Tuesday, June 26, 2018

முணுமுணுக்கும் பாடல்களை புனைவதே இலட்சியம்



"காலா"வில் வாடி என் தங்க
சிலை பாடலை தந்த உமாதேவி 


நான் நீ நாம் வாழவே உறவே நீ நான் நாம் தோன்றினோம் உயிரே' என 'மெட்ராஸ்' படத்தில் கவிதை எழுத துவங்கி 'நெஞ்சமெல்லாம் வண்ணம் பல வண்ணம் ஆகுதே... கண்களெல்லாம் இன்பம் கூடி கண்ணீர் ஆகுதே... என மாயநதி இன்று மார்பில் வழியுதே... துாய நரையிலும் காதல் மலருதே' என கபாலியில் முத்திரை பதித்து 'வாடி என் தங்க சிலை நீ இல்லாட்டி ஒன்னுமில்லை' என்ற 'காலா' பாடல் மூலம் தமிழ் சினிமா உலகை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்...

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லுாரி உதவி பேராசிரியை, கவிஞர், சினிமா பாடலாசிரியை என பல துறைகளில் சாதித்து வரும் கவிஞர் கு.உமாதேவி. அவருடன் பேசியதில் இருந்து...

செய்யாறு என் சொந்த ஊர். அங்கு இளங்கலை முடித்து சென்னை பல்கலையில் முதுகலை முடித்தேன். எத்திராஜ் கல்லுாரியில் உதவி பேராசிரியையாக பணியை துவக்கினேன். கவிதைகள் எழுதுவது பிடிக்கும். 'திசைகளை பருகியவர்கள்' என்ற என் கவிதை தொகுப்பை பார்த்த இயக்குனர் பா.ரஞ்சித் 2014ல் மெட்ராஸ் படத்திற்கு பாட்டு எழுதி தரும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி 'நான் நீ நாம் வாழவே' என்ற பாடலை எழுதித் தந்தேன். அந்த பாடல் வரவேற்பை பெற மாயா, அறம், கட்டப்பாவை காணோம் என்ற படங்களில் பாடல்கள் எழுத வாய்ப்புகள் கிட்டின.

பின் ரஞ்சித் கபாலி படத்தில் இரு பாடல்கள் எழுத வாய்ப்பு தந்தார். அவை படு 'ஹிட்'டாயின. தற்போது காலாவில் வாடி என் தங்க சிலை நீ இல்லாட்டி ஒன்னுமில்லை பாடல் என்னை உலக அறிய வைத்திருக்கிறது. விஜய்சேதுபதி நடிக்கும் 96, எஸ்.ஜெ.சூர்யாவின் படம் உட்பட பத்து படங்களுக்கு மேல் பாடல் எழுதி வருகிறேன். பிற மொழி கலப்பின்றி துாய தமிழில் பாடல்கள் தருவதில் உறுதியாக இருக்கிறேன்.

கபாலியில் என் இரு பாடல்கள் ஹிட்டான நிலையில் ரஜினியை சந்திக்க முடியவில்லை. காலா படப்பிடிப்பில்தான் சந்திக்க முடிந்தது. வாடி என் தங்க சிலை பாடலை கேட்டு பாராட்டினார். ''பெரிய ஆளா இருப்பீங்க என நினைத்தேன். ஆனால் இந்த சிறிய வயதில் அசத்திட்டீங்க. பாட்டு பிரமாதம்,'' என கையை பிடித்து பாராட்டியது உண்மையில் எனக்கு கிடைத்த பெரிய விருதாக கருதுகிறேன்.

சினிமாவுலகில் பெண் பாடாலசிரியைகள் குறைவு என்பதை நான் ஏற்க மாட்டேன். தாமரை, தமிழச்சி தங்கப்பாண்டியன் போன்ற கவிஞர்கள் உள்ளனர். சங்க காலத்திலும் ஔவை, மாசாத்தியார் என ஏராளமான பெண் கவிஞர்கள் இருந்துள்ளனர்.

கவிதைகள் படைப்பில் பெண்களுக்கு தனி இடமுண்டு. மக்கள் விரும்பும் முணுமுணுக்கும் பாடல்களை வரும் காலங்களில் தர வேண்டும் என்பதே இலட்சியம் என்றார்.

No comments:

Post a Comment