலுவலகத்தில் எம்.எஸ்.வி. தன்னுடைய ஆர்மோனியத்துடன் அமர்ந்திருந்தார். (அப்போதெல்லாம் புரொடக்ஷன் அலுவலகத்தில் வைத்து ட்யூன் போட்டு பின்னர் ரிக்கொர்டிங் தியேட்டரில் பதிவு செய்வது வழக்கம்) கவிஞர் கண்ணதாசனும் வந்துவிட்டார்.
அப்போது அங்கு வந்த ஸ்ரீதர், “அடே, ரெண்டு பேரும் வந்துட்டீங்களா? சரி சிட்டுவேஷன் என்னன்னா, தன்னை வேலையிலிருந்து நீக்கிய எஸ்டேட் ஓனரை எதிர்த்து ரவிச்சந்திரன் போராட்டம் நடத்துகிறார். இந்த சிட்டுவேஷனுக்கு பாட்டுப்போடுங்க” என்று சொல்லி விட்டு உள்ளறயில் சி.வி. ராஜேந்திரனோடும், கோபுவோடும் கதை டிஸ்கஷன்னுக்குப் போய்விட்டார்.
சற்று முன்னர் யாரோ சொன்ன ஐசனோவர் என்ற பெயரை மட்டும் நினைவில் வைத்திருந்த எம்.எஸ்.வி. ‘ஐசனோவர்.... ஆவலோவா....’ என்று வாய்க்கு வந்தபடி சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். உள்ளறையிலிருந்து எட்டிப்பார்த்த ஸ்ரீதர் “அண்ணே இப்போ நீங்க கத்தினீங்களே அதுதான் ட்யூன்” என்றார். இவருக்கோ ஆச்சரியம் இதில் என்ன ட்யூனைக் கண்டுவிட்டார் ஸ்ரீதர் என்று கவிஞர் கண்ணதாசன் பாடலை சொல்லாமல், வெட்டிப் பேச்சில் நேரம் கழித்துக்கொண்டிருந்தார். அப்போது எம்.எஸ்.வி. “அண்ணே சீக்கிரம் பாட்டைச் சொல்லுங்கண்ணே இதை முடிச்சிட்டு ஆலங்குடி சோமு கூட வேறு இடத்தில் பாடல் பதிவு இருக்கு எனக்கு” என்றார்.
அதற்கு கண்ணதாசன் “இதோ பாருடா விசு. ஒரு வாரமா பெங்களூர்ல தங்கி கையில இருந்த காசையெல்லாம் செலவழிச்சிட்டேன். இப்போ செலவுக்கே காசில்லை.
இன்னைக்கு ஸ்ரீதருக்கு ரெண்டு மூணு பாட்டு எழுதினேன்னா அவர் ஒரு தொகை கொடுப்பாரு. இந்த நேரத்தில என்னை விட்டுட்டு அங்கே இங்கேன்னு போகாதேடா, எனக்கு வேலை கொடுடா விஸ்வநாதா....! என்றார்.
எலிக்காது படைத்த ஸ்ரீதருக்கு இதுவும் கேட்டுவிட்டது. மீண்டும் தலையை நீட்டி “கவிஞரே, இப்போ கடைசியா சொன்னீங்களே அதுதான் பல்லவி” என்றார். இப்போது இவருக்கும் அதிர்ச்சி. விஸ்வநாதன் கேட்டார் “ஏண்ணே, இன்னைக்கு ஸ்ரீதருக்கு என்ன ஆச்சு....? நான் வாய்க்கு வந்தபடி கத்தியதை ‘அதுதான் டயூன்’னு சொல்றார். வேலை கொடுடா விஸ்வநாதான்னு நீங்க சொன்னதை ‘அதுதான் பல்லவி’ என்றார். என்னண்ணே இதெல்லாம்?’ என்று கேட்டதும் கண்ணதாசன் சொன்னார்.
“இதோ பார் விசு, நம்ம ரெண்டு பேருக்கும் ஸ்ரீதர் இன்னைக்கு ஒரு டெஸ்ட் வச்சிருக்கார். அதை சாதிச்சுக் காட்டி பேர் வாங்கணும். நீ கத்தியதுதான் ட்யூன், நான் சொன்னதுதான் பல்லவி, ஆரம்பி’ என்றார்.
சரியென்று இறங்கினார்கள். “ஐனோவர்.... ஆவலோவா.... என்று கத்தியதற்கு ஏற்ப “வேலை கொடு விஸ்வநாதா” என்று ஆரம்பித்தார்கள். அப்போது எம்.எஸ்.வி. ‘அண்ணே எஸ்டேட் ஓனர்’ பாலையா வயசானவர் தவிர முதலாளி, ரவிச்சந்திரனோ சின்ன வயசுக்காரர், அவரிடம் வேலை பார்க்கும் குமாஸ்தா, தவிர இப்படத்தில் புதுமுகம். வேலை கொடுன்னு கேட்பது மரியாதைக்குறைவா தெரியுதே’ என்று அபிப்பிராயம் சொல்ல, உடனே கண்ணதாசன், “சரி, அப்படீன்னா இப்படி செய்வோம், வேலை கொடு விஸ்வநாதா” என்பதற்கு பதிலாக “விஸ்வநாதன் வேலை வேணும்” என்று துவங்குவோம் என்று சொல்லி மளமளவென மற்ற வரிகளைச் சொல்ல ஆரம்பித்தார்.
காளி என் ரத்தினம் சி.டி.ராஜகாந்தம்
தமிழ்த் திரை உலகில் என். எஸ். கிருஷ்ணன் - டி. ஏ. மதுரம் ஜோடி கொடிகட்டிப் பறந்த காலக்கட்டத்தில், அவர்களுக்கு அடுத்து புகழ்பெற்று விளங்கிய ஜோடி காளி என். ரத்தினம் - சி. டி.ராஜாகந்தம்.
அதன்பின்னர் தப்பா வெங்கடாசலபதி பாகவதரின் தஞ்சை பாலமோகன் அபிநயசித்தி விலாச சபாவில் சேர்ந்தார். அப்பொழுது 12 வயதான ரத்தினத்திற்கு முதலில் பெண் வேடங்கள் வழங்கப்பட்டன. அவரது வேடங்கள் மக்கள் மத்தியில் ரசிக்கப்பட்டதால் பிறகு முக்கிய வேடங்களில் நடிக்க வாய்ப்புகிடைத்தது.
சில ஆண்டுகளில் அந்த கம்பனியின் பெயர் ‘மதுரை ஒரிஜினல் போய்ஸ் கம்பனி’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் பல ஊர்களுக்கு சென்று நாடகங்களை நடத்தினர். அப்பொழுது ‘ராஜ்பார்ட்’ வேடங்களில் ரத்தினம் நடிக்கத் தொடங்கினார்.
அதன் பின்னர் ரத்தினத்திற்கு தொண்டையில் பிரச்சினை ஏற்பட்டது. அதன் காரணமாக நகைச்சுவை வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். அவரது கொமெடி வேடம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கோவலன் நாடகத்தில், காளி வேடம் போட்டு நடித்தார். காளி வேடத்தில் நடிப்பதில் ரத்தினத்திற்கு நிகர்யாரும் இல்லை என்று பலரும் போற்றியதால், ‘காளி என். ரத்தினமானார்.
ஒரிஜினல் போய்ஸ் கம்பனி நடத்திய நாடகங்களில் ‘பரிபக்தி’ நாடகம் மிகவும் புகழ்பெற்றது. இந்த நாடகம் சினிமா படமாகத் தயாரிக்கப்பட்டு 1936ல் வெளிவந்து வெற்றிபெற்றது. இதில், ‘துப்பறியும் சந்தான் கிருஷ்ணன்’ என்ற வேடத்தில் காளி என். ரத்தினம் நடித்தார்.
(என். எஸ். கிருஷ்ணனும், காளி என். ரத்தினமும் சம காலத்தவர்கள். என். எஸ். கிருஷ்ணன் நடித்த முதல் படம். ‘மேனகா’. இது 1935ல் வெளிவந்தது. 1936 ல் வெளிவந்த ‘வசந்தசேனா’ படத்தில் டி. என். மதுரம் ஜோடி சேர்ந்தார்.)
சந்திரகாந்தா 1936 ல் துப்பறியும் கதைகள் எழுதுவதில் புகழ்பெற்றிருந்த ஜே. ஆர். ரங்கராஜு எழுதிய ‘சந்திரகாந்தா’ என்ற படத்தை ஜுபிடர் பிக்சர்சார் படமாகத் தயாரித்தனர். இதில் போலி மடாதிபதியாக (பிரதான பாத்திரத்தில்) காளி என். ரத்தினம் நடித்தார்.
படம் வெற்றி பெற்றது. காளி என். ரத்தினம் பெரும் புகழ் பெற்றார். இந்தப் படத்தில் பி. யு. சின்னப்பா சுண்டூர் இளவரசன் என்ற சிறிய வேடத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் காளி என். ரத்தினத்தை நஷனல் மூவிடோன் ஒரு ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்தனர்.
ராஜமோகன், பஞ்சாப்கேசரி ஆகிய படங்களில் நடித்தார். பின்னர் மாத்ருபூமி, பாண்டுரங்கா, ரம்பையின் காதல் போன்ற படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்து புகழ்பெற்றார்.
மொடர்ன் தியேட்டர்சார் 1940 ல் ‘உத்தம புத்திரன்’ படத்தைத் தயாரித்தனர். இதில் பி. யு. சின்னப்பா இரட்டை வேடங்களில் நடித்துப் புகழ் பெற்றார். இந்தப் படத்தில்தான், காளி என். ரத்தினத்துடன் சி. டி. ராஜகாந்தம் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்தார்.
அதன்பின் மொடர்ன் தியேட்டர்சாரின் பெரும்பாலான படங்களில் இந்த ஜோடி நகைச்சுவை விருந்தளித்தது ‘ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி’, ‘போஜன்’, ‘பர்மா ராணி’ முதலான படங்களில் இவர்கள் நகைச்சுவை பிரமாதமாக அமைந்தது.
ஏவ். மெய்யப்ப செட்டியார் தயாரித்த ‘சபாபதி’ படத்தில், காளி என். ரத்தினம் அசட்டு வேலைக்காரனாக பிரமாதமாக நடித்து பெரும் புகழ் பெற்றார்.
சி. டி. ராஜகாந்தத்தின் சொந்த ஊர் கோவை. பெற்றோர் திரவியம் ஆசாரியார் - மருதாயி. 1917 ஜனவரி 5 ஆம் திகதி பிறந்தார். ராஜகாந்தத்தின் 20 வது வயதில் திருமணம் நடந்தது. கணவர் பெயர் அப்புக்குட்டி.
ராஜகாந்தம் தன் வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டார். அங்கு நடிகை எஸ்..ஆர். ஜானகி குடிவந்தார். ராஜகாந்தத்தின் துடிப்பான பேச்சைக் கண்ட அவர், ‘இந்தப் பெண் நாடகத்தில் நடித்தால், பெரிய நடிகையாகி விடுவாள்’ என்று நினைத்தார்.
ராஜகாந்தத்தின் தாயாரிடம் பேசி, அனுமதி பெற்றார். அதன்பின் ராஜகாந்தம் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
நாடகங்களில் நடித்து வந்த ராஜகாந்தம், 1939ல் மொடர்ன் தியேட்டர்சாரும் சேலம் ஸ்ரீகிருஷ்ணா பிலிம்சாரும் இணைந்து தயாரித்த ‘மாணிக்க வாசகர்’ படத்தில் முதன் முதலாக நடித்தார். அதன்பின் மொடர்ன் தியேட்டர்சார் தயாரித்த ‘சத்தியவாணி’ படத்தில் நகைச்சுவை வேடத்தில் சிறப்பாக நடித்தார். அதைப் பார்த்துவிட்டுத்தான், காளி என். ரத்தினம் தனது படங்களில் ராஜகாந்தத்தை ஜோடியாக நடிக்க வைத்தார்.
எம். ஜி. ஆர். திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி முயற்சி செய்து கொண்டிருந்த காலத்தில், அவருக்கு உதவியவர் காளி என். ரத்தினம். அதன் காரணமாக, காளி என். ரத்தினத்திடமும், சி. டி. ராஜகாந்தத்திடமும் மிகுந்த அன்பும், மதிப்பும் வைத்திருந்தார். எம். ஜி. ஆர்.
காளி என். ரத்தினம் புகழோடு இருந்தபோதே காலமாகி விட்டார். அதன்பின் சி. டி. ராஜகாந்தம் தனியாகவும் சில படங்களில் நடித்தார். வில்லி வேடங்களிலும் அவர் திறமையாக நடித்தார்.
என். எஸ். கிருஷ்ணன் - டி. ஏ. மதுரம் ஜோடியைப் போல, காளி என். ரத்தினமும் ராஜகாந்தமும் சொந்தக் குரலில் பாடியது குறிப்பிடத்தக்கது.
போதையில் மிதந்த மேதையின் பாடல்கள்
கவிஞர் கண்ணதாசம் பற்றி அவரது புலமை பற்றி அவரது தத்துவம் பற்றி சொல்வதென்றால் விடிய விடிய யுகம்யுகமாக பேசலாம். அத்தனை பெருமை வாய்ந்தது. அவரது கவித்துவம்.அவர் வசன கர்த்தாவாக, கதாசிரியராக, படத் தயாரிப்பாளராக, நடிகராக சினிமா உலகிலே பல பரிமாணங்களில் சஞ்சரித்த போதிலும் பாடலாசிரியர் என்ற பாத்திரம் தான் மக்கள் உள்ளங்களில் அவரை நிரந்தரமாக்கியது.
அவர் இயற்றிய பாடல்களில் மிகவும் குறுகிய நேரத்தில் அதாவது பத்தேபத்து நிமிடங்களுக்குள் எழுதி முடித்த பாடல் ‘முத்தான முத்தல்லவோ’ என்ற பாடலாகும்.
நீண்ட காலம் அதாவது பல நாள் சிந்தனையை செலவிட வேண்டி ஏற்பட்ட பாடல் ‘நெஞ்சம் மறக்கவில்லை அது நினைவை இழக்கவில்லை’ என்ற பாடலாம்.
கவிஞர் பாடல் வரிகளைக் கூறும் போது வேட்டியின் ஒரு நுனியைக் கையில் ஏந்தியவாறு அறைக்குள் நடந்த வண்ணமே சொல்லுவாராம். பாடல் வரிகளைக் கூறும் போது அவர் செருப்பு அணிய மாட்டாராம். மதம், தத்துவம், காதல், காமம், அரசியல், சோதிடம் போன்ற துறைகளில் பெருமளவு நூல்களை எழுதியுள்ள இவரிடம், ஒருமுறை நீங்கள் எழுதிய நூல்களைப் படிக்கும் வாசகர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன? என்று கேட்கப்பட்ட போது அவர் ‘நூலைப் பின்பற்றுங்கள் ஆனால் நூலாசிரியரைப் பின் பற்றாதீர்கள்’ என்று பதில் சொன்னாராம்.
தென் இந்தியாவின் சிறுகூடல்பட்டி ஊரிலே பிறந்த இவர் அமெரிக்க நாட்டின் சிக்காக்கோ நகருக்கு வைத்திய சிகிச்சை பெறச் சென்றிருந்த போது அங்கு வைத்தே உயிர் நீத்தார்.
அவர் சிகிச்சைபெறச் சென்றிருந்த சமயத்தில் அங்கு வாழும் இந்தியக் குழந்தைகளைச் சந்தித்த போது அவருக்கு பெரும் ஆதங்கம் ஏற்பட்டதாம். அதற்குக் காரணம் தமிழ்க் குழந்தைகள் தமிழ் மொழியில் பேசாமையாம் இதைக் கண்டு வேதனையில் எழுதிய கவிதை வரிகளே அவரது வாழ்க்கையில் எழுதிய இறுதி நான்கு வரிகள்.
மனதனில் ஒன்றுபட்டு சேர்ந்திடுவீர் - இங்கு
மழலைகள் தமிழ் பேசச் செய்திடுவீர்
தமக்கெனக் கொண்டு வந்ததேதுமில்லை -பெற்ற
தமிழையும் விட்டு விட்டால் வாழ்க்கையில்லை
என்பது தான் அந்த வரிகள் தமிழ் மீது கவிஞர் கொண்டிருந்த பற்றுக்கு இதுவும் ஒரு சான்று. தொட்டில் முதல் சுடுகாடு வரையிலான தத்துவங்களைப் பொதித்த - வாழ்க்கையின் வளைவுகளை நெளிவுகளை கழிவுகளை வார்த்தைகளில் வடித்த காலத்தால் அழியாக கவிஞரை இனி என்று காண்போம்.
No comments:
Post a Comment