ஒருகாலத்தில் நாடகத் துறையிலும் சரி, சினிமாத் துறையிலும் சரி பண வசதி படைத்தவர்களாக இருவர் மட்டுமே திகழ்ந்தனர். ஒருவர் ஸ்ரீசங்கர். மற்றவர் உதயகுமார். ஸ்ரீசங்கர் வெளிநாட்டுக்கு தேயிலை ஏற்றுமதி செய்யும் ஒரு பிரபலமான கம்பனி ஒன்றின் தேயிலை பரிசோதகராக பணியாற்றி வந்தார். அந்நாளில் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்றியவர். உதயகுமார்., வெளிநாட்டில் இருந்து வரும் கப்பல்களில் இருந்து பண்டங்களை இறக்குமதி செய்வதை தொழிலாகக் கொண்டவர். உதயகுமார் தான் அணியும் ஆடைகளில் அதிக கவனம் செலுத்துவார். இந்த இருவரும் கலைத்தாகம் நிரம்பிய நல்ல கலைஞர்கள். மஞ்சள் குங்குமம் ஸ்ரீசங்கரின் கடும் முயற்சியால் 1968ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட திரைப்படமாகும். இத்திரைப்படத் தயாரிப்புக்கு ஸ்ரீசங்கருக்கு ஆரம்பம் முதல் இறுதிவரை பெருந்துணையாக நின்றவர் கிங்ஸ்லி எஸ். செல்லையா என்ற புகைப்படக் கலைஞராவார். கிங்ஸ்லி எஸ். செல்லையா கொழும்பு கிங்ஸ்லி தியேட்டரில் ஒபரேட்டராக பணிபுரிந்தவர்.
அகில இலங்கை ரீதியாக நாடக மேடைகளில் பெரும் வெற்றி பெற்ற “மஞ்சள் குங்குமம்” நாடகத்தை திரைப்படமாக்க முடிவு செய்யப்பட்டது.
மஞ்சள் குங்குமம்” திரைப்படத்தை இயக்கும் பொறுப்பு கிங்ஸ்லி எஸ். செல்லையாவின் நண்பரான நடிகர் எம். வி. பாலனிடம் ஒப்படைக்கப்பட்டது. நடிகர் எம். வி. பாலன் சிங்கள சினிமாவில் தனித்துவமான சிறந்த ஹாஸ்ய நடிகர். டாக்சி டிரைவர் நிர்மலா தமிழ் திரைப்படங்களில் நடித்தவர்.
தன்னிடம் ஓப்படைக்கப்பட்ட ‘இயக்குனர்’ பதவியின் பெறுமதியையும் தனது அதிர்ஷ்டத்தையும் உணராமல் அதனை ஹாஸ்யமாகவும் விளையாட்டாகவும் குரங்குக் கை பூமாலையாக அவர் எடுத்துக் கொண்டது துரதிர்ஷ்டவசமானது. அடிக்கடி கதையை மாற்றியமைத்தார். படத்தின் ஹாஸ்ய கதாபாத்திரத்தை தானே ஏற்று நடித்த இயக்குனர் எம். வீ. பாலன் படத்தின் உச்சக் கட்டத்தில் தனது கதாபாத்திரத்தை மாற்றியமைக்கவும் செய்தார். தானே படத்தில் ‘ஹீரோ’ ஆகியதாலும் படத்தின் தயாரிப்பு செலவு அதிகரித்தது.
நடிகர் ஸ்ரீசங்கர் படத்தை முடிக்க முடியாமல் திணறிய போது, கிங்ஸ்லி எஸ். செல்லையாவின் நண்பரான கடுகண்ணாவையில் வசித்த எம். பதுர்தீன், கொழும்பு அம்பாள் கபே உரிமையாளர் ஜீ. நாராயணசாமி, சுந்தரம் ஐயர் போன்றோர் கிங்ஸ்லி எஸ். செல்லையாவின் கடும் முயற்சியினால், இணைத் தயாரிப்பாளர்களானார்கள். நீண்ட நாள் தயாரிப்புக்குப் பின்னர் அளவுக்கதிகமான செலவுகளுடன் காதுக்கினிய எட்டு பாடல்களைக் கொண்ட நல்லதொரு திரைப்படமாக ஆனால் குற்றுயிராகத் திரைக்கு வந்தது.
இக்காலக் கட்டத்தில் ஸ்ரீசங்கர் இந்தியாவில் தயாரான “ராஜ ராஜ சோழன்” திரைப்படத்தில் சிவாஜி கணேசனோடு ஈழத்துப் புலவராக நடித்தார்.
ஸ்ரீசங்கர் நம்மை விட்டுப் பிரிந்து பல வருடங்களாகி இருந்தன.
கலைஞர் ஸ்ரீசங்கரின் 38வது நினைவு தினம் கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு கொழும்பு புறக்கோட்டையில் உள்ள பழைய நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. 38 ஆண்டுகளாக இவரது நினைவு தின நிகழ்வை வருடாந்தம் தவறாது நடத்திவருகின்ற ஸ்ரீசங்கர் நற்பணி மன்றத்தின் தலைவர் வீ.சண்முகராஜா இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். அன்றைய தினம் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டன. எழுத்தாளர் ஏ.எஸ்.எம்.நவாஸ் நிகழ்வை தொகுத்து வழங்கினார். ஊடகவியலாளர் கே. ஈஸ்வரலிங்கமும் இங்கு கலைஞர் ஸ்ரீசங்கரைப் பற்றி உரையாற்றினார்.
No comments:
Post a Comment