Tuesday, November 12, 2013

பாலு அன்று பறக்கவிட்ட பாட்டுக்கொடி இன்றும் பாட்டொளி வீசி பறக்கிறது

சோதனைகளைச் சந்தித்து துவண்டுவிடாமல் போராடி வெற்றி பெறுபவர்கள் மட்டுமே சாதனைகள் பலவற்றைச் செய்கிறார்கள்.
இது சரித்திரம். நமக்குச் சொல்லும் உண்மை. இந்த உண்மை சினிமா உலகத்திற்கு அதிகமாகப் பொருந்தும் திறமையிருந்தும் வாய்ப்பில்லாத ஏராளமானவர்கள் நம்பிக்கையுடன் போராடும் இடம் சினிமா உலகம். காரணம், என்றாவது முன்னுக்கு வந்தால் பணத்தோடு புகழும் கிடைக்கும். இதைக் கனவுத் தொழிற்சாலை என்று பலரும் அழைக்கிறார்கள்.
சினிமா உலகில் வெற்றி பெற்று நிலைத்து நிற்பவர்களின் சரித்திரத்தைப் பார்த்தால் அது நம்பிக்கையில் வாழும் தொழிற்சாலை என்பது புரியும். என்றாவது ஒருநாள் சினிமா உலகின் சரித்திரத்தில் நாம் இடம்பெறுவோம் என்ற நம்பிக்கையோடு சோதனைகளையும், வேதனைகளையும் தாங்கிக் கொண்டு சினிமா உலகில் வளைய வருபவர்கள் இன்றும் பலர் உண்டு. இது போன்ற சோதனைகள் பலவற்றைச் சந்தித்த அனுபவம் எஸ். பி. பிக்கு உண்டு. அதில் ஒரு மிகப் பெரிய சோதனைதான் தெலுங்குப்பட உலகில் ஏற்பட்டது.
நடிகர் கிருஷ்ணாவைச் சந்தித்ததிலிருந்து புத்துணர்ச்சி பெற்ற பாலு என். டி. ஆர். ஏ. என். ஆர். ஆகியோருக்குப் பாட வேண்டும் என்று முடிவெடுத்தார். அதே நேரத்தில் மாபெரும் இசை மேதை கண்டசாலா மாதிரி பாடவும் அவருடைய மனம் இடம் தரவில்லை. தன் குரலிலேயே என்.டி. ஆர். ஏ. என். ஆர். ஆகியோருக்குப் பொருந்தும் மாதிரி பாட முடிவெடுத்தார் பாலு.
ஏ. என். ஆர். என். டி ஆர். நடித்த படங்களை, சமயம் கிடைக்கும் போதெல்லாம் பார்க்க ஆரம்பித்தார் பாலு. இரு பெரும் நடிகர்களும் ஒரு குறிப்பிட்ட டைமிங்கில் பேசுவதைக் கவனித்தார்.
நடிப்புத் துறையில் எல்லாவற்றுக்கும் ஷ¤ட்டிங்கிற்கும் டைமிங்குந்தான் முக்கியம். சண்டைக் காட்சிகளில் அடிபடாமலே சண்டை போட டைமிங் முக்கியம். இதே மாதிரி பாடல் காட்சிகளில் பின்னணிக் குரலுக்கேற்ப வாயை அசைக்க டைமிங் தேவை. எல்லாத் துறைகளிலும் டைமிங் இல்லாமல் இருக்க முடியாது. சினிமாத்துறையில் வெற்றிபெற டைமிங்கோடு நல்ல டைமும் தேவை.
பாலுவின் எண்ணத்திற்கு ஏற்ற மாதிரி ஒரு பாடல் காட்சியும் வந்தது. அவர் அந்த இயக்குநரிடம் தன் எண்ணத்தைக் கூறி சம்மதம் வாங்கி, பாடலைப் பாடினார். பாடல் அமோகமாக வெற்றி பெற்றது. பார்த்தவர்கள் பாலு பாடுவதாகவே நினைக்கவில்லை. ஏதோ நாகேஸ்வரராவ் பாடுவதாகவே நினைத்தார்கள். இன்றளவும் பாலு ஏ. என். ஆர். அவருடைய மகன். எல்லோருக்கும் பாடி வருகிறார். இது தனக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று கருதுகிறார். அன்று பறக்கவிட்ட பாலுவின் பாட்டுக்கொடி இன்றும் பட்டொளி வீசிப் பறந்து கொண்டுதான் இருக்கிறது.
தெலுங்குப் பட உலகைப் பிடித்த பாலு தன் பார்வையை தமிழ்ப்பட உலகை நோக்கித் திருப்பினார்.

No comments:

Post a Comment