Monday, June 25, 2018

தாழையாம் பூ முடிச்சு.. தடம் பார்த்து நடை நடந்து.. இது யாரை நினைத்து எழுதிய பாடல்?



கவிஞர் கண்ணதாசன் கலையுலகத்திற்கு வழங்கிய பாடல்கள் அனைத்துமே அற்புதம்தான்.
ஆனால் அவற்றில் சில பாடல்கள் தன் குடும்பத்தினரை மையப்படுத்தியும் மனதில் வைத்தும் எழுதினார் என்று கேள்விப்படும்போது கவிஞரின் தன் குடும்பத்தினரிடம் அளவு கடந்த பிரியம் எவ்வளவு வைத்திருந்திருக்கிறார் என்பது புலப்படுகிறது.
கண்ணதாசனின் மூத்த மகள் அலமேலு கண்ணதாசன் அதை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். படியுங்கள் வாசகர்களே.


பூ முடிப்பாள்.. இந்த பூங்குழலி நான் மூத்த பெண் என்பதால் என் மேல ரொம்ப பாசமா இருப்பாரு. என்னை டொக்டராக்கனும்னு அப்பா ரொம்ப ஆசைப்பட்டாரு. அது முடியாம போச்சு. எனக்கு கல்யாணம் செய்யறதுக்காக அப்பா மாப்பிள்ளை பாத்துட்டு இருந்தார். அந்த சமயத்தில் எழுதிய பாட்டுதான் "பூ முடிப்பாள்.. இந்த பூங்குழலி" என்ற பாடல். அந்தப் பாட்டை எழுதி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த அப்பா என்னிடம், உனக்கு சீக்கிரமா கல்யாணம் நிச்சயம் ஆயிடும்"ம்மா என்றார். அது மாதிரியே நிச்சயமுமாகி கல்யாணமும் செஞ்சு வைச்சார். எங்களுக்கு நிறைய புத்திமதிகள் சொல்லிக் கொடுப்பார்.

என் பையன் மேல அவ்ளோ ஆசை என் 2-வது பையனுக்கு அவருடைய பேர் வைக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுக்கு அப்பா சொன்னார், "நீ கண்ணதாசன்னு வெச்சுக்கோ. ஆனா கிருஷ்ணர் அடிக்கடி என் கனவில வர்றார். அதனால் நீ கிருஷ்ணா"னுதான் கூப்பிடணும்னு சொன்னார். எவ்வளவு பெரிய கூட்டம் நடந்துட்டு இருந்தாலும் சரி என் பையனைதான் மடிமேல தூக்கி வைச்சிப்பார். அவனுக்கு பத்மா சேஷாத்ரி ஸ்கூல்லகூட அப்பாதான் சீட் வாங்கி கொடுத்தாரு. அவ்வளவு ப்ரியம் அவன்மேல.

தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்து.. வாழை இலை போல வந்த பொன்னம்மா.. என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா"ன்னு ஒரு பாட்டு வருமே.. அது எங்க அம்மாவுக்காகவே எழுதின பாடல். எங்க அம்மா பொன்னம்மா. எங்க அம்மாவுக்காக ஒரு கவிதை கூட எழுதியிருக்காரு. அப்பாவுக்கு எங்க அம்மா சமையல்ன்னா ரொம்ப பிடிக்கும். அதுவும் அம்மா செஞ்ச தக்காளி பச்சடியும் வெல்ல பணியாரத்தையும் ரொம்ப ருசிச்சு சாப்பிடுவார். அது கவிஞரின் கவிதை தொகுப்பில் கூட வெளிவந்திருக்கு. அப்பாவோட அர்த்தமுள்ள இந்து மதம் படிச்சிட்டு என்கிட்டேயே நிறைய பார் பாராட்டுவாங்க. எழுத்தாளர் லட்சுமிகூட என்னிடம் சொன்னாங்க "எப்பவுமே ஒரு எம்.எஸ். விஸ்வநாதன்தான்.. ஒரு சுசிலாதான்.. ஒரு கண்ணதாசன்தான்... ஒரு டி.எம்எஸ்.தான்"னு.



நிறைய பாட்டுக்களை எழுதிட்டு வந்து வீட்டில எங்ககிட்ட அதை பத்தி சொல்லுவார். அம்பிகை அழகு தரிசனம் என்ற பாடல் எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல். அதேபோல கந்தசஷ்டி கவசம் போலவே கிருஷ்ண கவசம் எழுதியிருப்பார் அப்பா. அதுவும் நான் அடிக்கடி விரும்பி படிக்கும் புத்தகம். நாளாம் நாளாம் திருநாளாம், கங்கை கரை தோட்டம் இந்த பாட்டெல்லாம் ரொம்ப விரும்பி அடிக்கடி கேட்பேன். அவர் உயிரோட இருந்திருந்தா இலக்கியங்கள் நிறைய எழுதியிருப்பார். அப்பா இன்னும் கொஞ்ச நாள் உயிருடன் இருந்திருக்கக் கூடாதான்னு அடிக்கடி நினைச்சிப்போம்.

No comments:

Post a Comment