1976ஆம் ஆண்டு. இலங்கையில் ஒரு தமிழ் இளைஞரிடம் சிறு தொகைப்பணம் இருந்தது. மூன்று இலட்சம் ரூபா அளவு பணம் அது. அந்த இளைஞர் கொழும்பில் ஒரு ஹோட்டல் கட்டலாமா என்று எண்ணிக்கொண்டிருந்தார். இவருக்கு ஒரு மைத்துனர் இருந்தார். அவர் புகழ்பெற்ற எழுத்தாளர், வானெலி அறிவிப்பாளர், பெயர் பெற்ற விளம்பர நிர்வாகி, இவருக்கும் தமிழ்ப் படம் தயாரிக்க வேண்டுமென்று நீண்ட நாள் ஆசை.
இளைஞரும் மைத்துனரும் ஒருநாள் சந்தித்துக்கொண்டார்கள். மைத்துனர் ஒரு தமிழ்ப்படம் தயாரிக்கலாம் என்று ‘ஐடியா’ கொடுத்தார். இளைஞருக்கும் ஆசை வந்துவிட்டது. சர்வதேசத் தரத்துக்கு ஒரு தமிழ்ப் படம் தயாரித்தால் அதை வெளிநாடுகளுக்கு விற்றே அதிக பணமும் புகழும் பெறலாம் என்று ஆசைப்பட்டார் இளைஞர்.
ஒரு தரமான தமிழ்ப்படம் தயாரிக்க வேண்டும் என்ற முடிவுக்கு இருவரும் வந்தார்கள். அந்த இளைஞரின் பெயர்தான் காவலூர் ராஜதுரை. அவர்கள் இருவரும் தயாரித்த படத்தின் பெயர்தான் ‘பொன்மணி’
‘பொன்மணி’ இலங்கையில் அதிக தினங்கள் ஓடாவிட்டாலும் அதீத பெயர் பெற்ற படம்.
இலங்கை ரூபாவாஹினியில்முதன் முதலில் காட்டப்பட்ட இலங்கைத் தமிழ்ப்படம் ‘பொன்மணி’ . 9.5.84இல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது.
அப்பொழுது வெளிவந்து கொண்டிருந்த ‘சிந்தாமணி’யில் ‘சஞ்சயன்’ பின்வருமாறு எழுதினார். ‘இலங்கைப் படமான’ பொன்மணியைப் பார்க்கும் வாய்ப்பு 21.3.85 இல் ரூபவாஹினி ரசிகர்களுக்குக் கிடைத்தது. இலங்கைப் படந்தானே என்று முன்பு சலித்துக்கொண்டவர்கள் கூட, பின்பு ‘பரவாயில்லை படம் நன்றாகவே இருக்கிறது’ என்று கூறக்கேட்டபோது ஈழத்துத் தமிழ் ரசிகர்களின் ரசனையில் எவ்வளவோ முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை உணரமுடிகிறது. இப்படம் பல வருடங்களுக்கு முன் இலங்கையில் தயாரிக்கப்பட்டது. வெளிப்புறக் காட்சிகள் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்டன. தென்னிந்தியப் படங்களின் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த கால கட்டத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட துணிகர முயற்சி தொழில் நுட்பத் துறையில் முன்னேறியிருந்த தமிழ்நாட்டுப் படங்களின் முன்னே அன்று ‘பொன்மணி’ எடுபடவில்லை.
தமிழ்நாட்டுப் பாரதிராஜா, பாக்கியராஜாக்கள் தரும் இப்போதைய பாணியை என்றோ ‘பொன்மணி’ மூலம் தந்துவிட்டார் ஈழத்துப் பத்திராஜா…. தமிழகத்திலிருந்து புதுமைப் படைப்புகள் என்று இங்கு வரும் திரைப்படங்களைப் பார்க்கும்பொழுது இப்படங்களுக்கெல்லாம் முன்னோடி ‘பொன்மணி’ என்றே சொல்லவேண்டும்.
….அலைகள் ஓய்வதில்லை படத்தில் ஜாதி, மதம் இரண்டையுமே காதலுக்காக அறுத்தெறிந்து வெற்றிபெறும் இளம் ஜோடியைக் கண்டோம். ‘பொன்மணி’யிலோ ஜாதி, மத வெறிக்குப் பொன்மணி பலியாவதன் மூலம் ஜாதி, மத வெறியர்கள் வெற்றிபெறுவதைக் கண்டோம்…’
இவ்வாறு ‘பொன்மணி’யின் மையக் கருத்து அமைந்திருந்தது. எது எப்படியாயினும் இப்படியான புதுமைப்படைப்பு உருவாகக் காரணமாயிருந்த காவலூர் ராஜதுரையும் முத்தையா ராஜசிங்கமும் பாராட்டுக்குரியவர்களே.
No comments:
Post a Comment