எம்.கே. தியாகராஜ பாகவதருடைய "புதுவாழ்வு' படத்திற்கு ஒரு நகைச்சுவைப் பாடல் எழுதுவதற்காக கலைவாணர் என்.எஸ்.கே. வீட்டிற்கு மருதகாசியையும் இசையமைப்பாளர் ஜி. ராமநாதனையும் அழைத்துச் சென்றார்கள். அந்தப் படத்தில் என்.எஸ்.கே.யும் டி.ஏ. மதுரமும் பாடுகின்ற பாடல் அது என்பதால் என்.எஸ்.கே.யின் ஒப்புதலைப் பெறுவதற்காகக் கூட்டிச் சென்றார்கள்.
அப்போதுதான் முதல்முறையாக என்.எஸ்.கே.யின் அறிமுகம் மருதகாசிக்குக் கிடைக்கிறது. மருதகாசியிடம் என்.எஸ்.கே. "எனக்கு இதுவரை உடுமலையாரும் கே.பி. காமாட்சி சுந்தரமும்தான் பாடல் எழுதியிருக்கிறார்கள். ஒரே ஒரு பாடலை சந்தானகிருஷ்ண நாயுடு மட்டும் எழுதியிருக்கிறார். நீங்கள் எழுதுகின்ற பாடல் எனக்குப் பிடித்திருந்தால் வைத்துக் கொள்வேன். இல்லையென்றால் உடுமலையாரைத்தான் அழைக்க வேண்டியிருக்கும். அப்படி நடந்தால் அதற்காக நீங்கள் வருத்தப்படக்கூடாது. அதற்குச் சம்மதமானால் எழுதுங்கள்'' என்று சொல்லியிருக்கிறார்.
மருதகாசி அதைச் சவாலாக எடுத்துக்கொண்டு, "காட்சி என்ன? அதைச் சொல்லுங்கள்'' என்றிருக்கிறார்.
"ஒரு குருவிக்காரனும் குருவிக்காரியும் தனித்தனியாக வியாபாரத்திற்குச் சென்றுவிட்டு தங்கள் குடிசைக்குத் திரும்புகிறார்கள். அப்போது குருவிக்காரன், குருவிக்காரி இருந்த தோற்றத்தைப் பார்த்து சந்தேகத்தோடு சில கேள்விகள் கேட்கிறான் அவளும் பதில் சொல்லிக் கொண்டு வருகிறாள்.
முடிவில் ஒரு உண்மையைச் சொல்கிறாள். அதாவது ஒரு காலிப்பயல் தன்னைக் கையைப் பிடித்து இழுத்ததாகவும் அதனால் ஏற்பட்ட சண்டையில் கைவளையல் உடைந்ததாகவும் சொல்கிறாள். உடனே கோபத்துடன் அவனுக்குப் புத்தி புகட்டப் போவதாகச் சொல்லி அவளையும் அழைத்துக் கொண்டு வெளியே வருகிறான். இதுதான் காட்சி'' என்று என்.எஸ்.கே. விளக்கியிருக்கிறார்.
"இது மிகவும் எளிதாயிற்றே. குற்றாலக் குறவஞ்சியில் வருகிற சிங்கன் சிங்கி கதைதானே!'' என்று மருதகாசி சொல்ல "ஓ, உங்களுக்கு இலக்கியப் பயிற்சி உண்டா?'' என்றார் என்.எஸ்.கே."தனக்கு இலக்கியப் பயிற்சியளித்தவர்
பாபநாசம் ராஜகோபாலய்யர்' என்றும் "தனது மானசீக குரு உடுமலை நாராயணகவி'யென்றும் "ராமநாடகக் கீர்த்தனை எழுதிய சீர்காழி அருணாசலக் கவிராயர், நந்தனார் சரித்திரம் எழுதிய கோபாலகிருஷ்ண பாரதியார், சர்வமத சமரசக் கீர்த்தனைகள் எழுதிய மாயூரம் முன்சீப் வேத நாயகம்பிள்ளை, பாபநாசம் சிவன், நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் இவர்களெல்லாம் என் வழிகாட்டிகள்' என்றும் மருதகாசி சொல்லியிருக்கிறார்.
உடனே என்.எஸ்.கே. அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டு "உடுமலையார் இருக்கும் இதயத்தில் உங்களுக்குப் பாதியைக் கொடுத்துவிட்டேன். நீங்கள் நன்றாக வளருவீர்கள்'' என்று வாழ்த்தினார். மறுநாள் அந்தப் பாடலை எழுதிக்கொண்டு மருதகாசி என்.எஸ்.கே.யைச் சந்தித்துப் பாடிக் காட்டினார். அவரும் பரவசப்பட்டார்.
ஆனால் அந்தப் படத்தில் அந்தப் பாடல் இடம் பெறவில்லை. அதை என்.எஸ்.கேயும் பாடவில்லை. 1955இல் வெளிவந்த "முல்லைவனம்' என்ற படத்தில் அந்தப் பாடல் இடம் பெற்றது. அது இதுதான்.
ஆண் : சீனத்து ரவிக்கை மேலே
சேலம்பட்டு ஜரிகைச் சேலை
ஓரங்கிழிஞ்ச தென்னடி - என் குருவிக்காரி
உண்மையைச் சொல்லிப் போடடி
பெண் : பானையை எறக்க நானும்
பரணை மேலே ஏறும்போது
ஆணிமாட்டிக் கிழிஞ்சு போச்சுடா
என் குருவிக்காரா
அவநம்பிக்கை கொள்ள வேணாண்டா
ஆண் : சீவிச் சிணுக்கெடுத்து
சிங்காரிச்சுப் பூவும் வச்சு
கோயிலுக்குத் தானே போனே - என் குருவிக்காரி
கூந்தல் கலைஞ்ச தென்னடி
பெண் : கோயிலுக்குப் போயி நானும்
கும்பிட்டதும் என் மேலே
சாமிவந்து ஆடினதாலே - என் குருவிக்காரா
கூந்தல் கலைஞ்சு போச்சுடா -
இப்படிப் போகும் அந்தப் பாடல்
No comments:
Post a Comment